ஆபரேஷன் இல்லாமல் அருமையான சாதனை... 6 வயது சிறுமியின் கல்லீரலில் இருந்த நீர் கட்டிகள் அகற்றம்
6 வயது சிறுமிக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் நவீன சிகிச்சை மூலம் கல்லீரலில் இருந்த நீர்கட்டி லேப்ராஸ்கோப்பி மூலம் அகற்றப்பட்டது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவமனையில் 6 வயது சிறுமிக்கு நவீன சிகிச்சை மூலம் கல்லீரலில் இருந்த நீர்கட்டிகளை அகற்றி மருத்துவக்குழுவினர் சாதனை படைத்துள்ளனர்.
தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் 6 வயது சிறுமிக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் நவீன சிகிச்சை மூலம் கல்லீரலில் இருந்த நீர்கட்டி அறுவை சிகிச்சை இல்லாமல் லேப்ராஸ்கோப்பி மூலம் அகற்றப்பட்டது. இதுகுறித்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:

தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையின் குழந்தைகள் நலப்பிரிவில் பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒரத்தநாடு அருகே சேதுராயன்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியின் 6 வயது பெண் குழந்தைக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டு வந்ததுள்ளது. இவ்வாறு வயிற்று வலியால் அவதிப்பட்ட அந்த சிறுமியை ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து வந்தனர்.
சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் கல்லீரலில் நீர் கட்டி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடந்த 14-ம் தேதி மருத்துவமனையில் சிறுமி உள்நோயாளியாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிறுமிக்கு ரத்தப்பரிசோதனை, எம்ஆர்ஐ உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து கடந்த 20-ம்தேதி குழந்தைகள் நலப்பிரிவு அறுவை சிகிச்சை துறை தலைவர் முகமதுஷாகீர் மற்றும் மருத்துவர்கள் குமரன், சாய்பிரபா மற்றும் செவிலியர்கள் சிறுமிக்கு வயிற்றை கிழிக்காமல், லேப்ராஸ்கோபி மூலம் மூன்று துளைகள் இட்டு, கல்லீரலில் இருந்த 150 கிராம் எடை கொண்ட நீர் கட்டியை முற்றிலுமாக அகற்றினர். அந்த கட்டியை மருத்துவபரிசோதனைக்கு, ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பியுள்ளோம். இந்த கட்டி அகற்றப்படாமல் இருந்தால், சிறுமிக்கு மஞ்சள்காமாலை வந்து, பின்னர் புற்றுநோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இந்த நவீன சிகிச்சையை தமிழக முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதே சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் ரூ.7 லட்சம் செலவாகும். இங்கு இலவசமாக செய்யப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இந்த சிகிச்சை முதன்முறையாக செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது சிறுமிக்கு வலி ஏதும் இல்லாமல், விளையாடுகிறார். தற்போது சிறுமி நலமாக இருப்பதால் வீடு திரும்புகிறார். இதே அறுவை சிகிச்சை என்றால் சிறுமி குறைந்தது ஒரு வாரமாவது மருத்துவமனையில் தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டு இருக்கும். அறுவை சிகிச்சையால் ஏற்படும் வலி உட்பட பல்வேறு உடல்நலக்குறைவுகள் சிறுமிக்கு ஏற்பட்டு இருக்கும். ஆனால் அவ்வாறு இல்லாமல் தற்போது மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையால் சிறுமி உடனடியாக பூரண நலம் பெற்றுள்ளார். பல மணிநேரம் நடந்த இந்த சிகிச்சையை மருத்துவக்குழுவினர் திறம்பட செய்து சிறுமியை காப்பாற்றி உள்ளனர். இதற்காக மருத்துவக்குழுவினருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அப்போது நிலைய மருத்துவ அலுவலர் அமுதவடிவு மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் பலர் உடனிருந்தனர்.





















