பைபாஸ் சாலையில் எரிக்கப்படும் குப்பைகள்... மூச்சுத்திணறலுக்கு உள்ளாகும் மக்கள்
பைபாஸ் சாலையில் வண்ணாரப்பேட்டை கல்லணைக்கால்வாய் ஆற்றுப்பாலம் அருகில் தரம் பிரிக்கப்படாத குப்பைகளை கொட்டி வருகின்றனர். சில நேரங்களில் இந்த குப்பையை தீவைத்து எரிக்கின்றனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் – திருவையாறு பைபாஸ் சாலையில் குப்பைகளை தீவைத்து எரிப்பதால் வாகன ஓட்டுனர்கள் மூச்சுத்திணறலுக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் குப்பைகள் தரம் பிரிக்கப்படாமல் அப்படியே எரிக்கப்படுகிறது. இதனால் பிளாஸ்டிக் பொருட்களும் சேர்த்து எரிக்கப்படுவதால் மிகுந்த துர்நாற்றமும் எழுகிறது. எனவே இதுகுறித்து உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சையில் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற போது பைபாஸ் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அன்படி 2 கட்டமாக பைபாஸ் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கின. இதில் தஞ்சை மேலவஸ்தாசாவடியில் இருந்து தொடங்கி மாதாக்கோட்டை, விளார் வழியாக புதுப்பட்டினம், பட்டுக்கோட்டை பிரிவு சாலை, மாரியம்மன்கோவில் சாலையில் உள்ள ரவுண்டானா, வெண்ணாறு பாலம், பள்ளியக்ரஹாரம் ரவுண்டானா, திருவையாறு பிரிவு சாலை, 8-ம் நம்பர் கரம்பை, பிள்ளையார்பட்டி ரவுண்டானா வழியாக மாவட்ட எஸ்.பி., அலுவலகம் அருகே உள்ள திருச்சி சாலையில் நிறைவடையும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
முதல் கட்டமாக மேலவஸ்தாசாவடியில் இருந்து பள்ளியக்ரஹகாரம் ரவுண்டானா வரை ஒரு கட்டமாகவும், அங்கிருந்து தற்போது தஞ்சை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள திருச்சி சாலையில் இணைக்கும் வகையில் 2-வது கட்டமாகவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. திருச்சியில் இருந்து தஞ்சையை கடந்து செல்பவர்கள் தஞ்சை மாநகருக்குள் வந்து போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்காமல் தஞ்சையை கடந்து செல்லும் வகையில் இந்த சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை பணிகள் முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இந்த சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. பைக்குகள், கார், சரக்கு ஏற்றிச் செல்லும் லாரிகள், ஆம்புலன்ஸ் என்று இந்த பைபாஸ் சாலை வழியாக திருவையாறு மற்றும் கும்பகோணத்திற்கு வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் இந்த சாலையில் எப்போதும் போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.
இந்நிலையில் இந்த பைபாஸ் சாலையில் வண்ணாரப்பேட்டை கல்லணைக்கால்வாய் ஆற்றுப்பாலம் அருகில் தரம் பிரிக்கப்படாத குப்பைகளை கொட்டி வருகின்றனர். சில நேரங்களில் இந்த குப்பையை தீவைத்து எரிக்கின்றனர். பிளாஸ்டிக் பொருட்கள், வயர், குப்பைகள், கேரி பைகள், துணிகள் போன்றவற்றையும் சேர்த்து எரிக்கின்றனர். இதனால் இந்த பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டுனர்கள் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் இந்த பகுதியில் மரங்களும் அதிகளவில் உள்ளன. இவற்றுக்கு மத்தியில் குப்பைகளை கொட்டி தீ வைத்து எரிப்பதால் மரங்களும் தீயில் கருகி போய் உள்ளது.
இந்த பைபாஸ் சாலை வழியாக நோயாளிகளை ஏற்றிக் கொண்டு ஆம்புலன்ஸ்களும் சென்று வருகின்றன. மிகவும் முக்கியமான பகுதியாக இருக்கும் இங்கு குப்பைகளை தினமும் எரித்து வாகன ஓட்டுனர்களை மூச்சுத்திணறலுக்கு உள்ளாக்கி வருகின்றனர். எனவே இப்பகுதியில் குப்பைகளை கொட்டாமலும், தீவைத்து எரிக்காமலும் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது























