Pongal Gift: பொங்கலுக்கு கொட்டப்போகுது பரிசு மழை.! ஒரு ரேஷன் கார்டுக்கு ரூ.5ஆயிரமா.? அரசின் முடிவு என்ன.?
சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பாக தமிழக அரசு 5ஆயிரம் ரூபாய் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், இது சாத்தியமா.? தமிழக அரசு கூறுவதென்ன.? என்பதை பார்ப்போம்.

பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்
தமிழர்களின் முக்கிய திருநாள் தை பொங்கலாகும், சூரியன், இயற்கை, கால்நடைகள் மற்றும் அறுவடைக்கு நன்றி செலுத்துவதே இந்த திருவிழாவில் முக்கிய நோக்கமாக உள்ளது. இது தை மாதத்தில் (ஜனவரி மாதம்) 4 நாட்கள் தொடர்ந்து விமர்சையாக கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய விழாவாகவும் உள்ளது. எனவே பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடுதற்காகவே வெளியூரில் பணியாற்றுபவர்கள் தங்களது சொந்த ஊரில் உறவினர்கள், நண்பர்களோடு இணைந்து கொண்டாடுவார்கள்.
பொங்கல் பரிசு தொகுப்புகள்
எனவே தமிழக அரசும் பொங்கல் பண்டிகையையொட்டி பரிசு தொகுப்பையும் ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக வந்த பொங்கல் பண்டிகையின் போது அதிமுக அரசு சார்பாக பொங்கல் பரிசாக 2500 ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் அரிசி, சக்கரை. கரும்பு, வேட்டி மற்றும் சேலை வழங்கப்பட்டது. இதனையடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு 2022ஆம் ஆண்டு திமுக அரசு பொங்கல் பண்டிகைக்காக 20 பொருட்கள் கொண்ட தொகுப்பை வழங்கியது. அரிசி, சர்க்கரை, கரும்பு, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், கடலைப்பருப்பு, கடுகு, மிளகு, துளசி, சீரகம், கடலை மாவு, காபி பொடி போன்றவை வழங்கப்பட்டது. ஆனால் இந்த பரிசு பொருட்களில் தரம் இல்லையென பொதுமக்களால் விமர்சிக்கப்பட்டது.
இதனையடுத்து 2023 மற்றும் 2024ஆம் ஆண்டில் திமுக அரசு ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் சக்கரை, பச்சரிசி,கரும்பு, வேட்டி மற்றும் சேலை வழங்கியது. ஆனால் கடந்த 2025ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது தமிழக அரசு நிதி பற்றாக்குறை காரணமாக ஆயிரம் ரூபாய் வழங்கவில்லை. வேட்டி, சேலை, பச்சரிசி, சக்கரை மற்றும் கரும்பு மட்டுமே பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கியது. இந்த நிலையில் வருகிற 2026ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அரசு சார்பாக ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் 5ஆயிரம் ரூபாய் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொங்கல் பரிசாக 5ஆயிரம் ரூபாயா.?
இதனால் பொதுமக்கள் சந்தோஷத்தில் துள்ளி குதித்து வருகிறார்கள். இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது 2026ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே மக்களின் வாக்கை கவர்வதற்காக திமுக அரசு 5000 ரூபாய் வழங்கும் என தகவல் கூறப்படுகிறது. இது தொடர்பாக தமிழக அரசு அதிகாரிகள் கூறும் போது தற்போது வரை 5ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான எந்த முடிவையும் அரசு எடுக்கவில்லை. ஏற்கனவே நிதி பற்றாக்குறையால் அரசு திணறி வருகிறது. ஒரு குடும்பத்திற்கு 5ஆயிரம் என அறிவிப்பு வெளியிட்டால் சுமார் 12ஆயிரம் கோடி அளவிற்கு நிதி ஒதுக்க வேண்டிய நிலை உருவாகும்.
தமிழக அரசின் நிதி பற்றாக்குறை
மேலும் மகளிர் உரிமை தொகை கேட்டு புதிதாக 30 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கும் கூடுதலாக பணம் ஒதுக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே பொங்கல் பரிசு தொகுப்பாக 5ஆயிரம் ரூபாய் வழங்குவது சந்தேகம் தான் என தெரிவிக்கின்றனர். அதே நேரம் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு 1000 அல்லது 2500 ரூபாய் பணம் பரிசாக வழங்க வாய்ப்பு இருப்பதாகவும், இது தொடர்பாக டிசம்பர் மாதம் மத்தியில் நடைபெறும் கூட்டத்தில் தான் முடிவெடுக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.





















