படுத்த படுக்கையாக இருந்த சமையல் கலைஞர்... மீண்டும் நடமாட வைத்து தஞ்சை மீனாட்சி மருத்துவமனை சாதனை
நான்கு ஆண்டுகளாக படுத்த படுக்கையிலிருந்த சமையல் கலைஞருக்கு மறு அறுவை சிகிச்சையை திறம்பட செய்து நடமாடும் திறனை மீண்டும் வழங்கி உள்ளது தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை.

தஞ்சாவூர்: நான்கு ஆண்டுகளாக படுத்த படுக்கையிலிருந்த சமையல் கலைஞருக்கு மறு அறுவை சிகிச்சையை திறம்பட செய்து நடமாடும் திறனை மீண்டும் வழங்கி உள்ளது தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை.
இடது தொடையில் எலும்பு முறிவு ஏற்பட்டதற்கு பிறகு பிற மருத்துவமனைகளில் இருமுறை உட்பதிய அறுவைசிகிச்சைகள் செய்த போதிலும் எலும்பு முறிவு சரியாகாததால் நடமாட்டமின்றி படுத்த படுக்கையாக நான்கு ஆண்டுகள் பட்ட அவதியை தஞ்சாவூர்-மீனாட்சி மருத்துவமனையின் எலும்பியல் அறுவைசிகிச்சை நிபுணர்கள் முடிவுக்கு கொண்டு வந்து சமையல் கலைஞரை மீண்டும் நடமாடச் செய்து சாதனை படைத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சமையற்கலைஞரான குமாருக்கு 2018-ம் ஆண்டில் பணிபுரியும் இடத்தில் உயரத்திலிருந்து கீழே விழுந்ததில் இடது தொடை எலும்பில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மனித உடலில் மிக நீளமான மற்றும் வலுவான எலும்பு இதுவே. எலும்பு முறிவை சரிசெய்ய அந்த ஆண்டே அறுவைசிகிச்சையை அவர் செய்து கொண்ட போதிலும் அவரது நிலைமையில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை. ஓராண்டு நடமாட்டமின்றி கடுமையான வலியுடன் அவதிப்பட்ட அவர் வேறொரு மருத்துவமனையில் இரண்டாவது முறையாக தொடை எலும்பு முறிவை சரிசெய்ய உட்பதிய அறுவைசிகிச்சையை செய்து கொண்டிருக்கிறார்.
துரதிர்ஷ்டவசமாக இந்த அறுவைசிகிச்சையிலும் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காமல் அவரது வலியும், துயரமும் தொடர்ந்தன. தோல்வியில் முடிந்த இந்த இரு அறுவைசிகிச்சைகளும் எந்த நிவாரணத்தையும் தராததால் அவரது மனச்சோர்வு பன்மடங்கு அதிகரித்து அவரை முற்றிலுமாக முடக்கிப் போட்டது. எனினும், எப்படியாவது குணமடைய வேண்டுமென்ற மனஉறுதியுடன் சமையல் கலைஞர் குமார், தஞ்சாவூர்-மீனாட்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். பரிசோதனைகளுக்கு பிறகு இவருக்கு ஐந்து மணி நேரம் நீடித்த அறுவைசிகிச்சையை எலும்பியல் அறுவைசிகிச்சை நிபுணர்கள் மேற்கொண்டனர். இதில், எலும்பு ஒட்டுமுறை, முன்பு பொருத்தப்பட்ட திருகாணியை அகற்றுதல் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதியை வலுப்படுத்த பிளேட் பொருத்துதல் ஆகிய செயல்பாடுகள் இடம் பெற்றன. இத்தனை செயல்பாடுகளையும் ஒரே அமர்விலேயே மேற்கொள்ளும் சிக்கலுக்கும் கூடுதலாக, நடமாட்டமின்றி படுக்கையிலேயே நான்கு ஆண்டுகளை கழித்ததால் நோயாளியின் அதிகரித்த உடல் எடையும் சிக்கலை கடுமையாக்கியிருந்தது.
இந்த அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போது நோயாளியின் உடல் எடை 100 கிலோவிற்கும் அதிகமாகியிருந்தது. தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையின் எலும்பியல் துறை தலைவரும், முதுநிலை நிபுணருமான டாக்டர். கே. பார்த்திபன் தலைமையில் இந்த அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து சிறப்பாக கட்டமைக்கப்பட்ட இயன்முறை சிகிச்சை அவருக்கு வழங்கப்பட்டது. ஆறு மாதங்களுக்குள் அவரது தொடை எலும்பு முழுமையாக பொருந்தி இணைந்துள்ளது. இப்போது முற்றிலும் பாதிப்பிலிருந்து மீண்டு குணமடைந்திருக்கிற குமார் தனது பணிக்கு திரும்பி வழக்கமான வாழ்க்கையை மீண்டும் வாழத் தொடங்கியிருக்கிறார்.
இதுகுறித்து மீனாட்சி மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர். ரவிச்சந்திரன் கூறியதாவது: “திரும்பச் செய்யும் (ரீடூ) தொடை எலும்பு அறுவைசிகிச்சை என்பது உண்மையிலேயே அதிக சிக்கலான எலும்பு முறிவு நீக்கல் செயல்முறையாகும். எலும்பு இணையாமை (எலும்பு குணமடைய தவறுவது), இணைப்பொருமைப்-பிறழ்வு அல்லது உட்பதியம் செயல்படத் தவறுவது போன்ற சிக்கல்களின் காரணமாக தொடக்க அறுவைசிகிச்சைகள் தோல்வியுறும் போது பெரும்பாலும் இவை மேற்கொள்ளப்படுகின்றன. குறைபாட்டை சரிசெய்யும் இத்தகைய அறுவைசிகிச்சைகளின் வெற்றிக்கு தனிச்சிறப்பான அறுவைசிகிச்சை நிபுணத்துவம் மேம்பட்ட மருத்துவ தொழில்நுட்பம் மற்றும் அறுவைசிகிச்சைக்கு பிறகு துல்லியமான பராமரிப்பு மற்றும் இயன்முறை மருத்துவம் (பிசியோதெரபி) ஆகியவை கண்டிப்பாக தேவைப்படும்.
எலும்பியல், இதயவியல், மயக்க மருந்தியல், இயன்முறை சிகிச்சை உட்பட துறைகளை சேர்ந்த சிறப்பு நிபுணர்களின் ஒத்துழைப்பின் வழியாகவே இந்த நோயாளிக்கான சிகிச்சையில் எதிர்கொண்ட பல்வேறு சிக்கல்களையும் எங்களால் வெற்றிகரமாக கையாள முடிந்தது. இதய சிக்கல்கள் வரும் இடர்வாய்ப்பும் மற்றும் நோயாளியின் அளவுக்கதிகமான எடையும் சவால்களாக நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எமது மருத்துவமனையின் நவீன கட்டமைப்பு வசதிகளும் மற்றும் எமது மருத்துவர்கள் குழுவின் நிகரற்ற நிபுணத்துவமும், இந்த சவால்களை சமாளித்து வெற்றிகாண மிக முக்கியமான அம்சங்களாக இருந்தன. நோயாளிகளுக்கு சாத்தியமுள்ள சிறந்த சிகிச்சை பலன்களை உறுதி செய்வதற்கு நவீன மருத்துவத்தின் சிறப்பு அம்சங்களை சரியாக பயன்படுத்துவதில் அர்ப்பணிப்பை இந்த வெற்றிகர நிகழ்வு நேர்த்தியாக முன்னிலைப்படுத்துகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
எலும்பியல் துறை தலைவரும், முதுநிலை அறுவைசிகிச்சை நிபுணருமான டாக்டர். கே. பார்த்திபன் கூறுகையில், “சேதமடைந்த எலும்பை சரிசெய்ய அல்லது அகற்றுவதற்கு எலும்புத்திசு மறுபதியம் செய்யப்படுகிற ஒரு அறுவைசிகிச்சை செயல்முறையான எலும்பு ஒட்டுமுறையை (கிராஃப்டிங்) நாங்கள் மேற்கொண்டோம். இந்த நோயாளியின் உடலில் இருந்தே இந்த ஒட்டு எடுக்கப்பட்டது. மூன்றாவது முறையாக அதே தொடை எலும்பில் அறுவைசிகிச்சை செய்வது என்பது கணிசமான சவால்கள் நிறைந்ததாக இருந்தது. அதுவும் குறிப்பாக நோயாளியின் உடல் எடை 100 கிலோவிற்கும் அதிகமாக இருந்தது. தொடையில் அறுவைசிகிச்சை செய்யும் இடத்தை அணுகுவதற்கு இந்த கூடுதல் எடை பெரிய சவாலை உருவாக்கியிருந்தது. அத்துடன் இதய பிரச்சனைகளுக்கான சாத்தியமும், கூடுதல் கவலையளிக்கும் அம்சமாக இருந்தது. மேலும் அறுவைசிகிச்சையின் போது கணிசமான இரத்த இழப்பு இருந்ததால் இரத்தமேற்றலும் அவசியமாக இருந்தது. இருப்பினும், கவனமான திட்டமிடல் மற்றும் பல்வேறு துறைகளின் நிபுணர்களது ஒத்துழைப்பு செயல்பாட்டின் வழியாக இந்நோயாளிக்கான சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்து எதிர்பார்த்த நடமாட்டத் திறனை அவருக்கு மீண்டும் வழங்கியிருக்கிறது. மீண்டும் பணிக்கு திரும்பி இயல்பு வாழ்க்கையை வாழ்வதற்கு வழிவகுத்திருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியும், பெருமிதமும் கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதில் டாக்டர் பாலகுருநாதன், முதுநிலை ஆலோசகர் மற்றும் எச்ஓடி, எலும்பியல் துறை, செல்வபாண்டி ஆகியோர் உடன் இருந்தனர்.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

