’சிவனை வழிபட்ட புனுகுப் பூனை’ எங்கே, எதற்கு தெரியுமா..?
புனுகுப்பூனைக்கு இறைவன் அருள்புரிந்தமை அறிந்த பிரம்மன், திருமால், தேவர்கள் அனைவரும் பவழ மல்லிகை நிழலில் சிவபெருமான் அமர்ந்திருந்த இடத்தை வந்தடைந்து பணிந்து துதித்துப் பாடினர்.

தஞ்சாவூர்: புனுகுப் பூனை ஒன்று சிவபெருமானை மயிலாடுதுறைக்கு அருகே கூறைநாடு என்ற தலத்தில் பூஜித்துப் பேறு பெற்றது. இதனாலேயே இத்தலத்து இறைவனுக்கு புனுகீஸ்வரர் என்று வந்ததாக கோயில் ஸ்தல வரலாறு வாயிலாக கூறப்படுகிறது. இந்த கோயில் எங்கு உள்ளது என்று தெரியுங்களா?
மக்களுக்கு மட்டுமில்லை... மிருகங்களுக்கும் இறைவன் அருள் புரிந்த தலங்கள் நிறைய உண்டு. அது போன்ற தலங்கள் இன்றும் பெருமையுடன் விளங்குகிறது. மிருகங்கள் இறைவனைப் பூஜித்து பேறு பெற்ற தலங்கள் பல உண்டு. குறிப்பாக குற்றாலம், திருவானைக்காவல், மதுரை ஆகிய தலங்களில் யானையும், நல்லூரில் சிங்கமும், சாத்தமங்கையில் குதிரையும், கருவூர், பட்டீஸ்வரம, பேரூர் ஆகிய தலங்களில் பசுவும், சிவபுரத்தில் பன்றியும், தென் குரங்காடுதுறை, வடகுரங்காடுதுறை ஆகிய ஊர்களில் குரங்குகளும், சோலூரில் மீனும், திருத்தேவன் குடியில் நண்டும் இறைவனை வேண்டி பேறு பெற்றன.

அதேபோல் புனுகுப் பூனை ஒன்று சிவபெருமானை மயிலாடுதுறைக்கு அருகே கூறைநாடு என்ற தலத்தில் பூஜித்துப் பேறு பெற்றது. இதனாலேயே இத்தலத்து இறைவனுக்கு புனுகீஸ்வரர் என்று வந்ததாக கோயில் ஸ்தல வரலாறு வாயிலாக கூறப்படுகிறது. இக்கோயிலில் அருள்பாலிக்கும் அம்பாளின் பெயர் சாந்த நாயகி. 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில்.
மயிலாடுதுறைக்கு மேற்கே பல நூற்றாண்டுகளுக்கு முன் ஒரு காடு இருந்தது. அரசு, கொங்கு, தேக்கு, அகில், சந்தனம், மூங்கில், நாவல், மா முதலிய மரங்கள் அடர்ந்து வளர்ந்து அது ஒரு அழகிய வனமாகத் திகழ்ந்தது. பறவையினங்களும், விலங்கினங்களும் பகையின்றி அந்தக் காட்டில் வாழ்ந்து வந்தன.
அங்கு தேவர்களும், திருமாலும், பிரம்மனும் வழிபடுவதற்காகவும், உயிரினங்கள் உய்யவும், பவழமல்லிகை நிழலில் லிங்க வடிவில் தானே தோன்றி எழுந்தருளியிருந்தார் சிவபெருமான். அந்த வனத்தில் ஒரு புனுகுப் பூனை, தன் துணையுடனும், குட்டிகளுடனும் வாழ்ந்து வந்தது. அதனிடமிருந்து வெளிப்பட்ட புனுகு வாசனை அந்த வனம் முழுவதும் ரம்மியமாகப் பரவியிருந்தது. திடீரென்று ஒருநாள் அந்தப் புனுகு பூனைக்கு ஞானம் வந்தது. இதுவரை சாதாரணமான செயல்களையே செய்து வாழ்ந்து விட்டோமே! இது என்ன வாழ்க்கை! சிவபெருமானை வணங்கி பேரருளைப் பெற வேண்டும் என்று புனுகு பூனை நினைத்தது.
இதையடுத்து அந்த புனுகு பூனை சிவபெருமானின் லிங்கத் திருமேனியைத் தேடி அலைந்தது. வயல் சூழ்ந்த ஒரு சோலையில் இறைவனின் லிங்கத் திருமேனியைக் கண்டது. மட்டற்ற மகிழ்ச்சி கொண்டு லிங்கத்திருமேனி முழுவதும் புனுகினை அப்பியது. வில்வத் தளிர்களை வாயினால் கவ்வி இறைவனின் முடியில் சாத்தியது. இறைவனை வலம்வந்து வணங்கியது. இப்படியே சிவபெருமானைப் பல நாட்கள் அந்தப் புனுகுப்பூனை வணங்க மனம் மகிழ்ந்த இறைவன் அதற்கு தேவ வடிவைக் கொடுத்து கயிலாயத்திற்கு அழைத்துக்கொண்டார்.
புனுகுப்பூனைக்கு இறைவன் அருள்புரிந்தமை அறிந்த பிரம்மன், திருமால், தேவர்கள் அனைவரும் பவழ மல்லிகை நிழலில் சிவபெருமான் அமர்ந்திருந்த இடத்தை வந்தடைந்து பணிந்து துதித்துப் பாடினர். ‘இவரே புனுகீசர்’ என்று அந்த இறைவனுக்குப் பெயரிட்டு வணங்கினர். சோழ மன்னன் தன் காலத்தில் காட்டுப் பகுதியை அழித்து புனுகீசருக்கு அதே இடத்தில் ஒரு கோயிலை அமைத்தான். இது கோயில் தல வரலாறு ஆகும். புனுகு பூஜை இறைவனை பூஜிக்கும் வடிவத்தை சிற்பமாக இக்கோயிலில் காணலாம். இக்கோயிலில் ஏழு நிலை ராஜ கோபுரமும், உள்ளே நுழைந்ததும் விசாலமான மண்டபம், எதிரே பலிபீடம், உயரமான கொடிமரம். மண்டபத்தின் இடதுபுறம் அன்னை சாந்த நாயகியின் சந்நதி உள்ளது.
அடுத்துள்ள மகாமண்டப நுழைவாயிலில் துவாரபாலகர்கள் காவல் காக்க, இறைவனின் அர்த்த மண்டபம் உள்ளத. கருவறையில் இறைவன் புனுகீஸ்வரர் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார். வெளி பிராகாரத்தின் வடகிழக்கு மூலையில் கலசமண்டபம் உள்ளது. இங்குள்ள சனி பகவான் கிழக்கு திசை நோக்கி தரிசனம் அருள்கிறார். இந்த அமைப்பு அபூர்வமானது. இக்கோயில் வைத்தீஸ்வரன்கோயில் வைத்தியநாத சுவாமி கோயில் போன்ற வடிவமைப்பில் அமைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இங்கு சித்திரை மாதம் நடைபெறும் பிரமோற்சவத்தின்போது 13 நாட்களும் இறைவனும் இறைவியும் வீதியுலா வருவர். 63 நாயன்மார்களின் உற்சவத் திருமேனிகள் கண்களைக் கவரும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.





















