100 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் பாரம்பரியம்... திருமுறை நூல்களுக்கு வீடுகளில் ஆரத்தி எடுத்து மரியாதை
கொல்லங்கரை கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் தீபத் திருநாளில் தேவாரம், திருவாசக நுால்களை பெரியவர்கள், சிறுவர்களுக்கு கற்பிக்கும் நிகழ்வு தொடங்குவது வழக்கம்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே கொல்லங்கரை கிராமத்தில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக தேவாரம், திருவாசகம் ஆகிய திருமுறை நுால்களுக்கு வீடுகள் தோறும் மக்கள் ஆரத்தி எடுத்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
தஞ்சாவூர் மாவட்டம் கொல்லங்கரை கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் தீபத் திருநாளில் தேவாரம், திருவாசக நுால்களை பெரியவர்கள், சிறுவர்களுக்கு கற்பிக்கும் நிகழ்வு தொடங்குவது வழக்கம். பின்னர், மார்கழி மாதம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கிராமம் முழுவதும், திருமுறை நுால்களை பாடி வீதியுலாவாக வந்தனர்.

இதையடுத்து தை மாதம் முதல்நாளான பொங்கல் தினத்தில் திருமுறை நுாலையும், திருமுறைகள் பாடியவர்களையும் கெளரவிக்கும் விதமாக, வீடுகள் தோறும் வரவழைத்து அவர்களுக்கு தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை பாக்கு வழங்கி, தீப ஆரத்தி எடுத்தனர்.
இது குறித்து கிராம மக்கள் தரப்பில் கூறுகையில், எங்களது கிராமத்தில், கடந்த 50 ஆண்டுகளுக்கும் முன்பு 30க்கும் மேற்பட்ட திருமுறைகளை பாடும் ஓதுவார்கள் இருந்தனர். நெல்லுப்பட்டு நமச்சிவாய சுவாமிகள் வழிகாட்டுதலில், திருவையாறில் நடைபெறும் சப்தஸ்தான விழாவில் திருமுறைகளை பாடுவதை வழக்கமாக கொண்டு இருந்தனர்.
தற்போது, திருமுறைகளை இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்ல வேண்டும். திருமுறை நுால்களை பாதுகாக்க வேண்டும் என கிராம சிறுவர்களுக்கு கற்றுத்தரப்படுகிறது. அத்துடன், 100 ஆண்டுகளுக்கும் மேலாக திருமுறைகளை அனைவரும் கற்று வருகிறோம். திருமுறைகளை பாடி வருபவர்களையும், திருமுறை நுால்களை கெளவுரவிக்கும் வகையில், வீடுகள் தோறும் மரியாதை செய்வது இன்றும் தொடர்கிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
ட்ரெண்டிங் செய்திகள்






















