பொதுத் தொகுப்பு முறையில் ஊதியம் வழங்குங்கள்... குருங்குளம் சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
பொது தொகுப்பு ஊதிய முறையில் ஊதியம் வழங்க வேண்டும் என்ற தீர்ப்பை அமல்படுத்த வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் சர்க்கரை ஆலை முன்பு ஆர்பாட்டம் நடந்தது.

தஞ்சாவூர்: சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின் படி பொதுத் தொகுப்பு ஊதிய முறையில் ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளத்தில் அமைந்துள்ளது அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை. இது தமிழ்நாடு சர்க்கரை கார்ப்பரேஷனுக்கு சொந்தமானது, 1977-ல் தொடங்கப்பட்டது. தஞ்சாவூர்-புதுக்கோட்டை சாலையில் அற்புதாபுரத்தில் இருந்து இந்த சர்க்கரை ஆலைக்கு செல்ல வேண்டும். இது இப்பகுதியின் முக்கிய சர்க்கரை உற்பத்தி நிலையமாகும். இந்த ஆலை கரும்பு அரவை, சர்க்கரை உற்பத்தி மற்றும் உபபொருட்களான பாகஸ், மொலாசஸ் தயாரிப்பு ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளது,

இந்த சர்க்கரை ஆலைக்கு தஞ்சாவூர், ஒரத்தநாடு, வல்லம், கந்தர்வக்கோட்டை, பட்டுக்கோட்டை போன்ற பகுதிகளில் இருந்து விவசாயிகள் கரும்புகளை உற்பத்தி செய்து அரவைக்காக அனுப்புகின்றனர். இந்த சர்க்கரை ஆலையில் ஏராளமான பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் ஐஏஎஸ் அதிகாரி ராஜூரஞ்சன் தலைமையில் 2011ம் ஆண்டு அமைக்கப்பட்ட உயர்மட்ட குழு அறிக்கை படி உயர் நீதிமன்றம் வழங்கிய பொது தொகுப்பு ஊதிய முறையில் ஊதியம் வழங்க வேண்டும் என்ற தீர்ப்பை அமல்படுத்த வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் குருங்குளம் அறிஞர் அண்ணா பொதுத்துறை சர்க்கரை ஆலை முன்பு ஆர்பாட்டம் நடந்தது.
கூட்டுக் குழு தலைவர் ராஜன், பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை வகித்தனர். அண்ணா தொழிற்சங்க செயலாளர் ரமேஷ், பணியாளர் சங்க செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி பொதுத்தொகுப்பு ஊழியர்களுக்கு வழங்குவது போல் ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பொதுத் தொகுப்பு ஊதிய முறையில் ஊதியம் வழங்க வேண்டும். 25 ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் அனைவருக்கும் இந்த தீர்ப்பை அமல்படுத்தி முறையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் சர்க்கரை ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர் கூட்டு நடவடிக்கை குழு தலைவர் ராஜன் கூறுகையில், சர்க்கரை ஆலையில் நடைமுறையில் இருந்து வரும் இரட்டை முறை ஊதியத்தை களைக்க வேண்டும் என்று பல கட்ட போராட்டங்கள் நடத்தி இன்று வரை எங்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை.
சர்க்கரைத் துறை ஆணையகமும் தமிழக அரசும் கருணை உள்ளத்தோடு எங்களது நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். பல ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களின் குடும்ப சூழலை கருத்தில் கொண்டு பொதுத் தொகுப்பு ஊதியத்தை அமல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். சர்க்கரைத் துறை ஆணையகமும், தமிழக அரசும் சீராய்வு மனுவை வாபஸ் பெற்று, எங்களது நியாயமான கோரிக்கையான இரட்டை முறை ஊதியத்தை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஆலையில் பணியாற்றி வரும் தொழிலாளர்களின் குடும்பங்களின் நலனை கருத்தில் கொண்டு எங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி தர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.





















