மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: 7வது முறையாக நிரம்பும் அபாயம்! டெல்டா விவசாயிகளுக்கு குஷி!
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 10,374 கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில், அணையின் நீர்மட்டம் 119 அடியாக உயர்ந்துள்ளது.

சேலம் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 10,374 கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில், அணையின் நீர்மட்டம் 119 அடியாக உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர்வு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 10,374 கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில், அணையின் நீர்மட்டம் 119 அடியாக உயர்ந்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை, கர்நாடகா அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பு உள்ளிட்ட காரணங்களால் மேட்டூர் அணை நடப்பாண்டில் ஏற்கெனவே 6 முறை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. காவிரியில் நீர்வரத்து குறைந்தது, அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் சரிந்தது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 9,026 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 10,374 கனஅடியாக அதிகரித்தது. இதனிடையே, கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், டெல்டா மாவட்டங்களில் பாசனத்துக்கான நீர் தேவை குறைந்தது. எனவே, அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 1,000 கனஅடி நீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது. கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
தண்ணீர் திறப்பைவிட நீர்வரத்து அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அணை நீர்மட்டம் 118.55 அடியில் இருந்து 119 அடியாகவும், நீர் இருப்பு 91.17 டிஎம்சியில் இருந்து 91.88 டிஎம்சியாகவும் உயர்ந்துள்ளது. நடப்பாண்டில் 7-வது முறையாக மேட்டூர் அணை நிரம்ப வாய்ப்புள்ளதால், நீர்வளத் துறை அதிகாரிகள், அணையின் 16 கண் மதகு பகுதியில் உள்ள வெள்ளக் கட்டுப்பாட்டு மையத்தில் 24 மணி நேரமும் நீரின் அளவைக் கண்காணித்து வருகின்றனர்.
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தமிழக - கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 8 ஆயிரம் கனஅடியாக வந்தது. இதையடுத்து காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்தது. இதனால் காலை 8 மணி நிலவரப்படி 9,500 கனஅடியாக தண்ணீர் அதிகரித்து வந்தது. இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும் அவர்கள் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் மெயின் அருவியில் குளித்தும், பின்னர் அவர்கள் மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். நீர்வரத்தை தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.





















