"எங்க கூட்டணி செம ஸ்ட்ராங்க்..." - சொன்னது யார் தெரியுங்களா?
தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் இன்று காலை நடந்தது.

தஞ்சாவூர்: எங்கள் கூட்டணி செம வலிமையானது என்று சட்டமன்ற தேர்தல் மண்டல பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் இன்று காலை நடந்தது. கூட்டத்திற்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, கோவி.செழியன் ஆகியோர் தலைமை வகித்தனர். மத்திய மாவட்ட செயலாளரும், திருவையாறு எம்எல்ஏவுமான துரை. சந்திரசேகரன், எம்.எல்.ஏ., டி.கே.ஜி. நீலமேகம், உயர்திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் டாக்டர். அஞ்சுகம் பூபதி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மகேஷ் கிருஷ்ணசாமி, ராமச்சந்திரன், மாவட்ட பொருளாளர் எல்.ஜி. அண்ணா, மாவட்ட துணை செயலாளர் கனகவல்லி பாலாஜி, மாவட்ட அவைத்தலைவர் இறைவன், தலைமை செயற்குழு உறுப்பினர் து.செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் அனைவருடனும் தொகுதி வாரியாக எந்தெந்த பகுதிகளில் என்னென்ன பணிகள் செய்ய வேண்டும். தொகுதி நிலவரம் எப்படி உள்ளது? மக்களின் மனநிலை என்ன? என்பவை குறித்து அமைசசர் கே.என்.நேரு ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்திற்கு பின் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது:- தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் 2026 தேர்தல் குறித்து நிர்வாகிகளை சந்திப்பதற்காக வந்துள்ளேன். முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி இந்த ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அனைவரும் எந்தெந்த பகுதியில் என்ன பணிகள் செய்ய வேண்டும். தொகுதி நிலவரம் எப்படி உள்ளது. மக்கள் மனநிலை எப்படி உள்ளது என்பதை தெரிவித்துள்ளனர். மேலும் அரசு சார்பில் செய்யக்கூடிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டத்தை பொறுத்தவரை எவ்வித பிரச்சினையும் இல்லை. அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயல்படுவோம். 7-வது முறையாக தி.மு.க. ஆட்சி அமைக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்கள் மத்தியில் தி.மு.க. அரசின் திட்டங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துவதை முதல்வர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். பெண்கள் மத்தியில் தி.மு.க. அரசின் திட்டங்கள் சிறப்பான இடத்தை பெற்றுள்ளது. மக்கள் தி.மு.க. பக்கம் தான் இருப்பார்கள். எங்கள் கூட்டணி எப்போதும் சிறப்பான கூட்டணி. இதில் எவ்வித மாற்றமும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.






















