தஞ்சாவூரில் கோடை மழை: வெப்பம் தணிந்து ஊட்டியின் குளுமை! நெல் நனைந்ததால் விவசாயிகள் கவலை
கடந்த வாரம் முதல் தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் வெப்பம் அதிகரித்து, மதியம் நேரங்களில் கடும் வெயில் காரணமாக மக்கள் வெளியே செல்ல முடியாத நிலை உருவாகி இருந்தது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளிலும் சாரலாகவும், பல இடங்களில் மிதமான மழையும் பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து ஊட்டியின் குளுமையாக சூழல் மாறியது.
தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் கருமேகம் சூழ்ந்து ரம்யமாக காணப்படடது. மதியம் சிறு சாரல் மழையாக தஞ்சை நகர் பகுதி முழுவதும் மழை பெய்தது. சில இடங்களில் சற்று மிதமாக மழை பெய்தது. இந்த கடந்த சில நாட்களாக கடும் வெயில் நிலவி வந்த நிலையில் திடீரென பெய்த இந்த கோடை மழையால் வெப்பம் தணிந்து பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
வெப்பத்தை தணித்து ஜில்லென்று மாற்றிய மழை
கடந்த வாரம் முதல் தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் வெப்பம் அதிகரித்து, மதியம் நேரங்களில் கடும் வெயில் காரணமாக மக்கள் வெளியே செல்ல முடியாத நிலை உருவாகி இருந்தது. பல இடங்களில் வெப்பநிலை உயர்ந்ததால் குடிநீர் தேவை கூட அதிகரித்தது. சாலைகளில் கானல் நீர் தென்படும் அளவிற்கு வெப்பம் வாட்டியது. இந்நிலையில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பல பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்து ரம்யமாக காட்சியளித்தது. பின்னர் பல்வேறு பகுதிகளில் தூறலாக மழை பெய்தது. தஞ்சை நகர் பகுதியில் சாரல் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.
தஞ்சாவூர் நகரம், பட்டுக்கோட்டை, கும்பகோணம், திருவையாறு, ஒரத்தநாடு, பாபநாசம், பேராவூரணி, திருவிடைமருதூர், திருக்காட்டுப்பள்ளி, வல்லம், செங்கிப்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் மிதமான மழை பெய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில இடங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது.
இந்த மழையால் வெப்பம் கணிசமாக குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. கடும் வெயிலால் அவதிப்பட்ட பொதுமக்கள் மழையால் நிம்மதி அடைந்தனர். இருப்பினும் தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது சித்திரக்குடி, கள்ளப்பெரம்பூர், தென்பெரம்பூர், ஆலக்குடி, கல்விராயன்பேட்டை, சிவகாமிபுரம், வண்ணாரப்பேட்டை உட்பட பல பகுதிகளில் சம்பா, தாளடி அறுவடை பணிகள் மும்முரம் அடைந்துள்ளது. இந்த மழையால் நேற்று அறுவடைப்பணிகள் பாதிக்கப்பட்டது. மேலும் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வந்து குவிந்த நெல்லும் ஆங்காங்கே சிறிய அளவில் நனைந்தது.
சில இடங்களில் சாலையோரங்களில் காயவைக்கப்பட்டிருந்த நெல் மழையால் நனைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்தனர். இருப்பினும் இன்று காலை முதல் வெயில் நன்கு அடித்து வருவதால் நெல்லை சீக்கிரம் காய வைத்து விடலாம் என்று விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர். கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்ல காத்திருந்த சில நெல் மூட்டைகளும் மழையால் பாதிக்கப்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
கோடை காலத்தில் இவ்வாறு திடீரென பெய்யும் மழை நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த உதவுவதுடன், வெப்பத்தை குறைக்கும் என்றும் விவசாயிகள் கூறுகின்றனர்.
கும்பகோணம் மற்றும் சுற்றியுள்ள பகுதியிலும் மிதமான மழை
இதேபோல் கும்பகோணம் நகரில் நேற்று காலை அரைமணி நேரம் மிதமான மழை பெய்து. நேற்று காலையில் இருந்து வெயில் தாக்கம் அதிகம் இருந்த நிலையில் மதிய நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் மிதமான மழை பெய்தது.
மேலும் கும்பகோணத்தை சுற்றியுள்ள பகுதிகளான தாராசுரம், சுவாமிமலை, திருபுவனம், திருவிடைமருதூர், ஆடுதுறை, கதிராமங்கலம், அம்மா சத்திரம் உள்ளூர் போன்ற பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.
பருவமழை நிறைவடைந்ததை தொடர்ந்து தற்போது முதல் முறையாக கோடை மழை பெய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ட்ரெண்டிங் செய்திகள்





















