CM Joseph Vijay: திமுகவினரை சூடாக்கிய அந்த ஒற்றை வார்த்தை... சம்பவம் செய்த முதல்வர் விஜய்.. கலவரமான சட்டசபை!
டாஸ்மாக்கில் கட்சி நிதி என்ற பெயரில் அடித்த கொள்ளை எல்லாம் தமிழக அரசின் கஜானாவுக்கு வந்து கொண்டிருக்கிறது என விஜய் சொன்னதும், எதிர்க்கட்சியான திமுக கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது.

டாஸ்மாக் ஊழல் விவகாரத்தைப் பற்றி சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் பேசியதற்கு திமுக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் அதிருப்தியடைந்த முதலமைச்சர் விஜய் கடுமையான பதிலடி கொடுத்தார்.
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது முதலமைச்சர் விஜயின் பதிலுரை நிகழ்ந்தது. தொடக்கத்தில் மிகவும் சாந்தமாக தவெக கட்சி வளர்ந்த விதம், ஆட்சியைப் பிடித்த விதம் பற்றி பேசினார். தொடர்ந்து ஆட்சிக்கு வந்த பிறகு எதிர்க்கட்சிகளின் விமர்சனம் பற்றி பதிலளித்தார்.
அப்போது, “நம் அரசின் நிர்வாக திறன் பற்றி பேசுபவர்களுக்கு ஒரு விஷயம் சொல்கிறேன். ஊரை அடித்து உலையில் போட்டு விட்டு அதிலிருந்து தப்பிப்பது தான் நிர்வாக திறன் என்றால் அதனை தவெக ஒருநாளும் செய்யாது. பெட்டி பெட்டியாக பணத்தை வைத்துக் கொண்டு போதைப்பொருள் பாதுகாவல் கழக மாடல் அரசு செய்த ஒவ்வொரு ஊழலாக வெளியே வந்துக் கொண்டிருக்கிறது. டாஸ்மாக்கில் கட்சி நிதி என்ற பெயரில் அடித்த கொள்ளை எல்லாம் தமிழக அரசின் கஜானாவுக்கு வந்து கொண்டிருக்கிறது” என சொன்னார்.
அவ்வளவு தான் திமுக எம்.எல்.ஏ.க்கள் கொதித்தெழுந்து விட்டனர். முதலமைச்சர் விஜய் பேசிய கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். குறுக்கிட்ட ஜேசிடி பிரபாகர், முதலமைச்சர் பேசும்போது குறுக்கிட வேண்டாம். குறிப்பெடுத்து பேசிய அவர் பேசிய பின்னர் கருத்து கூறலாம் என தெரிவித்தார். ஆனால் தொடர்ந்து திமுகவின் கூச்சலிட்டதால் அவையில் பெரும் குழப்பம் நிலவியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தவெக தரப்பு எம்.எல்.ஏ.க்களும் எழுந்து ஆவேசமாக எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை சபாநாயகர் சமாதானம் செய்தனர்.
தொடர்ந்து பேசிய அவை முன்னவர், நேற்றைக்கு எதிர்க்கட்சி தலைவர் பேசும்போது குறுக்கிடாமல் தவெக தரப்பினர் அமைதி காத்தனர். அதனால் குறிப்பெடுத்து பின்னர் பேச வேண்டும் என கேட்டுக் கொண்டார். தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் எழுந்து முதலமைச்சர் விஜய் பேசும் வரை அமைதியாக இருங்கள் என திமுகவை கேட்டுக்கொண்டார். இதன்பின்னர் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா எழுந்து, முதலமைச்சர் கட்சி பெயரை குறிப்பிடவில்லை என விளக்கம் கொடுத்தும் திமுக கேட்கவில்லை.
ஒரு கட்டத்தின் டென்ஷனான முதலமைச்சர் விஜய், “டாஸ்மாக் போல பல துறைகளிலும் கட்சி நிதி என்ற பெயரில் அடித்த கொள்ளையை தமிழக அரசு கருவூலத்திற்கு வந்துள்ளது. மக்கள் பணத்தில் இருந்து ஒரு பைசா தொடமாட்டோம், தொட்டா விடமாட்டோம், தொடவும் விடமாட்டோம், இதற்கு முன்னால் தொட்டவர்களையும் விட மாட்டோம். ஒவ்வொரு ஊழலாக வெளியே வரும் போல, வேஷம் கலையும் போல, இங்கிருக்கும் நிறைய பேர் நடுங்கி போய் இருக்கிறார்கள். மக்கள் தயவால் தான் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது” என தெரிவித்தார்.
Before You Go
"வேதனையில் இருக்கும் சிறுவனை இப்டியா இமிடேட் செய்வது" கொந்தளித்த TRB ராஜா
ட்ரெண்டிங் செய்திகள்






















