அரசு பள்ளியில் மாணவி உயிரிழப்பு! மாத்திரை தான் காரணமா? தஞ்சையில் பரபரப்பு
Thanjavur : அரசு பள்ளியில் சுகாதாரத்துறை சார்பில் வழங்கப்பட்ட குடற்புழு மாத்திரை நீக்கம் செய்யும் மாத்திரையை 7ம் வகுப்பு மாணவி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பள்ளத்தூர் அரசு பள்ளியில் சுகாதாரத்துறை சார்பில் வழங்கப்பட்ட குடற்புழு மாத்திரை நீக்கம் செய்யும் மாத்திரையை 7ம் வகுப்பு மாணவி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் 2 மாணவிகள் பாதிப்புக்கு உள்ளான நிலையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் சொக்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி பரிமளா. இந்த தம்பதியின் மூன்றாவது மகள் கவிபாலா (12). இவர் பள்ளத்துார் அரசு மேல்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இன்று பள்ளியில் சுகாதாரத்துறை சார்பில், குடற்புழு நீக்கும் (அல்பென்டசோல்) மாத்திரை மாணவர்களுக்கு அழகியநாயகிபுரம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் குழுவினரால் வழங்கப்பட்டுள்ளது.
இந்த மாத்திரையை வாங்கிய மாணவி கவிபாலா மதியம் 12 மணியளவில் சாப்பிட்டுள்ளார். பின்னர் உணவு இடைவேளையின் போது கவிபாலா விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென மயங்கி விழுந்த நிலையில் மூக்கு மற்றும் வாய் வழியாக ரத்தம் வடிந்துள்ளது. இதை பார்த்து சக மாணவ, மாணவிகள் அலறியுள்ளனர்.
உடனடியாக ஆசிரியர் துரைசிங்கம் மற்றும் வீரமணி ஆகியோர் கவிபாலாவை அழகியநாயகிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக காரில் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதனால் மாணவி கவிபாலாவை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு மாணவி கவிபாலாவை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்துவிட்டு அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இறந்த மாணவியின் உடல் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மாத்திரை சாப்பிட்ட, புக்கரம்பையை சேர்ந்த சக்திவேல் என்பவரின் மகள் 10ம் வகுப்பு மாணவி தியா (15), ஆண்டிக்காடு பகுதியை சேர்ந்த சின்னப்பன் என்பவரின் மகள் 11ம் வகுப்பு மாணவி சகாயமேரி (16), இருவருக்கும் மயக்கம் ஏற்பட்ட நிலையில், அழகியநாயகிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்தகவல் அறிந்தவுடன் சிகிச்சை பெற்று வரும் மாணவிகளை பேராவூரணி எம்.எல்.ஏ., அசோக்குமார் உடனடியாக நேரில் சென்று பார்வையிட்டார்.
இதற்கிடையில் மாணவி கவிபாலாவின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் பட்டுக்கோட்டை சாலையில் திடீரென்று சாலை மறியல் செய்ய தொடங்கினர். பள்ளியில் மாத்திரை வாங்கி சாப்பிட்ட மாணவர்களையும் பரிசோதனை செய்ய வேண்டும். கவிபாலாவின் மரணத்திற்கு மாத்திரை தான் காரணமா என்பதை விசாரித்து தெளிவுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி சாலை மறியலில் தொடர்ந்து ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை ஆர்.டி.ஓ., ஜெயஸ்ரீ, தாசில்தார் சுகுமாறன், டி.எஸ்.பி., ரவிச்சந்திரன், சி.இ.ஓ., அண்ணாதுரை ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனால், அப்பகுதியில் சுமார் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

