![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
சீர்காழியில் மது பிரியர்களின் பாராக செயல்படும் பள்ளி விளையாட்டு மைதானம் - காலி மதுபாட்டில்களை அப்புறப்படுத்தும் பணியில் மாணவர்கள்
சீர்காழியில் பள்ளி மைதானத்தில் குடிகாரர்கள் விட்டுச் செல்லும் மது பாட்டில்களை பள்ளி மாணவர்களை கொண்டு அப்புறப்படுத்தும் பள்ளி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
![சீர்காழியில் மது பிரியர்களின் பாராக செயல்படும் பள்ளி விளையாட்டு மைதானம் - காலி மதுபாட்டில்களை அப்புறப்படுத்தும் பணியில் மாணவர்கள் Mayiladuthurai news Sirkazhi public condemned school administration for disposing liquor bottles left by the drunkards in the school ground with the students TNN சீர்காழியில் மது பிரியர்களின் பாராக செயல்படும் பள்ளி விளையாட்டு மைதானம் - காலி மதுபாட்டில்களை அப்புறப்படுத்தும் பணியில் மாணவர்கள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/04/eb32079f75f512d60a2bb316487cfc0f1699088862712733_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் செயல்பட்டு வருகிறது சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி. இப்பள்ளியில் சீர்காழி மட்டுமின்றி சீர்காழி தாலுக்கா முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். சுமார் நூறாண்டுகள் பழமை வாய்ந்த இப்பள்ளி, சீர்காழி சுற்று வட்டார மக்களின் நன்மதிப்பை பெற்ற ஒன்றாகும். மேலும் இப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் ஏராளமானோர் பல்வேறு அரசு மற்றும் தனியார் துறைகளிலும் மருத்துவர், பொறியாளர், வழக்கறிஞர்கள் என உயர் பதவிகளிலும் இருந்து வருகின்றனர். இப்பள்ளி மாணவர்கள் கல்வியில் மட்டுமின்றி விளையாட்டிலும் சிறந்து விளங்குவதால், மாவட்ட மாநில தேசிய அளவிலான பல்வேறு போட்டிகளிலும் வெற்றி பெற்று சாதனை படைத்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கென்று விளையாட்டு மைதானம் பள்ளியிலிருந்து சிறிது தூரத்தில் அமைந்துள்ளது. அங்கு தான் நாள்தோறும் மாணவர்களுக்கான விளையாட்டு பாட வேளையில், உடற்கல்வி ஆசிரியர்களை கொண்டு விளையாட்டு பயிற்சிகள் மற்றும் உடற்பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. ஆனால் அதே விளையாட்டு மைதானத்தில் இரவு வேலைகளில் குடிகாரர்கள் மது அருந்தி உல்லாசமாக இருக்கும் இடமாக இருந்து வருகிறது. அந்த மைதானத்தில் நான்கு புறமும் வேலியோ, சுவர்களோ இல்லாமல் திறந்த வெளியாக இருப்பதால், நாள்தோறும் இரவு வேலைகளில் அங்கு திறளும் குடிகாரர்கள் மைதானத்தில் ஆங்காங்கே அமர்ந்து மது அருந்திவிட்டு காலி மது பாட்டில்கள் உணவு பொட்டலங்களை போன்றவற்றை அங்கேயே வீசிவிட்டு சென்று விடுகின்றன.
இதனால் மறுநாள் விளையாட்டு பாட வேளையில் பள்ளி மைதானத்திற்கு வரும் மாணவர்களை கொண்டு உடற்கல்வி ஆசிரியர்கள் காலி மது பாட்டில்களை அகற்ற சொல்கின்றனர். அதுவும் குறிப்பாக, உடற்கல்வி வகுப்பிற்கு உரிய ஆடைகள் இன்று வரும் மாணவர்களுக்கு தண்டனை அளிக்கும் விதமாக விளையாட்டு மைதானத்தை அதுவும் மது பாட்டில்களை அப்புறப்படுத்த நிர்பந்திப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. தற்போது மைதானத்தில் உள்ள குடிகாரர்கள் விட்டுச் சென்ற குப்பைகளை மாணவர்கள் அகற்றும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி அது பல்வேறு தரப்பினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது மட்டும் இன்றி கண்டனத்தையும் அதிகரித்துள்ளது.
மேலும் இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், இது போன்ற பள்ளி விளையாட்டு மைதானத்தில் மதுப்பிரியர்கள் மது அருந்தாமல் இருக்க இப்பகுதியில் இரவு வேளையில் காவல்துறையினர் ரோந்து பணியை மேற்கொள்ள வேண்டும், பள்ளி நிர்வாகத்தினர் மைதானத்தை சுற்றி பாதுகாப்பு வேலி அமைத்து உள்ளே வெளி நபர்கள் யாரும் செல்லாதவாறு தடுக்க வேண்டும். இவற்றை செய்ய முடியாவிட்டாலும் கூட காலையில் தூய்மை பணியாளர்களைக் கொண்டு விளையாட்டு மைதானத்தை தூய்மைப்படுத்தும் செயலில் மேற்கொள்ள வேண்டுமே தவிர மாணவர்களைக் கொண்டு காலி மதுபாட்டில்களை அப்புறப்படுத்த செய்வது தவறான செயல் எனவும், இதனை உரிய அதிகாரிகள் கவனத்தில் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)