தமிழகத்தில் ஒட்டி உறவாட கூடிய இரட்டை இஞ்சின் அமைப்பு தான் வேண்டும்: புதிய நீதி கட்சி தலைவர் அதிரடி
புதிய நீதிக்கட்சியின் ஆலோசனை மற்றும் தஞ்சாவூர் தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு புதிய நீதிக் கட்சியின் தென்மண்டல பொதுச் செயலாளர் ,ஸ்ரீபதி செந்தில் வரவேற்றார்.

தஞ்சாவூர்: தமிழகத்தில் ஒட்டி உறவாட கூடிய இரட்டை இஞ்சின் அமைப்பு தான் வேண்டும். விஜய்யால் திமுகவின் 70% வாக்குகள் மாறும் என புதிய நீதிக்கட்சி தலைவர் ஏசி.சண்முகம் உறுதிபட தெரிவித்தார்.
தஞ்சாவூரில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியில் இடம் பிடித்துள்ள புதிய நீதிக்கட்சியின் ஆலோசனை மற்றும் தஞ்சாவூர் தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு புதிய நீதிக் கட்சியின் தென்மண்டல பொதுச் செயலாளர் ,ஸ்ரீபதி செந்தில் வரவேற்றார். கூட்டத்தில் அதிமுக மாநகர செயலாளர் என்.எஸ்.சரவணன் முன்னிலை வகித்தார். தேசிய ஜனநாயக கூட்டணியின் தஞ்சாவூர் தொகுதி வேட்பாளர் பாஜகவைச் சேர்ந்த கருப்பு எம்.முருகானந்தத்தை நிர்வாகிகளுக்கு அறிமுகம் செய்து வைத்து புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏசி.சண்முகம் பேசினார்.
பின்னர் ஏசி.சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடி, இந்திய நாட்டை சர்வ வல்லமை பொருந்திய நாடாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். பொருளாதாரத்தில் இந்தியாவை 13-வது இடத்திலிருந்து, 5 - வது இடத்துக்கு கொண்டு வந்துள்ளார். உலகில் எந்த போர் நடந்தாலும், அதனுடைய தூதுவராக தான் பிரதமர் மோடி செல்கிறார்.
கரோனா காலத்தில், உள்நாட்டு மருத்துவத்தை வைத்து, இந்திய மக்களை காப்பாற்றியவர் பிரதமர் மோடி. அதேபோல் ராணுவத்துக்கு ஏகே 47 துப்பாக்கியை ஜெர்மனியிலிருந்து வாங்கி கொண்டு இருந்தோம். ஆனால் தற்போது, 16 நாடுகளுக்கு ரூ. 4,000 கோடிக்கு விற்பனை செய்துள்ளோம். உலகத்திலேயே மிகப்பெரிய வல்லரசு நாடாக மாற்றிக் கொண்டிருக்கின்ற இந்தியா பிரதமர், தஞ்சாவூர் தொகுதிக்கு முருகானந்தத்தை வேட்பாளராக அறிவித்துள்ளார். இந்த தொகுதியில் முருகானந்தம் வெற்றி பெற்றால், தஞ்சாவூருக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். அவர் அமைச்சராக கூட வாய்ப்புள்ளது.
தஞ்சாவூரில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் யாராவது இங்கு பயணிகள் விமான நிலையம் வேண்டும் என குரல் கொடுத்தார்களா, ஆனால் இங்கு பாஜக வெற்றி பெற்றால், விமான நிலையம் கொண்டு வரப்படும். அதே போல் பெருநகரமாக மாறிக் கொண்டிருக்கும் தஞ்சாவூருக்கு மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும். இங்கு திமுக வெற்றி பெற்றால் இந்த திட்டங்கள் நிச்சயம் கிடைக்காது.
தமிழகத்தில் ஒட்டி உறவாட கூடிய இரட்டை இஞ்சின் அமைப்பு தான் வேண்டும் எவ்வளவு மாநில முதலமைச்சர்கள் எவ்வளவுதான் கருத்து வேறுபாடு இருந்தாலும், மாற்றுக் கட்சியிலே இருந்தாலும், அவர்கள் பிரதமரோடு இணைந்து சுமூகமாகத் தங்களின் மாநிலத்திற்குத் தேவையான அத்துணை நிதி உதவிகளும் பெற்று செய்து கொண்டிருக்கிறார்கள். இங்கு தமிழகத்தில் மட்டும்தான் அதிசயமாக என்ன சொன்னாலும் அதை குறை சொல்வதற்காகவே ஒரு அரசாங்கம் இருந்து கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் கிராமங்களில் உள்ள தெருக்கள் வரை போதைபொருள் புழக்கம் அதிகமாக உள்ளது. இதை ஒழிக்க வேண்டும் என்றால் அதிமுக கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும். தவெகவின் விஜய் வருகை என்பது அரசியல் அரங்கில் முக்கியமாக பார்க்கப்படுகிறது. தவெக வேட்பாளர்கள் 20 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம் வாக்குகள் வாங்குவார்கள், வலுவான வேட்பாளராக இருந்தால் இரண்டாவது இடத்துக்கு வருவார்கள், சிறப்பான வேட்பாளராக இருந்தால் கொஞ்சம் தொகுதியை பெறுவார்கள், தவெக வருகையால் திமுகவிலிருந்து 70% வாக்குகள் மாறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்





















