Thirumavalavan: "தர்மேந்திர பிரதான் பாவம்.." திருமாவளவன் திடீரென ஏன் அப்படி பேசினார்?
தர்மேந்திர பிரதான் பாவம் என்றும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவன் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது,
அம்பேத்கர் சிலை:
கடந்த ஆட்சியில் இருந்த போலீஸ் எல்லாம் மாற்றிவிட்டார்கள். இப்போது புது போலீஸ் வந்துவிட்டார்கள். அம்பேத்கர் சிலை வைத்தால் அந்த போலீசும் எடுத்துக்கொண்டுதான் போகிறார்கள். அம்பேத்கர் சிலையை வைத்தால் கடந்த ஆட்சியில் இருந்த போலீஸ் எப்படி ஷீட் வைத்து மறைத்து வைத்தார்களோ? இந்த போலீசும் ஷீட் அடித்து மூடுகிறார்கள். என்ன மாற்றம்?
தர்மேந்திர பிரதான் பாவம்:
அதிகாரிகளை மாற்றுவதால் அமைச்சர்களை மாற்றுவதால் விளைவுகள் மாறுமா? என்றால் மாறாது. நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகள் மாற வேண்டுமானால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். தர்மேந்திர பிரதான் பாவம். பாவம் என்றால் தனிப்பட்ட முறையில் சொல்லவில்லை. அவரைப் பற்றி நமக்கு ஏதும் தெரியாது.
மோடி பதவி விலக வேண்டும்:
ஒரு தனிநபரை மட்டும் பதவி விலகச் சொல்வது என்பது நல்ல விளைவு ஏற்படுத்தாது. அப்படி என்றால் மொத்தத்தில் இந்த அரசு பொறுப்பேற்க வேண்டும். நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என்று சொல்லுங்கள். கடந்த சில ஆண்டுகளில் பல போட்டித் தேர்வுகளில் 152 முறை வினாத்தாள் கசிந்துள்ளது.
அவ்வளவு ஓட்டை, உடைசல் இருக்கிறது. கடைசி ஆள் பியூன் வரை மாற்றினால்தான் முடியும். ஒரு ஆள், இரண்டு ஆளை மாற்றினால் பிரச்சினைகள் தீராது. அந்த அடிப்படையில்தான் விசிக நீட் தேர்வை முழுமையாக திரும்ப பெற வேண்டும்.
நீட் கூடாது:
மாணவர்களை பாடத்திட்டத்தின் கீழ் மூலம் கல்வி கற்கவிடாமல் பயிற்சி வகுப்புகள் மூலம் தேர்வு எழுதுகின்ற நிலையை உருவாக்கி போட்டி உளவியலை உருவாக்கி மன அழுத்தத்தை உருவாக்கி அதன் மூலம் பல உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிற திட்டம். நீட் கூடாது என்பதுதான் நமது ஒற்றை முழக்கம். இப்போ இருக்கும் அதிகாரியை தூக்கிப்போட்டு புது அதிகாரியை போட்டாலும் அதுதான் நடக்கப்போகிறது.
தமிழ் தேசியம் என்ற அரசியல் நாளைக்கே வென்று எடுக்கும் அரசியல் என்று நான் சொல்லவில்லை. அந்த அரசியல் என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். தெரிந்து கொள்ள வேண்டும். தேசியவாதம் என்ற தெளிவு நமக்குத் தேவை. தேர்தல் களத்தில் இருந்தாலும் கருத்தியல் களத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
டெல்லியில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தை கண்டித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி மிகப்பெரிய போராட்டம் நடந்து வருகிறது. தமிழ்நாட்டிலும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது.
Before You Go
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
ட்ரெண்டிங் செய்திகள்






















