தஞ்சாவூர் அண்ணா சிலை அருகே போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி! புதிய ரவுண்டானா மூலம் மக்கள் மகிழ்ச்சி!
தஞ்சாவூரில் தனை முயற்சியில் இருந்த ரவுண்டானா தற்போது நிரந்தரமாக ரவுண்டானா அமைக்க மூன்றடி உயரத்துக்கு கான்கீரிட் தடுப்புகள் கட்டும் பணி தொடங்கி நிறைவடைந்துள்ளது என்றார் மேயர் சண்.ராமநாதன்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே அண்ணா சிலை அருகில் புதிய ரவுண்டானா அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. இதனால் போக்குவரத்தில் இதுநாள் வரை இருந்து வந்த பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வை அளித்த தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் மற்றும் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே அண்ணா சிலை அமைந்துள்ள பகுதியில் நிரந்தரமாக ரவுண்டானா அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. இதனால் போக்குவரத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் கடந்த 1968ல் அண்ணா சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை நெடுஞ்சாலைத்துறையின் இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு கிராமப்பகுதிகளுக்கு ஏராளமான அரசு பஸ்கள், தனியார் பஸ்கள், மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் எப்போது மக்கள் நெருக்கடியும், வாகன போக்குவரத்தும் மிகுந்து காணப்படும்.

இந்த சிலையை மையமாக கொண்டு, காந்திஜி சாலை இருபுறம், அரசு மருத்துவமனை சாலை, கீழவாசல் செல்லும் சாலை என நான்கு சாலைகளும் பிரிந்து செல்கிறது. எப்போதும் போக்குவரத்து வாகன பயன்பாட்டில் உள்ள இந்த சிலை அருகே கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மாநகராட்சி சார்பில் உயர் மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டது.
வாகனங்கள் நான்கு புறமும் சென்று, வருவதால் இந்த இடம் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. இந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக அண்ணாசிலையை சுற்றி புதிய ரவுண்டானா அமைக்க நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி நிர்வாகம் ஆகியவை திட்டமிட்டன.
அதன்படி கடந்த ஜன.20-ம் தேதி அண்ணாசிலையை சுற்றிலும் தற்காலிகமாக 7 மீட்டர் சுற்றளவுக்கு ரவுண்டானா அமைக்க இரும்பு பேரல்கள் கொண்டு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டது. மேலும் அங்கிருந்த உயர்மின் கோபுர விளக்கு மற்றும் போக்குவரத்து போலீஸாரின் நிழற்குடையும் அகற்றப்பட்டது.
கடந்த ஒரு மாததிற்கும் மேலாக சோதனை முயற்சியில் இருந்த ரவுண்டானா தற்போது நிரந்தரமாக ரவுண்டானா அமைக்க மூன்றடி உயரத்துக்கு கான்கீரிட் தடுப்புகள் கட்டும் பணி தொடங்கி நிறைவடைந்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் கூறுகையில், தற்போது அண்ணாசிலை பகுதியில் ரவுண்டானா நிறைவடைந்துள்ளது. இதில் பூங்கா அமைத்து சிறப்பாக பராமரிக்க உள்ளோம். இந்த ரவுண்டானா அமைக்கப்பட்ட பின்னர் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. இதுதான் எங்களின் நோக்கமாகும். போக்குவரத்து நெரிசல் இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு அதை நிறைவேற்றி உள்ளோம். அண்ணா சிலைக்கும், மக்களுக்கும் போக்குவரத்தால் எவ்வித இடையூறு இல்லாமல் அப்பகுதியை அழகிய பூங்காவனமா மாற்ற உள்ளோம். முக்கியமாக அந்த பகுதியை சிக்னல் இல்லாத பகுதியாக மாற்றும் நோக்கம் நிறைவேறியுள்ளது. நம்முடைய முழு நோக்கமே தஞ்சாவூரை சிக்னல் இல்லாத சிட்டியாக, போக்குவரத்து நெரிசல் இல்லாமல் மாற்றுவதுதான். சிக்னல் இல்லாமலேயே வாகன போக்குவரத்து கடந்து செல்ல வேண்டும்.

அப்படித்தான் இதை மாற்றி இருக்கிறோம். மேலும் ஆற்றுப்பாலம் ரவுண்டானா, ராமநாதன் ஹாஸ்பிடல் ரவுண்டானா, தொல்காப்பியர் சதுக்கம் ரவுண்டானா அமைக்கப்பட்டு போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. தஞ்சையை சுற்றி பைபாஸ் சாலைகளில் இருக்கக்கூடிய அனைத்து ரவுண்டானாவும் பூங்காவனம் போன்று மாற்றி உள்ளோம். எந்தப்பகுதியில் இருந்து தஞ்சைக்குள் வரும் போது ஒரு புதிய வித்தியாசமான, முகமலர்ச்சியை ஏற்படுத்தும், சிக்னல் இல்லாத போக்குவரத்து என்ற ஒரு சூழலை உருவாக்கி இருக்கிறோம்.
பிள்ளையார்பட்டி, திருவையாறு பைபாஸ் ரவுண்டானா, பள்ளியக்ரஹாரம் பைபாஸ் ரவுண்டானாவா, தமிழ்ப்பல்கலைக்கழகம் அருகில் உள்ள ரவுண்டானாவா ஆகியவை அழகிய பூங்காக்கள் போன்று மாற்றப்பட்டு மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், அண்ணாசிலை பகுதி எப்போதும் போக்குவரத்து நெரிசலாக இருப்பதால் நான்கு புறமும் செல்லக்கூடியவர்கள் சிரமப்பட்டு வந்தனர். இதற்காக நெடுஞ்சாலைத்துறை இடத்தில் புதிய ரவுண்டானா அமைத்து போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. சோதனை முயற்சியாக ஒரு மாத காலத்துக்கு தற்காலிக தடுப்புகள் வைக்கப்பட்டு ரவுண்டானா அமைத்தோம். அதில் உள்ள குறைகளை கண்டறிந்து அதற்கு ஏற்றபடி தற்போது நிரந்தர ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது என்றனர். போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்தும் வகையில் ரவுண்டானா அமைத்த மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் மற்றும் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டுக்களும், நன்றியும் தெரிவித்துள்ளனர்.






















