குழந்தைகளுக்கு ஏற்படும் இதய நோய் குறித்து டைனி ஹார்ட்ஸ் மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ருத்துவரை அணுகாமல் நீங்களாகவே எவ்வித மருத்துவமும் குழந்தைக்கு அளிக்கக்கூடாது என்று இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் குறித்து விளக்கம் அளித்தார்.

தஞ்சாவூர்: குழந்தை பிறந்தவுடன் மூச்சுவிட சிரமப்படுவது, நகம் உள்ளிட்ட உடல் நீல நிறமாக இருந்தாலோ, குழந்தை பால் குடிக்க சிரமப்பட்டாலோ அவை இதய நோயின் அறிகுறிகள். உடன் உரிய மருத்துவரை அணுக வேண்டும் என்று தஞ்சாவூர் டைனி ஹார்ட்ஸ் மருத்துவமனையில் நடந்த இதய நோய் குறித்த விழிப்புணர்வு முகாமில் இதய மருத்துவர்கள் வலியுறுத்தினர்.
தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை ராஜப்பா நகரில் இயங்கி வருகிறது டைனி ஹார்ட்ஸ் மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் குழந்தைகளுக்கான பல்வேறு உடல் நல சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. முக்கியமாக 3000 குழந்தைகளுக்கு மேல் பல்வேறு இதய பிரச்னைகளுக்கு இந்த மருத்துவமனை டாக்டர்கள் சிகிச்சை அளித்து அக்குழந்தைகள் நலமுடன் நடமாட செய்துள்ளனர்.

இந்த டைனி ஹார்ட்ஸ் மருத்துவமனையில் பிறவியிலேயே இதய பிரச்னைகள், பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. தஞ்சை மாநகராட்சி துணை மேயர் டாக்டர். அஞ்சுகம் பூபதி குழந்தைகளுக்கான இதய நோய் விழிப்புணர்வு முகாமை துவக்கிவைத்து பேசுகையில், குழந்தை எப்போதும் சோர்வாக இருந்தாலும், விளையாடும்போது தலைச்சுற்றல், மூச்சுத் திணறல் அல்லது மார்பு வலி இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். குழந்தைகளின் இதய நோய் என்பது பெரும்பாலும் பிறப்பு குறைபாடுகளால் (Congenital Heart Defects) ஏற்படுகிறது, இது 100-ல் ஒரு குழந்தையை பாதிக்கிறது. அறிகுறிகளில் நீல நிறத் தோல், உணவளிக்கும் போது மூச்சுத் திணறல், எடை குறைவு மற்றும் விரைவான இதயத் துடிப்பு ஆகியவை அடங்கும். மருத்துவரை அணுகாமல் நீங்களாகவே எவ்வித மருத்துவமும் குழந்தைக்கு அளிக்கக்கூடாது என்று இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் குறித்து விளக்கம் அளித்தார்.
நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் பெற்றோர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு முகாம் குறித்து இதய மருத்துவர் உஷாநந்தினி கூறுகையில், பிறந்த குழந்தைகள் மூச்சுவிட சிரமப்படுவது, நகம் உள்ளிட்ட உடல் முழுவதும் நீல நிறமாக இருக்கும், அதிகமாக வியர்க்கும் இதுபோன்ற அறிகுறி இருக்கும். குழந்தைகளை தாமதிக்காமல் உடனடியாக உரிய மருத்துவரிடம் கொண்டு செல்ல வேண்டும்.
சித்த மருத்துவமோ வேற எந்த கை வைத்தியமும் செய்யக்கூடாது. அது குழந்தைகளின் உயிருடன் விளையாடும் செயலாகிவிடும். எனவே இதய குறைபாடு உடைய குழந்தைகளை விரைவாக உரிய மருத்துவரிடம் கொண்டு சென்றால் மருந்து மூலமும், இதயத்தில் அடைப்பு இருந்தால் அறுவை சிகிச்சையும் செய்து குழந்தைகளை காப்பாற்றிவிடலாம் என்பதை பெற்றோர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
குழந்தைகளுக்கு பொதுவாக ஏற்படும் இதயப் பிரச்சனைகள் முக்கியமாக பிறவி இதயக் குறைபாடுகள் (Congenital Heart Defects - பிறக்கும்போதே இருப்பது) மற்றும் பெறப்பட்ட இதய நோய்கள் (Acquired Heart Diseases - பிறப்பிற்குப் பிறகு ஏற்படுவது) என இரு வகைப்படும். இதில் துவாரங்கள், வால்வு பிரச்சனைகள் மற்றும் தமனிகள் தொடர்பான குறைபாடுகள் அதிகம். இதுபோன்று குழந்தைகளுக்கு ஏற்படும் இதயம் சார்ந்த பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்கு முழுமையான தீர்வுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சையை தஞ்சாவூர் டைனி ஹார்ட்ஸ் மருத்துவமனை மேற்கொண்டு வருகிறது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற பெற்றோர்கள் தரப்பில் கூறுகையில், டைனி ஹார்ட்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதால்தான் இன்று எங்கள் குழந்தை உற்சாகமாக எங்களுடன் ஓடி விளையாடுகிறது. குழந்தைகளின் இதயம் சார்ந்த பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை அளித்து குழந்தைகளை நலம் பெற செய்கின்றனர். இதற்காக இந்த மருத்துவமனை டாக்டர்களுக்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டவர்களாக இருக்கிறோம் என்றனர்.























