![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
தஞ்சையில் பூட்டிய வீட்டை கொள்ளையடிக்க வந்த 4 திருடர்கள்-தமிழகம் முழுவதும் 500 சவரன் திருடியது அம்பலம்
’’இதுவரை இவர்களிடம் இருந்து 74 சவரன் நகைகள் 2.5 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்’’
![தஞ்சையில் பூட்டிய வீட்டை கொள்ளையடிக்க வந்த 4 திருடர்கள்-தமிழகம் முழுவதும் 500 சவரன் திருடியது அம்பலம் Tanjore: 4 thieves who came to rob a locked house - 500 razors stolen across Tamil Nadu exposed தஞ்சையில் பூட்டிய வீட்டை கொள்ளையடிக்க வந்த 4 திருடர்கள்-தமிழகம் முழுவதும் 500 சவரன் திருடியது அம்பலம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/19/b9e88cf0f7f74a9368d9ba48872ec3a3_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்ரியாகாந்தபுனேனி உத்தரவின்படி, தனிப்பிரிவு ஆய்வாளர் மணிவேல் தலைமையில் தனிப்படை உதவி ஆய்வாளர் ராஜேஷ்குமார், சிறப்பு உதவி ஆய்வாளர் மோகன், தலைமை காவலர் உமாசங்கர், காவலர்கள் அருண்மொழி, அழகுசுந்தரம், நவீன், சுஜித் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர், தஞ்சாவூர் டான்டெக்ஸ் ரவுண்டானா அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த நான்கு பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்த போது, அவர்கள் தமிழகம் முழுவதும் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிக்கும் கும்பல் எனத் தெரியவந்தது.
இதை அடுத்து அவர்களை சோதனையிட்ட போது அவர்களிடம் 74 பவுன் தங்க நகைகளும், 2 லட்சத்து 5 ஆயிரம் ரொக்க பணமும், வீடுகளின் பூட்டை உடைக்க பயன்படுத்தும் இரும்பு கம்பிகளும் இருந்ததை அடுத்து அவர்களை போலீஸார் பிடித்து தனியாக வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த மனோஜ் (35), திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை திலீப் திவாகர் (26), சிவகங்கை மாவட்டம் கீழடியைச் சேர்ந்த ராஜாராமன் (26), இவரது தம்பி கார்த்திக் ராஜா(24) என்பதும் இவர்கள் தமிழகம் முழுவதும் பூட்டிய வீடுகளில் கொள்ளையடித்ததும் தெரியவந்தது.
அதே போல் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்துக்குட்பட்ட ஒரு வீட்டில் கடந்த மாதம் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகையை இந்த கும்பல் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அந்த கும்பலை கைது செய்து நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில்: சின்ன சின்ன திருட்டு வழக்குகளில் கோவை சிறையில் இந்த நான்கு பேரும் சந்தித்துள்ளனர். அதன்பிறகு வெளியே வந்த இந்த நான்கு பேரும் மனோஜ் தலைமையில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்து வந்துள்ளனர்.
கன்னியாகுமரி, தூத்துக்குடி, அருப்புக்கோட்டை, திருநெல்வேலி, திண்டுக்கல், தேவக்கோட்டை, கந்தர்வக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, சேலம், விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் இக்கும்பல் கொள்ளை அடித்துள்ளனர். இதில் கடந்த 12 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் ஒரு வீட்டில் 42 பவுன் நகையை கொள்ளையடித்துள்ளனர். இதே போல் கன்னியாகுமரி மாவட்டத்தில் 17 பவுன் நகையையும் கொள்ளையடித்துள்ளனர். தஞ்சாவூரில் 15 பவுன் நகையை கொள்ளையடித்துள்ளனர். இந்த நகைகளை தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவர்களை பிடிக்க மாநிலம் முழுவதும் போலீஸார் தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில், தஞ்சாவூரில் இவர்கள் பிடிபட்டுள்ளனர். இது தொடர்பாக இவர்கள் மீது வழக்குகள் உள்ள அந்தந்த மாவட்ட காவல் துறையினர் இவர்களை கஸ்டடி எடுத்து விசாரிக்க உள்ளனர்.
இவர்கள் தமிழகம் முழுவதும் சுமார் 500 பவுனுக்கு குறையாமல் கொள்ளையடித்துள்ளதும், சென்னை, திருச்சியில் வங்கிகளில் கொள்ளையடித்த வழக்குகளிலும் அவர்கள் மீது இருப்பதால், அது தொடர்பாகவும் போலீஸார் விசாரிக்க உள்ளனர். இந்த கும்பல் மீண்டும் தஞ்சாவூரில் புறநகர் பகுதிகளில் பூட்டிய வீடுகளில் கொள்ளையடிக்க வந்த போது கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)