![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
’மத்திய அரசை தமிழ்நாடு அரசு மதிப்பதாலேயே விநாயகர் சதுர்த்திக்கு தடை’- கி.வீரமணி பேட்டி...!
''மத்திய அரசை வேறொரு கட்சி ஆட்சி செய்தாலும், அவர்களது அறிவிப்பை தமிழக அரசு மதிக்கிறது. அதனால், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்குத் தமிழக அரசுத் தடை விதித்துள்ளது''
![’மத்திய அரசை தமிழ்நாடு அரசு மதிப்பதாலேயே விநாயகர் சதுர்த்திக்கு தடை’- கி.வீரமணி பேட்டி...! Ganesha Chaturthi procession banned Interview with DK Leader K. Veeramani ’மத்திய அரசை தமிழ்நாடு அரசு மதிப்பதாலேயே விநாயகர் சதுர்த்திக்கு தடை’- கி.வீரமணி பேட்டி...!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/07/cdca3c3957a4fb606432192ba97807a5_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மத்திய அரசின் ஆணையைப் புதுச்சேரி அரசு மதிக்கவில்லை
பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாளாக அறிவித்த தமிழக முதல்வர் ஸ்டாலினை சமூக நீதிக்கான சரித்திர நாயகர் என அழைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பேட்டி
தஞ்சாவூர் அருகே வல்லத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் தேதியை சமூக நீதி நாளாகத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. மேலும், தலைமைச் செயலகம் முதல் அனைத்து அரசு அலுவலகங்களிலும் அன்றைய நாளில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவித்திருப்பதும் வரலாற்றுச் சிறப்புமிக்க பிரகடனம். இந்த உறுதிமொழியில் உள்ள வாசகங்கள் ஒவ்வொருவரையும் உயர்த்தும் வகையில் மிக அற்புதமாக அமைக்கப்பட்டுள்ளது.
சமூக நீதிக்காகத் தந்தை பெரியார் தொடர்ந்து பணியாற்றினார் எனக் கூறி, சமூக நீதியை காக்க பாடுபட்ட பெரியாரின் பிறந்த நாளைச் சமூகநீதி நாளாக அறிவித்திருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்கது. இது பொற்கால ஆட்சியின் உதயமாக இருக்கிறது. இந்த அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வருக்கு ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக முதல்வரை சமூக நீதிக்கான சரித்திர நாயகர் என அழைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
மூன்றாவது அலைக்கான வாய்ப்புகள் இருப்பதால், பொது இடங்களில் கூட்டம் சேரக்கூடாது என மத்திய அரசின் உள்துறைச் செயலர் அறிவித்துள்ளார். மத்திய அரசை வேறொரு கட்சி ஆட்சி செய்தாலும், அவர்களது அறிவிப்பை தமிழக அரசு மதிக்கிறது. அதனால், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்குத் தமிழக அரசுத் தடை விதித்துள்ளது. ஆனால், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்குப் புதுச்சேரி அரசு அனுமதி அளித்திருப்பதன் மூலம், மத்திய அரசின் விதிகளை அந்த அரசு மீறியிருப்பது தெரிய வருகிறது. மத்திய அரசில் அவர்களது கட்சியே ஆட்சியில் இருந்தாலும் கூட, மத்திய அரசின் ஆணையைப் புதுச்சேரி அரசு மதிக்கவில்லை என்பது தெரிகிறது என்றார். இந்த செய்தியாளர் சந்திப்பின்போது திராவிடர் கழக பொதுச் செயலர் இரா.ஜெயக்குமார், அமைப்புச் செயலர் இரா. குணசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)