திமுக கொடி கம்பம் நடும் போது மின்சாரம் தாக்கி இரண்டு தொழிலாளர்கள் பலி
, 30 அடி உயர கொடி கம்பம், உயர் அழுத்த மின்கம்பியை உரசியது. இதில் மின்சாரம் தாக்கியதில், கோகுல் மற்றும் கார்த்தி இருவரும் துாக்கி வீசப்பட்டனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூரில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்க நேற்று கொடி கம்பம் அமைக்கும் பணியில், ஈடுபட்டிருந்த இரண்டு தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி பலியாகினர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டியில் உள்ள திருமண மண்டபத்தில், தி.மு.க.,நிர்வாகி இல்ல திருமண விழா இன்று (6ம் தேதி) நடந்தது. திருமண விழாவில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துக்கொண்டார். முன்னதாக துணை முதல்வர் உதயநிதியை வரவேற்கும் விதமாக, நேற்று ஒப்பந்த அடிப்படையில், பணியாளர்கள் கொடி கம்பம், தோரணம் அமைக்கும் பணியில் நேற்று ஈடுபட்டு இருந்தனர்.
இந்நிலையில், திருமண மண்டபம் அருகே, இரும்பு குழாயில், பொருத்தப்பட்டிருந்த தி.மு.க., கொடியை அமைக்கும் பணியில், சேலம் மாவட்டம் எட்டிக்குட்டை பகுதியை சேர்ந்த கோகுல்(29), சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியை சேர்ந்த கார்த்தி (45), ஆகிய இருவரும் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, 30 அடி உயர கொடி கம்பம், உயர் அழுத்த மின்கம்பியை உரசியது. இதில் மின்சாரம் தாக்கியதில், கோகுல் மற்றும் கார்த்தி இருவரும் துாக்கி வீசப்பட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம், தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே, கோகுல், கார்த்தி இருவரும் இறந்தனர். இது குறித்து தமிழ் பல்கலைக்கழக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கஞ்சா பறிமுதல்... 3 பேர் கைது
தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக நேற்று முன்தினம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தஞ்சை வடக்கு வாசல் ராஜகோரி சுடுகாடு பகுதியில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள் தஞ்சை வடக்கு வாசலை சேர்ந்த சக்திவேல் மகன் சூர்யா (25), முனிசிபல் காலனியை சேர்ந்த முருகேசன் மகன் அருண்குமார் (21), தஞ்சை மாவட்டம் திருவையாறு ஆச்சனூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் மகன் சபரீசன் விஸ்வா (22) ஆகியோர் என்பதும், இவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
இது குறித்து மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 1.94 கிலோ கஞ்சா, 400 போதை மாத்திரைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், 3 செல்போன்கள் உள்ளிட்டவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.






















