Dr Ramadoss : அடுத்த மூவ் என்ன? கூட்டணி குறித்து மௌனம் கலைத்த மருத்துவர் ராமதாஸ்!
பாமக யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக விரைவில் முடிவு செய்வோம் - மருத்துவர் ராமதாஸ்

விழுப்புரம்: தமிழக மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் நேர்காணல் இன்று விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் தொடங்கியது. இதில் கலந்துகொண்ட அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், கூட்டணி குறித்து மிக முக்கியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
வேட்பாளர் நேர்காணல்
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நேர்காணல் இன்று தொடங்கியுள்ள நிலையில், கூட்டணி குறித்து அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
கூட்டணி குறித்து விரைவில் முடிவு:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பாட்டாளி மக்கள் கட்சி தனது தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணல் மற்றும் கூட்டணி குறித்த ஆலோசனைகள் விறுவிறுப்படைந்துள்ளன.
4,109 விருப்ப மனுக்கள்: 3 நாட்கள் நேர்காணல்
பாமக ராமதாஸ் தரப்பில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து கடந்த ஜனவரி 9-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலிருந்து மொத்தம் 4,109 பேர் விருப்ப மனுக்களை அளித்துள்ளனர். இந்த மனுதாரர்களுக்கான நேர்காணல் இன்று (ஜனவரி 31) விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் தொடங்கியது. பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், கௌரவத் தலைவர் ஜி.கே. மணி, மற்றும் செயல் தலைவர் காந்திமதி ஆகியோர் முன்னிலையில் இந்த நேர்காணல் நடைபெற்று வருகிறது.
இன்றைய நேர்காணல்:
சென்னை, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 13 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களிடம் இன்று விசாரணை நடத்தப்படுகிறது. இந்த நேர்காணல் இன்று முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ளது.
கூட்டணி குறித்து ராமதாஸ் சொன்னது என்ன?
நேர்காணலின் இடையே செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவர் ராமதாஸ், அரசியல் வட்டாரத்தில் நிலவும் கூட்டணி குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
"பாமக யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக விரைவில் முடிவு செய்வோம். கூட்டணி குறித்து சில கட்சிகள் என்னிடம் பேசியுள்ளன; தற்போது பேசிக்கொண்டும் இருக்கிறார்கள். தொடர்ந்து பேசுவோம்."
திமுக விமர்சனம் குறித்து:
திமுகவை விமர்சித்து சமீபகாலமாக வெளியாகும் அறிக்கைகள் குறித்துக் கேட்டபோது, "அதில் ஒன்றுமில்லை" எனச் சுருக்கமாகப் பதிலளித்தார்.
வெற்றி வாய்ப்பு குறித்து:
கடந்த காலங்களில் வெற்றி பெற்ற தொகுதிகளில் மீண்டும் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு, "நம்பிக்கை அடிப்படையில் தான் இந்த உலகமே இயங்குகிறது" எனத் தனது பாணியில் நம்பிக்கையோடு பதிலளித்தார்.
விருப்ப மனு அளித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் நேர்காணலில் நிலவும் உற்சாகத்தைப் பார்க்கும்போது, பாமக இந்தத் தேர்தலில் ஒரு வலுவான கூட்டணியை அமைத்து களம் காணத் தயாராகி வருவது தெளிவாகத் தெரிகிறது.























