குப்பைக்கிடங்கு ஊழல் விவகாரத்தில் தஞ்சை மாநகராட்சி முன்னாள் ஆணையர் மீது வழக்குப்பதிவு
பெரிய அளவில் முறைகேடு நடந்து இருப்பதாக, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் தஞ்சாவூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கோவிந்தராஜ் என்பவரால் மனு தாக்கல் செய்யப்பட்டது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சியின் குப்பை கிடங்கு ஊழல் தொடர்பாக முன்னாள் மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் உள்பட 4 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பல நாட்களாக இதுகுறித்த விவகாரம்தான் தஞ்சாவூரின் டாக் ஆப் சிட்டியாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தஞ்சாவூர் ஜெபமாலைபுரத்தில் 28 ஏக்கர் பரப்பில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கு உள்ளது. இங்கு சேரும் குப்பைகளை தரம் பிரிக்க, கடந்த 2018 -ம் ஆண்டு பயோமைனிங் முறையில், 2.30 லட்சம் கனமீட்டர் அளவுக்கு குப்பையை தரம் பிரிக்க ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இதற்காக ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம் 40,115 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்தி 73,253 கன மீட்டர் குப்பையை அகற்றி உள்ளது.
அதன் பின், புதிய நிறுவனத்துக்கு 2022 ஆகஸ்டில், 1.56 லட்சம் கன மீட்டர் குப்பையை பிரிக்க ரூ.10.60 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது. ஆனால், புதிதாக ஒப்பந்தம் எடுத்த நபர் வெறும் 5,000 கனமீட்டர் குப்பையை மட்டுமே அகற்றி விட்டு, ரூ.10.60 கோடி பில் தொகையை எடுத்துக் கொண்டுள்ளார். அதற்கு, 8,328 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்தியுள்ளனர். இதில் பெரிய அளவில் முறைகேடு நடந்து இருப்பதாக, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் தஞ்சாவூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கோவிந்தராஜ் என்பவரால் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 20 -ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலக்தில் இருந்து, குப்பை கிடங்கு மற்றும் ஸ்மார்ட் திட்ட பணிகள் குறித்த ஆவணங்களை ஆய்வு செய்து, தேவையான ஆணவங்களை எடுத்து சென்றதாக தகவல்கள் வெளியானது. இது தஞ்சாவூர் நகர் முழுவதும் பரவலாக பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில் தஞ்சாவூர் மாநகராட்சியின் முன்னாள் ஆணையர் க.சரவணக்குமார், ஓய்வு பெற்ற செயற்பொறியாளர் ஜெகதீசன், பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ள உதவி பொறியாளர் கார்த்திகேயன், ஒப்பந்தக்காரர் மணிசேகர் ஆகிய நான்கு பேர் மீதும் தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும் இது தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இந்த குப்பைக்கிடங்கு ஊழல்தான் தஞ்சாவூரின் டாக் ஆப் சிட்டியாக உள்ளது.





















