ஹேப்பி நியூஸ்! ‘புண்ணிய பூமி காப்பாற்றப்பட்டுள்ளது’ - டங்ஸ்டன் ஏலம் ரத்து – மத்திய அரசு அதிரடி உத்தரவு
அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் கடந்த 9ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி டங்க்ஸ்டன் ஏலம் ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டியில் டங்க்ஸ்டன் சுரங்கம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி ஏலத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் தோண்ட கடந்த ஆண்டு ஏலம் விடப்பட்டிருந்தது. இந்த ஏலத்தை வேதாந்தா நிறுவனத்துக்கு மத்திய அரசு வழங்கியிருந்தது. பொதுமக்கள் தொடர்ந்து அங்கு சுரங்கம் தோண்ட எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தற்போது வேதாந்தா நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஏல உரிமை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதனிடையே அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் கடந்த 9ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் எக்காரணத்தை கொண்டு தமிழ்நாட்டில் டங்ஸ்டன் சுரங்கம் அமையாது எனவும் அப்படி அமைந்தால் நான் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் உறுதியளித்திருந்தார்.
இதுமட்டுமில்லாமல் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். மேலும் நாடாளுமன்றத்திலும் எம்.பிக்கள் தொடர்ந்து சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
இதுதொடர்பாக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து பொதுமக்களோடு கைகோர்த்து நின்றனர். இதையடுத்து குறிப்பிட்ட இடத்தில் சுரங்க பணியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் இந்த திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூட நேற்றைய தினம் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
இந்நிலையில், மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, வேதாந்தா நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். பிரதமர் மோடி தலமையிலான அரசு பாரம்பரிய தலங்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பையடுத்து அரிட்டாப்பட்டி மக்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து செய்யப்பட்டிருப்பதன் மூலம் எங்கள் புண்ணிய பூமி காப்பாற்றப்பட்டுள்ளது. இனி இன்று இரவு நாங்கள் நிம்மதியாக தூங்குவோம். பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி”என தெரிவித்துள்ளனர்.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

