ADMK MLA Resigned : ‘ஸ்கெட்ச் போட்ட செங்கோட்டையன், தட்டி தூக்கிய ஆதவ்’ அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தது எப்படி ?
'எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி, வேலுமணி மீது நம்பிக்கையின்மையில் இருக்கும் அதிமுக எம்.எல்.ஏக்கள் சிலரும் விரைவில் ராஜினாமா செய்யவுள்ளனர். அதோடு, த.வெ.க.வில் இணைந்து அதே தொகுதியில் போட்டியிடவுள்ளனர்’

அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் திடீரென ராஜினாமா செய்துவிட்டு, அப்படியே தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளது தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மதுராந்தகம் அதிமுக எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ ஜெயகுமார், தாராபுரம் எம்.எல்.ஏ சத்தியபாமா ஆகிய மூன்று பேரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணியில் இணைந்து செயல்பட்டு வந்தனர். இந்நிலையில், அணி மாறியதுடன் த.வெ.க. ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்த இந்த மூன்று எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட 25 பேரையும் தகுதி நீக்க செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில், தங்களது எம்.எல்.ஏ பதவிகளை துறந்து த.வெ.க.வில் ஐக்கியமாகியிருக்கிறார்கள் இந்த மூன்று பேரும்.
செங்கோட்டையன் ஆலோசனை
தாராபுரம் எம்.எல்.ஏ ஜெயகுமாரும், பெருந்துறை எம்.எல்.ஏ சத்தியபாமாவும் அதிமுகவின் முன்னாள் தலைவரும் தற்போதைய த.வெ.க அமைச்சருமான செங்கோட்டையனிடம் தங்களது எம்.எல்.ஏ பதவிக்கு ஆபத்து வருமா? என கேட்டுள்ளனர். அதற்கு அவர் நிச்சயம் ஆபத்து வரும் என்றும் அதற்கு மாற்றாக மீண்டும் பதவியை பெற ஒரு வழி இருக்கிறது என்று கூறி இவர்கள் இருவரையும் ராஜினாமா செய்யச் சொல்லியிருக்கிறார். கோவை மருத்துவமனையில் படுத்துக்கொண்டே இந்த திட்டத்தை அமல்படுத்தியிருக்கிறார் செங்கோட்டையன். அதோடு, மரகதம் குமரவேலும் சேர இந்த மூவரும் இறுதியாக தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்திருக்கின்றனர். அதோடு, இந்த தொகுதிகளுக்கு வரும் இடைத் தேர்தலில் த.வெ.க. சார்பில் நீங்களே போட்டியிடலாம் என்ற உறுதியும் கொடுக்கப்பட்டிருப்பதால், அந்த பெரும் நம்பிக்கையோடு தங்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயரிடம் கொடுத்திருக்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி ; வேலுமணி மீது நம்பிக்கையில்லை
அதே நேரத்தில் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் எடப்பாடி பழனிசாமி தலைமை மீது அதிருப்தியில் இருந்தவர்கள் வேலுமணி தங்களை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்வார் என்று நம்பி அவர் அணிக்கு தாவினர். ஆனால், அவரும் தற்போது தன்னுடைய நிலைப்பாட்டில் இருந்து சறுக்கி வரும் நிலையிலும் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து தீவிரமாக களமாட முடியாத சூழல் அவருக்கு உருவாகியிருப்பதாலும் அவர் மீதான நம்பிக்கையை இந்த மூன்று எம்.எல்.ஏக்களுகளும் இழந்திருக்கின்றனர்.
ஆதவ் அர்ஜூனா போட்டுக் கொடுத்த திட்டம்
இந்நிலையில்தான் செங்கோட்டையன் வழிகாட்டுதல்படி ஆதவ் அர்ஜூனா இந்த மூன்று பேரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். ஆதவ் அர்ஜூனாவின் நம்பிக்கையான வார்த்தைகளை நம்பி மூவரும் சபாநாயகர் அறைக்கு சென்று ராஜினாமா செய்துவிட்டு, அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அறைக்கு வந்து த.வெ.க.வில் ஐக்கியமாகியிருக்கின்றனர்.
தொடரப்போகும் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா?
த.வெ.க அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் வேலுமணி, சிவி சண்முகம் அறிவுறுத்தலில் விஜய் ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்த பலருக்கும் ஏமாற்றமே பரிசாக கிடைத்திருக்கிறது. அதோடு, தங்களது எம்.எல்.ஏ பதவியும் எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கையால் மதில் மேல் பூனையாக இருக்கும் சூழலில், இவர்களுக்கு அவர்களே மேல் என்ற அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையலாம் என்ற யோசனை தோன்றியிருக்கிறது. அதற்கு தோதாக எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது மாதிரி வேலுமணி ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் பலரிடம் செங்கோட்டையனே நேரடியாக பேச்சுவார்த்தையை தொடர்ந்து நடத்தி வருகிறார். அதனடிப்படையில் பார்த்தால் மேலும் சில அதிமுக எம்.எல்.ஏகள் விரைவில் ராஜினாமா செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்






















