வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில் பாஜக நிர்வாகி சுயேட்சையாக வேட்புமனு தாக்கல்
தஞ்சாவூர் மாவட்ட பாஜக துணைத் தலைவர் முரளிதரன் என்பவர் தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்து வேட்புமனுவை சுயேட்சையாக தாக்கல் செய்தார்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படாத நிலையே இருந்து வருகிறது. இந்நிலையில், பாஜக நிர்வாகி சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்தது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் தஞ்சாவூர் தொகுதியை தவிர மற்ற 7 தொகுதிகளுக்கும் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு செய்யப்பட்டனர். வேட்பாளர்கள் உறுதி செய்யப்பட்ட நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்வது, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவது போன்றவற்றில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தவெக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தஞ்சாவூர் தொகுதியை புதிய நீதிக் கட்சிக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் பாஜகவைச் சேர்ந்தவர்களும் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதற்கிடையில் கடந்த 30ம் தேதி தஞ்சாவூர் மாவட்ட பாஜக துணைத் தலைவர் முரளிதரன் என்பவர் தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்து வேட்புமனுவை சுயேட்சையாக தாக்கல் செய்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில், தஞ்சாவூர் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு பாஜக தான் போட்டியிட வேண்டும், வேறு கட்சிக்கு தொகுதியை தாரை வார்க்கக் கூடாது. எனது ராசிப்படி நல்ல நாள் என்பதால் நான் சுயேட்சையாக வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளேன். பாஜகவுக்கு இந்த தொகுதியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில் பாஜக நிர்வாகி ஒருவர் தன்னிச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.























