மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
தியாகராஜ சுவாமிகளுக்கு இசைக் கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனை இசைத்து இசை அஞ்சலி
திருவையாறில் தியாகராஜ சுவாமிகளுக்கு ஆயிரக்கணக்கான இசைக் கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனை இசைத்து இசை அஞ்சலி
![தியாகராஜ சுவாமிகளுக்கு இசைக் கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனை இசைத்து இசை அஞ்சலி Thousands of musicians pay tribute to Thyagaraja Swami in Thiruvaiyaru by playing Pancharatna Keerthanai TNN தியாகராஜ சுவாமிகளுக்கு இசைக் கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனை இசைத்து இசை அஞ்சலி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/11/d83a1dd6208a1cd6618749d1999a22061673418848448113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பஞ்சரத்ன கீர்த்தனை வைபவம்
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் ஸ்ரீதியாகராஜ சுவாமிகளின் 176 ஆவது ஆராதனை விழா நிறைவு நாளான நேற்று பஞ்சரத்ன கீர்த்தனை வைபவம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான இசைக் கலைஞர்கள் பங்கேற்று தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர்.
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகள் தியாக பிரம்மம் என்று போற்றப்படுகிறார். இவர் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரி கரையில் முக்தி அடைந்தார். இங்கு அவரது சமாதி இருக்கிறது.
ஆண்டுதோறும் இவ்விடத்தில் தியாகராஜர் ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம்.கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் கடந்த வருடம் இரண்டு நாட்கள் மட்டும் ஆராதனை விழா நடந்தது. இந்த ஆண்டு ஆறு நாட்கள் விழாவாக தியாகராஜ சுவாமிகளின் 176வது ஆராதனை விழா கடந்த 6ம் தேதி தொடங்கியது. இதன் நிறைவு விழா நேற்று நடந்தது.
இந்தாண்டு விழாவை தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் கடந்த 6ம் தேதி மாலை தொடங்கி வைத்தார். இதையடுத்து தினமும் காலை 9 மணி முதல் இரவு 10.20 மணி வரை ஏராளமான இசைக் கலைஞர்கள் வாய்ப்பாட்டு மற்றும் இசைக்கருவிகளை இசைத்து சத்குரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகளுக்கு இசை அஞ்சலி செலுத்தினர்.
![தியாகராஜ சுவாமிகளுக்கு இசைக் கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனை இசைத்து இசை அஞ்சலி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/11/4940a9c9421a0acf8fb4eaf97df45bda1673419035895113_original.jpg)
நிறைவு நாளான நேற்று அதிகாலையிலேயே தியாகராஜர் சுவாமி வாழ்ந்த இடத்திலிருந்து, உஞ்ச விருத்தி பஜனை புறப்பட்டது. மேளதாளங்கள் முழங்க, திருமஞ்சன வீதி, தெற்கு வீதி வழியாக சந்நிதியை சென்றடைந்தது. தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி காலை 7.35 மணிக்கு வந்தார். தியாகராஜ ஸ்வாமி சன்னதியில் வழிபாடு நடத்தினார். விழாவிற்கு தியாக பிரம்ம மகோற்சவ சபா தலைவர் ஜி. கே. வாசன் தலைமை வகித்தார். செயலாளர் தவில் வித்வான் அரித்துவாரமங்கலம் ஏ.கே .பழனிவேலு வரவேற்றார். விழாவில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர், காலை 8.30 மணி முதல் 9 மணி வரை நாதஸ்வரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து காலை 9 மணியளவில் பிரபஞ்சம் பாலசந்திரனின் புல்லாங்குழல் இசையுடன் பஞ்சரத்ன கீர்த்தனை தொடங்கியது. தொடக்கத்தில் நாட்டை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'ஜகதாநந்த காரக ஜய ஜானகீ ப்ராண நாயக...' என்ற பாடல் பாடப்பட்டது. பின்னர் கௌளை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'துடுகு கல நந்நே தொர கொடுகு ப்ரோசுரா எந்தோ...' என்ற பாடலும், இறுதியாக ஸ்ரீராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'எந்தரோ மஹாநுபாவுலு அந்தரிகி வந்தநமு...' ஆகிய பாடல்களைப் பாடி அஞ்சலி செலுத்தினர்.
இதில், பிரபல இசைக் கலைஞர்கள் சுதா ரகுநாதன், மஹதி, ஓ.எஸ். அருண், கடலூர் ஜனனி, அரித்துவாரமங்கலம் ஏ.கே. பழனிவேல், ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ், திருவனந்தபுரம் பின்னி கிருஷ்ணகுமார் உள்பட ஆயிரத்துக்கும் அதிகமான இசைக் கலைஞர்கள், ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஒருமித்த குரலில் பாடியும், இசைக் கருவிகளை இசைத்தும் ஸ்ரீதியாகராஜருக்கு அஞ்சலி செலுத்தினர். அப்போது, ஸ்ரீதியாகராஜ சுவாமிகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது.
இதையடுத்து 10.30 மணிக்கு விசாகா ஹரி குழுவினரின் ஹரி கதை, 11 மணிக்கு தாமல் ராமகிருஷ்ணனின் உபன்யாசம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. மேலும் இரவு 10.20 மணி வரை இசை நிகழ்ச்சிகள் நடந்தது. இரவு தியாகராஜ சுவாமிகள் வீதி உலா நடந்தது.
திருவையாறு பஞ்சரத்ன கீர்த்தனை விழாவில் பங்கேற்பதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த பத்தாம் தேதி மாலை தஞ்சாவூருக்கு வருகை புரிந்தார். அவரை மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
கவர்னருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெறுவதால், மணிமண்டபம் ரவுண்டானா, திருச்சி சாலை, சங்கம் ஓட்டல் உள்ளிட்ட பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் உள்பட நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் கண்டியூரில், எஸ்.டி.பி.ஐ., அமைப்பினர், கவர்னருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். இதனால் அப்பகுதியில் அதிகளவில் போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதேபோல் திருவையாறு பகுதியில் எஸ். பி ரவளிப்பிரியா மேற்பார்வையில் ஏடிஎஸ்பி ஜெயச்சந்திரன் தலைமையில் 800க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். விழாவிற்கு வந்த அனைவரையும் போலீசார் தீவிர சோதனை நடத்திய பின்னரே உள்ளே செல்ல அனுமதித்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
கோவை
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion