Thoothukudi Airport : ‘தூத்துக்குடியில் இருந்து வெளிநாட்டிற்கு விமான சேவை எப்போது?’ மத்திய அரசு அளித்த பதில் இதுதான்..!
’தூத்துக்குடி விமான நிலையம் ஆண்டுக்கு 21 லட்சம் பயணிகளை கையாளும் வகையிலும் ஒரு மணி நேரத்திற்கு 1,440 பயணிகள வந்து செல்ல ஏதுவாகவும் கட்டமைக்கப்பட்டுள்ளது’

தமிழ்நாட்டின் வணிக முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களாக திகழும் தென் மாவட்டங்களுக்கென தற்போது மதுரை மற்றும் தூத்துக்குடி ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே விமான நிலையம் அமைக்கப்பட்டிருக்கிறது. மதுரையில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்பட்டிருந்தாலும் முத்து நகரமாக விளங்கும் தூத்துக்குடி விமான நிலையம் உள்நாட்டு விமான சேவைகளை மட்டுமே செய்து வருகிறது. அதுவும் சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு மட்டுமே விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தூத்துக்குடி விமான நிலையத்தை தரம் உயர்த்தி மும்பை, டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட மெட்ரோ நகரங்களுக்கும் விமான சேவைகளை இயக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக தென் மாவட்ட மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், தூத்துக்குடி விமான நிலையம் மற்றும் விமான சேவை தொடர்பாக மத்திய விமான போக்குவரத்துத் துறை ஒரு விளக்கம் அளித்துள்ளது.
அதிமுகவின் இன்பதுரை எழுப்பிய கேள்விகள்
அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் இன்பதுரை நாடாளுமன்றத்தில் தூத்துக்குடி விமான நிலையம் தொடர்பாக கேள்விகளை எழுப்பியிருந்தார். அதில், தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானங்கள் குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டுமே இயக்கப்படுவதாக கூறப்படுவது உண்மையா ? தூத்துக்குடி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்து, பெரிய ரக விமானங்கள் இங்கிருந்து புறப்படும் சூழலை ஏற்படுத்த மத்திய அரசிடம் ஏதும் திட்டம் உள்ளதா ? ஹைதராபாத், மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் விமானங்களை தூத்துக்குடியில் இருந்தும் அங்கிருந்து தூத்துக்குடி விமான நிலையத்திற்கு இயக்கும் திட்டம் ஏதும் இருக்கிறதா எனவும் கேள்விகளை அவர் எழுப்பியிருந்தார்.
தூத்துக்குடி விமான நிலையம் குறித்து மத்திய அரசு சொன்னது என்ன ?
அதற்கு பதில் அளித்திருக்கும் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம், தற்போது தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து ஏடிஆர் – 72 வகை விமானங்கள் மட்டுமே இயக்கப்படுவதாகவும், இண்டிகோ நிறுவனம் மட்டும் தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னை மற்றும் பெங்களூருவிற்கு வாரத்திற்கு 70 விமான சேவைகளை இயக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், தூத்துக்குடி விமான நிலையம் ஆண்டுக்கு 21 லட்சம் பயணிகளை கையாளும் வகையில் புதிய திறன் கொண்ட முனைய கட்டடம் மேம்படுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ள மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர், ஒரு மணி நேரத்திற்கு 1.440 பயணிகள் வந்து செல்ல ஏதுவான கட்டமைப்பும் உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
பெரிய விமானங்கள் இயக்கம் எப்போது ?
குறிப்பாக, பெரிய ரக விமானங்கள் இயக்கப்படுவதற்காக 3 ஆயிரத்து 115 மீட்டர் நீளமும், 45 மீட்டர் அகலமும் கொண்ட ஓடுபாதை அமைக்கப்பட்டுள்ளதாகவும், தூத்துக்குடி விமான நிலையத்தில் இரவு நேர விமானங்கள் சேவையும் தொடக்கப்பட்டிருப்பதாகவும் அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், 1994ஆம் ஆண்டு உள்நாட்டு விமானப் போக்குவரத்து துறை தாராளமயமாக்கப்பட்டதிலிருந்து விமான நிறுவனங்கள் தங்களின் செயல்பாடு மற்றும் வணிக ரீதியாக வருவாய் ஈட்டக்கூடிய சாத்தியகூறுகள் அடிப்படையில் எந்த வகை விமானங்களை எந்தெந்த விமான நிலையங்களுக்கு இயக்க வேண்டும் என்ற முடிவை அவர்களே எடுத்து வருவதாகவும், எனவே புதிய விமான சேவைகள் தொடர்புடைய முடிவும், பெரிய விமானங்களை இயக்குவது பற்றிய முடிவும் அந்தத விமான சேவை நிறுவனங்களின் கைகளிலேயே உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Before You Go
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்























