மின்வாரிய ஊழியருக்கு சரமாரி கத்திக்குத்து... மணப்பாறையை அதிரவைத்த சிசிடிவி காட்சிகள்!
ஜேசுராஜ் தர வேண்டியதாக கூறப்பட்ட ரூ.8 லட்சத்தை வேளாங்கண்ணி நீதிமன்றத்தின் மூலம் பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.கடந்த 5 ஆண்டுகளாக இருவரும் எந்தவித தொடர்பும் இல்லாமல் இருந்து வந்துள்ளனர்.

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான நீண்டகால பிரச்சனையின் பின்னணியில், மின்வாரிய ஊழியர் ஒருவர் பொதுமக்கள் முன்னிலையில் சரமாரியாக கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
5 ஆண்டுகளாக நீடித்த பணப் பிரச்சனை
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கல்பாளையத்தான்பட்டியைச் சேர்ந்த ஜேசுராஜ் (44), மருங்காபுரி மின்சார வாரியத்தில் கணக்கீட்டு ஆய்வாளராக (Assessment Inspector) பணியாற்றி வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வேளாங்கண்ணி என்ற மூக்கன் (46) என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக நீண்டகாலமாக கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்ற நிலையில், ஜேசுராஜ் தர வேண்டியதாக கூறப்பட்ட ரூ.8 லட்சத்தை வேளாங்கண்ணி நீதிமன்றத்தின் மூலம் பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் கடந்த ஐந்து ஆண்டுகளாக இருவரும் எந்தவித தொடர்பும் இல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், பணத்துடன் சேர்த்து வட்டித் தொகையையும் வழங்க வேண்டும் என்று வேளாங்கண்ணி தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாகவும், இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் நிலவி வந்ததாகவும் கூறப்படுகிறது.
வேலைக்கு செல்லும் நேரத்தில் திடீர் தாக்குதல்
இந்த நிலையில்,கடந்த திங்கள்கிழமை காலை வழக்கம்போல் ஜேசுராஜ் வேலைக்கு செல்வதற்காக கல்பாளையத்தான்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே தனது இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த வேளாங்கண்ணி தனது கையில் மறைத்து வைத்திருந்த கத்தியை திடீரென எடுத்து, ஜேசுராஜின் முதுகு, வயிறு, கை மற்றும் நெஞ்சு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தி உள்ளார். இந்த திடீர் தாக்குதலால் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தவர்கள் வேளாங்கண்ணியை மடக்கிப் பிடித்து தாக்குதலை தடுத்தனர்.
இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை
பலத்த காயமடைந்த ஜேசுராஜ், ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு முதற்கட்ட சிகிச்சைக்குப் பிறகு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மறுபுறம், தாக்குதல் நடத்திய வேளாங்கண்ணியை பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்ததால், மணப்பாறை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
அதிர்ச்சியை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்
இந்த சம்பவம் குறித்து மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், ஜேசுராஜ் தனது இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தபோது, பின்னால் அமைதியாக வந்த வேளாங்கண்ணி திடீரென கத்தியால் தாக்கும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. இந்த வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இந்த சம்பவம், பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள் எவ்வாறு உயிருக்கு ஆபத்தான வன்முறையாக மாறுகின்றன என்பதற்கு மற்றொரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. சம்பவத்தின் முழு பின்னணி மற்றும் தாக்குதலுக்கான உண்மையான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ட்ரெண்டிங் செய்திகள்






















