திருச்செந்தூரில் மீண்டும் பக்தர்களை பதம்பார்க்கும் ஜெல்லி மீன்கள் -பாதுகாப்பாக குளியுங்கள்
ஜெல்லி மீன்களால் அரிப்பு ஏற்பட்டவர்களை உடலில் மருந்துகள் தடவி பாதுகாப்பாக குளிக்கவும் அறிவுறுத்தி வருகின்றனர்.

திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் 6 மாதத்திற்கு பிறகு மீண்டும் கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்களால் கடலில் குளிக்கும் பக்தர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். மேலும் திருவிழா நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கோவில் முன்புள்ள கடற்கரையில் புனித நீராடி சுவாமியை வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் தற்போது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

ஆவணி திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் கடலில் புனித நீராடி வருகின்றனர். அந்த சமயத்தில் கடலில் பக்தர்கள் நீராடி கொண்டிருந்த போது உடலில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடற்கரை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்களிடம் கூறினர். இதையடுத்து கடற்கரை பகுதியில் ஆய்வு செய்த பணியாளர்கள் ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்குவதை பார்த்துள்ளனர். இதில் சுமார் 3 கிலோ எடை கொண்ட ஒரு பெரிய ஜெல்லி மீன் கரை ஒதுங்கியது. இதையடுத்து அதை எடுத்து வந்த பணியாளர்கள் கடற்கரை பகுதியில் தோண்டி புதைத்தனர். மேலும் சில சிறிய அளவிலான ஜெல்லி மீன்களை கடலுக்குள் விட்டனர்.

இதற்கிடையில் நேற்று மாலை 4 மணி அளவில் கடலில் குளித்துக் கொண்டிருந்த கோபிசெட்டிப்பாளையத்தைச் சேர்ந்த இளைஞருக்கு இந்த ஜெல்லிமீன் பட்டதில் ஊறல் எடுத்துள்ளது. இதையடுத்து கோவில் வளாகத்தில் உள்ள முதலுதவி மையத்தில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த ஜெல்லி மீன்களால் உடலில் அரிப்பு ஏற்படுவதோடு தோள் நோய் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து ஜெல்லி மீன்களால் அரிப்பு ஏற்பட்டவர்களை உடலில் மருந்துகள் தடவி பாதுகாப்பாக குளிக்கவும் அறிவுறுத்தி வருகின்றனர்.

Before You Go
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















