TN Weather Update: வடமாவட்டங்களை ஏமாற்றிப்போன டிட்வா புயல், கனமழை தொடருமா? தமிழக வானிலை அறிக்கை
TN weather Ditwah Cyclone Update: (01-12-2025): தமிழ்நாட்டில் இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

TN weather Ditwah Cyclone Update: (01-12-2025): டிட்வா புயல் வலுவிழந்துள்ள நிலையில், சென்னையில் அதிகாலை முதலே லேசான சூறைக்காற்று வீசி வருகிறது.
டிட்வா புயல் நிலவரம்:
வானிலை மையம் இன்று அதிகாலை வெளியிட்ட 2.30 மணி நிலவரப்படி, “ டிட்வா புயலானது தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய வடக்கு தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரைகளில் கடந்த 6 மணி நேரத்தில் 10 கிமீ வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து, நேற்று, நவம்பர் 30, 2025 அன்று 2330 மணி இந்திய நேரப்படி அதே பகுதியில் மையம் கொண்டது, அட்சரேகை 12.3°வடக்கு மற்றும் தீர்க்கரேகை 80.6°கிழக்கு அருகில், சென்னை (இந்தியா) க்கு தென்கிழக்கே சுமார் 90 கிமீ, புதுச்சேரி (இந்தியா) க்கு கிழக்கு-தென்கிழக்கே 90 கிமீ, கடலூர் (இந்தியா) க்கு கிழக்கு-வடகிழக்கே 110 கிமீ, காரைக்காலுக்கு வடகிழக்கே 180 கிமீ. வடக்கு தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரைகளில் இருந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் மையத்தின் குறைந்தபட்ச தூரம் சுமார் 50 கிமீ ஆகும்.
இது வட தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரைகளுக்கு இணையாக கிட்டத்தட்ட வடக்கு நோக்கி நகர்ந்து, டிசம்பர் 01 அன்று நண்பகலில் படிப்படியாக மேலும் பலவீனமடைய வாய்ப்புள்ளது. இந்த அமைப்பு டிசம்பர் 01 ஆம் தேதி இன்று காலை தென்மேற்கு வங்காள விரிகுடாவில் குறைந்தபட்சம் 30 கி.மீ தூரத்திற்குள் மையம் கொண்டிருக்கும். காரைக்கால் மற்றும் சென்னையில் உள்ள டாப்ளர் வானிலை ரேடார்கள் (DWRs) மூலம் இந்த அமைப்பு கண்காணிக்கப்படுகிறது.
கனமழை தொடருமா?
தமிழகம் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது, இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்றபடி தற்போதைய சூழலில் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பில்லை என கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயலால் காவிரி படுகையை ஒட்டிய டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பதிவானலும், வடமாவட்டங்களில் பெரிய அளவில் மழையின் தாக்கல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கடந்த இரண்டு நாட்களும் ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு இருந்த நிலையில் அதற்கான சுவடே இல்லாமல் போனது குறிப்பிடத்தக்கது.
சென்னை நிலவரம் என்ன?
சென்னையில் மேகமூட்டமான சூழல் நிலவுவதோடு, அவ்வப்போது லேசான தூறல் விழுந்து வருகிறது.இடையிடையே குளிர்காற்றும் வீசி வருகிறது. காற்றழுத்த தாழ்வு நிலையானது சென்னையை ஒட்டி இருப்பதால், இடையிடையே நகர்ப்பகுதியில் குளிர்காற்றும் வீசி வருகிறது. இதனால் அதிகாலையில் வேலைக்கு செல்வோர் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்வோர் அவதிக்குள்ளாகினர்.
சூறைக்காற்றுக்கு வாய்ப்பு?
வடக்கு கடலோர தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மணிக்கு 60-70 கிமீ முதல் 80 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளது. மேலும் வடக்கு கடலோர தமிழகத்தின் அருகிலுள்ள மாவட்டங்கள் மற்றும் தெற்கு கடலோர தமிழகத்தின் தெற்கு கடலோர மாவட்டங்களில் மணிக்கு 55-65 கிமீ முதல் 75 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது” என வானிலை மையம் எச்சரித்துள்ளது.






















