வரும் 12ம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்... யார் நடத்தப்போறாங்க? எதுக்காக தெரியுங்களா?
மேகதாது அணை கட்ட எக்காரணம் கொண்டும் அனுமதிக்க கூடாது, விவசாயிகளின் பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்

தஞ்சாவூர்: மேகதாது அணை கட்ட எக்காரணம் கொண்டும் அனுமதிக்க கூடாது, விவசாயிகளின் பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜூலை 12ம் தேதி தஞ்சையில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த மக்கள் விடுதலை கட்சியுடன் எம்சிபிஐ இணைப்பு விழா நிகழ்ச்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கம்யூனிஸ்ட் கட்சி மாலெ மக்கள் விடுதலை கட்சியுடன் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (எம்சிபிஐ) இணைப்பு விழா நிகழ்ச்சி இன்று தஞ்சாவூர் பெசன்ட் அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிபிஎம்எல் மக்கள் விடுதலைக் கட்சியின் சேர்மன் ஜெ.சிதம்பரநாதன் தலைமை வகித்தார். இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன் வரவேற்றார். இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் வே.உமாபதி தலைமையில் சுமார் 200 பேர் மக்கள் விடுதலை கட்சியில் தங்களை இணைத்துக் கொண்ட நிகழ்வு நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து கட்சி மாநில துணைச் செயலாளர் ராமர் தொடக்க உரை நிகழ்த்தினார். பொதுச் செயலாளர் கசி.விடுதலைக்குமரன் சிறப்புரையாற்றினார். மக்கள் விடுதலைக் கட்சியுடன் இணைத்துக் கொண்ட எம்சிபிஐ நிர்வாகிகளையும் உறுப்பினர்களையும் வாழ்த்தி கட்சி மையக்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் மு.நடராஜன், ஜெ.வெண்ணிலா, கந்தசாமி, வீ.வீரக்குமார், செ.அருண்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
கூட்டத்தில் காவிரி டெல்டாவிற்கு பாசனம் அளிக்கின்ற காவிரி நதிநீரை பெங்களூரு நகர் குடிநீர் தேவைக்கு என காரணம் காட்டி தமிழ்நாட்டிற்கு காவிரி நதிநீர் வருவதை தடுக்கும் வகையில் கர்நாடகா அரசு மேகதாதுவில் அணை கட்ட எக்காரணம் கொண்டும் அனுமதிக்க கூடாது. தேர்தல் கால வாக்குறுதி அடிப்படையில் நிபந்தனை இன்றி, பாரபட்சம் இல்லாமல் விவசாயிகள் பயிர்க்கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும், ஜூன் 12ம் தேதி வழக்கம் போல் காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படாததால் குறுவை சாகுபடி பொய்த்து விட்டது. குறுவை சாகுபடி விவசாயிகள் அனைவருக்கும் முழுமையான நிவாரணம் வழங்க வேண்டும்,
பாசன வசதிக்காக நிலத்தடி நீரை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் தங்கு தடையின்றி வழங்க வேண்டும், குறுவை சாகுபடி இல்லாததால் வாழ்வாதாரம் இழந்துள்ள விவசாய தொழிலாளர்களுக்கு ரூபாய் 15,000 ம் நிவாரணம் வழங்க வேண்டும், மகாத்மா காந்தி 100 நாள் வேலைத் திட்டத்தின் பெயரை விபி ஜிராம்ஜி என பெயர் சூட்டப்படுவது கைவிடப்பட வேண்டும். கிராமப்புறங்களில் 100 நாள் வேலை திட்டத்தை உடனடியாக துவக்க வேண்டும்.
வேலை திட்டத்தின் நாட்களை அதிகப்படுத்தியும் சம்பளத்தை ரூ.700 ஆக உயர்த்தியும் வழங்க வேண்டும், தஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் 88 கோயில்கள் உள்ளன. இவை அனைத்தும் பரம்பரை அறங்காவலர் என்று பாபாஜி ராஜா போன்ஸ்லே அனுபவித்து வருகிறார். 88 கோயில்கள் மற்றும் சொத்துக்கள் அனைத்தையும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும், பரம்பரை அறங்காவலர் பதவி ஒழிக்கப்பட வேண்டும்.
கோயில் சொத்துக்களின் விபரங்கள் அனைத்தும் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும், தமிழ்நாடு அரசு பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும். ஒன்றிய அரசு எக்காரணம் கொண்டும் விவசாயிகளுக்கும், நாட்டு மக்களுக்கும் எதிரான வணிக ஒப்பந்தத்தில் கையெழுத்திட கூடாது.
விவசாய விளை பொருட்களுக்கு ஆதார விலை நிர்ணயம் செய்வது சட்டமாக்கப்பட வேண்டும், தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்வி நிதி, ஜிஎஸ்டி வரி நிதி உள்ளிட்ட நிதிகளை நிபந்தனை இன்றி தர வேண்டும், அமெரிக்க வல்லரசு கியூபா நாட்டின் மீது விதித்துள்ள பொருளாதார தடை நீக்குவதற்கு உலக நாடுகள் குரல் கொடுக்க வேண்டும், உணவு, குடிநீர், மருத்துவம், மின்சாரம், எரிபொருள் இல்லாமல் தவிக்கும் கியூபா நாட்டு மக்களுக்கு உலக நாடுகள் உதவிட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் நிர்வாகிகள் வீரமணி, ராஜேந்திரன், மதியழகன், சங்கர், இந்திரஜித், புவனேஸ்வரி, செம்மலர் செல்வி, ஜெயந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மக்கள் விடுதலை மாவட்ட செயலாளர் சா.செந்தில்குமார் நன்றி கூறினார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















