டிகிரி முடித்தவர்களா நீங்கள்... சிறப்பான வேலைவாய்ப்பு அறிவிப்பு உங்களுக்காகவே வெளியாகி இருக்கு!!!
ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த மையத்தில், எழுத்தர் முதல் உதவிப் பேராசிரியர் வரையிலான முக்கியப் பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூர்: மத்திய அரசு வேலைங்க... டிகிரி முடிச்சு இருந்தால் போதும். வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க. கடைசி தேதி வரும் 25ம் தேதி. இன்னைக்கே உங்க விண்ணப்பத்தை அனுப்பிடுங்க.
மத்திய அரசின் மக்கள் தொகை ஆராய்ச்சி மையத்தில் உதவிப் பேராசிரியர், எழுத்தர் உட்பட 6 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளம் ரூ.57,700 வரை. கடைசி நாள்: வரும் நவம்பர் 25, 2025. திறமையும், தகுதியும் உடையவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.
மத்திய அரசின் மக்கள் தொகை ஆராய்ச்சி மையத்தில் (Population Research Centre) நிரப்பப்பட வேண்டிய 6 காலியிடங்களுக்காக தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த மையத்தில், எழுத்தர் முதல் உதவிப் பேராசிரியர் வரையிலான முக்கியப் பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பம் பெறும் செயல்முறை கடந்த அக்டோபர் 25, 2025 அன்று தொடங்கி உள்ளது. வரும் நவம்பர் 25, 2025 அன்று விண்ணப்பம் அனுப்ப கடைசி நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆர்வமும், தகுதியும் உடையவர்கள் இப்போதே விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து அனுப்பிடுங்கள்.
மொத்தம் 6 பணியிடங்களில் பல்வேறு கல்வித் தகுதியுள்ளோருக்கான வாய்ப்புகள் அமைந்துள்ளன. குறிப்பாக, இளங்கலை முடித்தவர்களுக்கான எழுத்தர் (LDC/Typist) பதவிக்கு ரூ.37,747 வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உதவிப் பேராசிரியர் (Assistant Professor) பதவிக்கு ஒரு காலியிடம் உள்ளது. இதற்கு UGC விதிகளின்படி மக்கள் தொகையியல், புள்ளியியல் அல்லது பொருளாதாரம் போன்ற பிரிவுகளில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இப்பதவிக்குரிய சம்பளம் ரூ.57,700 முதல் ரூ.1,82,400 வரை ஆகும்.
ஆராய்ச்சி புலனாய்வாளர் (Research Investigator) பதவிக்கு ஒரு காலியிடம் உள்ளது. மக்கள் தொகையியல், புள்ளியியல் அல்லது சமூகப் பணி பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இப்பதவிக்கான சம்பளம் ரூ.44,570 முதல் ரூ.1,27,480 வரை வழங்கப்படுகிறது.
களம் (அ) புலன் புலனாய்வாளர் (Field Investigator) பதவிக்கு இரண்டு காலியிடங்கள் உள்ளன. மக்கள் தொகையியல், புள்ளியியல் அல்லது பொருளாதாரம் போன்ற பிரிவுகளில் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பது இப்பதவிக்கு அவசியமாகும். இவர்களுக்கான சம்பளம் ரூ.32,670 முதல் ரூ.1,01,970 வரை.
எழுத்தர்/தட்டச்சர் (LDC/TYPIST) பதவிக்கு ஒரு காலியிடம் உள்ளது. இந்தப் பதவிக்கு ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றிருந்தால் போதும். இவர்களுக்கான சம்பளம் ரூ.37,747 ஆகும்.
ஆராய்ச்சி உதவியாளர் – II (Research Fellow – II) பதவிக்கு ஒரு காலியிடம் உள்ளது. மக்கள் தொகையியல், புள்ளியியல் அல்லது சமூகவியல் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு மாதந்தோறும் ரூ.25,000 சம்பளமாக வழங்கப்படும்.
உதவிப் பேராசிரியர் போன்ற பதவிகளுக்கு UGC வழிகாட்டுதலின்படி, மக்கள் தொகையியல் (Demography), புள்ளியியல் (Statistics), பொருளாதாரம் (Economics) போன்ற துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்தர் பதவிக்கு இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் பெற்ற இளங்கலைப் பட்டம் போதுமானது. வயது வரம்பு 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் முதல் 42 வயதுக்கு மேற்படாதவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். இதில் SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு (PwBD) அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
விண்ணப்பதாரர்கள் ஆரம்பத்தில் குறுகிய பட்டியலிடல் (Short Listing) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். அதன் பிறகு, தேர்ந்தெடுக்கப்படும் பதவிக்கேற்ப கணினி திறன் தேர்வு அல்லது நேர்காணல் மூலம் இறுதி நியமனம் நடைபெறும்.
உதவிப் பேராசிரியர், ஆராய்ச்சி புலனாய்வாளர், புலன் புலனாய்வாளர் ஆகிய பதவிகளுக்கு: பொதுப் பிரிவினருக்கு ரூ.1000/-, OBC பிரிவினருக்கு ரூ.500/-, SC/ST/PWD பிரிவினருக்கு ரூ.250/ விண்ணப்பக்கட்டணம். ஆராய்ச்சி உதவியாளர் - II, எழுத்தர் ஆகிய பதவிகளுக்கு: OC/OBC பிரிவினருக்கு ரூ.500/-, SC/ST/PWD பிரிவினருக்கு ரூ.250 விண்ணப்பக்கட்டணம்.
விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள், https://mohfw.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, அதனைப் பூர்த்தி செய்து, பதிவாளர், மத்திய நிர்வாக அலுவலகம், ஆந்திரப் பல்கலைக்கழகம், விசாகப்பட்டினம் - 530003. (The Registrar, Central Administrative Office, Andhra University, Visakhapatnam – 530003.) என்ற முகவரிக்கு வரும் 25, 2025-க்குள் அனுப்பி வைக்க வேண்டும். கால தாமதம் செய்யாமல் விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பத்தை அனுப்பி விடுங்கள்.





















