சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
நீதிபதி தமிழரசி வழக்கை விசாரித்து, சிவசங்கருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

தஞ்சாவூர்: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை போக்சோ கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கீழஜெயின தெருவை சேர்ந்தவர் சிவசங்கர் (48). இவர் செங்கல் அறுக்கும் தொழில் செய்து வந்தார். கடந்த 2021-ம் ஆண்டு இவர் தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே வெண்ணாற்றங்கரை பகுதியில் செங்கல் அறுக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.
அப்போது 12 வயது சிறுமியை சிவசங்கர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து அழுது கொண்டே சிறுமி தனது தாயிடம் கூறி உள்ளார். இதையடுத்து சிறுமியின் தாய் திருவையாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சத்தியபாமா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவசங்கரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இது தொடர்பான வழக்கு தஞ்சை போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு நீதிபதி தமிழரசி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி தமிழரசி வழக்கை விசாரித்து, சிவசங்கருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
மேலும் அபராதம் கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை விதித்தும் உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.8 லட்சம் அரசு இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சசிரேகா ஆஜராகி வாதாடினார்.





















