Minister Ramesh: விஜய் சாதி பார்த்து அறநிலையத்துறை கொடுத்தாரா? - கொந்தளித்த அமைச்சர் ரமேஷ்!
தமிழக அமைச்சரவையில் ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ., ரமேஷுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது மிகப்பெரிய அளவில் சர்ச்சைகளை தூண்டியது. ரமேஷ் பிராமணர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் எதிர்ப்பு கிளம்பியது.

முதலமைச்சர் விஜய்க்கு சாதி, மதம் பார்த்து ஒருவருக்கு வாய்ப்பளிக்கும் பிரிவினை எண்ணம் துளியும் கிடையாது என அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடைபெற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அவர் தலைமையிலான அமைச்சரவையில் காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளும் இணைந்துள்ளது. இதனிடையே கடந்த மே 21ம் தேதி தமிழக அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றது. அப்போது 21 தவெக எம்.எல்.ஏ.,க்கள் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அன்றைய நாளிலேயே அவர்களுக்கான துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதில் ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ., ரமேஷுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது மிகப்பெரிய அளவில் சர்ச்சைகளை தூண்டியது. ஒரு பிராமணர் சமூகத்தைச் சேர்ந்த நபருக்கு அந்த துறையில் வாய்ப்பளிக்கக்கூடாது என திராவிட கழகத்தலைவர் கீ.வீரமணி கொந்தளித்தார். ஆனால் முக்கால் நூற்றாண்டுக்குப் பின் பிராமண சமூகத்தில் இருப்பவருக்கு அந்த துறை ஒதுக்கப்பட்டுள்ளது மாற்றமாக பார்க்கப்படுவதாகவும் சமூக வலைத்தளங்களில் பலரும் தெரிவித்தனர்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷிடம், நீங்கள் பிராமணர் என்ற ஒரே காரணத்துக்காக உங்களுக்கு இந்த துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது என்பது பற்றி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “நம்முடைய தவெக அரசின் கொள்கையாக மதச்சார்பற்ற சமூக நீதி உள்ளது. தந்தை பெரியாரின் இந்த கொள்கையை ஏற்றுக்கொண்டு சமூகத்தில் இருக்கக்கூடிய சாதிய வேற்றுமைகளை களைய வேண்டும், அவை இருக்கக்கூடாது என தன்னுடைய இறுதிக்காலம் வரைக்கும் போராடியவரின் கொள்கையை ஏற்று தவெகவில் இணைந்து பணியாற்றியவர்கள் நாங்கள். அனைவருக்கும் சம உரிமை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்தியாவில் மாபெரும் சட்டபுரட்சியை ஏற்படுத்திய அம்பேத்கரின் கொள்கைகளை நாங்கள் ஏற்றுக்கொண்டவர்கள்.
எங்களுக்கு மதமோ, சாதியோ, இனமோ, பணமோ, மொழியோ, பாலினமோ எந்தவித பாகுபாடும் கிடையாது என்பதை உறுதியாக ஏற்றுக்கொண்டு தான் தவெகவில் சேர்ந்திருக்கிறோம். அதனால் எதைப் பார்த்தும் தலைவர் விஜய் வாய்ப்பு கொடுக்கவில்லை. சேவை செய்யக்கூடிய மனநிலை இருக்கிறதா என்பதை பார்த்து தான் வாய்ப்பு வழங்கினார். சாதியை வைத்து பேச வேண்டிய அவசியம் இல்லை. மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய எண்ணம் இருப்பதை மட்டும் பாருங்கள்.
மக்கள் ரமேஷ் என்ற எம்.எல்.ஏ.,வுக்காக வாக்களிக்கவில்லை. அனைவரும் எங்கள் தலைவர் முதலமைச்சர் விஜய்க்காக தான் வாக்களித்தார்கள். திரையில் அவர் வரும்போது யாரும் சாதி, மதம் அடிப்படையில் பார்க்கவில்லை. அவர்களை தங்கள் வீட்டில் ஒருவராக தான் பார்த்தார்கள். விஜய் நிறுத்திய வேட்பாளர்களையும், அமைச்சர்களையும் அப்படித்தான் மக்கள் பார்க்கிறார்கள். அவருக்கு இதுபோன்று பிரிவினை பார்க்கக்கூடிய எண்ணம் துளியும் கிடையாது" என அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
Before You Go
BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
ட்ரெண்டிங் செய்திகள்





















