Tiruchendur: “நிம்மதியா சாமி கும்பிட விடுங்க” .. திருச்செந்தூர் கோயில் கட்டணங்களை பல மடங்கு உயர்த்த முடிவு!
முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறது. ஏற்கனவே அங்கு தரிசனம் செய்ய கட்டாய வசூல் நடைபெற்ற நிலையில், தற்போது கோயில் நிர்வாகம் சேவை கட்டணங்களை பல மடங்கு உயர்த்தியுள்ளது.

புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலின் பல்வேறு சேவை கட்டணங்களை உயர்த்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
திருச்செந்தூர் முருகன் கோயில்
தமிழ் கடவுளாக கொண்டாடப்படும் முருகப்பெருமானுக்கு தமிழ்நாட்டில் அறுபடை வீடுகள் உள்ளது. மற்ற 5 படை வீடுகளும் மலைக்குன்று மேல் உள்ள நிலையில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் மட்டும் நிலப்பரப்பில், கடல் சார்ந்த ஸ்தலமாக உள்ளது. ஆன்மிகத்தில் சிறந்த குரு ஸ்தலமாகவும் திருச்செந்தூர் திகழ்கிறது. இத்தகைய வழிபாட்டு தலத்துக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். எந்நேரம் திருச்செந்தூர் சென்றாலும் மக்கள் கூட்டத்தைக் காணலாம். அந்த அளவுக்கு தங்கள் இன்னல்கள் தீர வேண்டும் என பலரும் வருகை தருகின்றனர்.
சேவைக் கட்டணம் இரு மடங்கு உயர்வு
இப்படியான நிலையில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சேவைக் கட்டணங்கள் இரண்டு மடங்கு உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள பதிவில், “திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெறும் கட்டணச் சேவைகள், அபிஷேக சிறப்பு தரிசனக் கட்டணம் ஆகியவை கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்த விலைவாசியின்படி கணக்கிடப்பட்டு அப்போதைய நிலையில் கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
தற்போது, அதிகளவு உயர்ந்துள்ள விலைவாசி மற்றும் பணவீக்கத்தை கருத்தில் கொண்டும். இத்திருக்கோயிலுக்கு ஏற்பட்டு வரும் வருவாய்க் குறைவினை ஈடுசெய்திடும் வகையிலும், நிர்வாக நலன் கருதியும், தக்கார் தீர்மானத்தின் அடிப்படையிலும் தற்போதுள்ள கட்டணச் சேவை கட்டணங்கள் மற்றும் அபிஷேக சிறப்பு தரிசனக் கட்டணம் கீழ்க்கண்ட விவரப்படி உயர்வு செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழைய கட்டணம் - புதிய கட்டணம் விவரம்
| ஒருநாள் | கட்டணம் | நிரந்தர | வைப்பு நிதி | ||
| வ.எண் | விவரம் | பழைய கட்டணம் | புதிய கட்டணம் | தற்சமய கட்டணம் | புதிய உயர்வு |
| 1 | தங்கரத உலா திட்டம் | ரூ. 2,500 | ரூ.5,000 | ரூ.25,000 | ரூ.5000 |
| 2 | சண்முகார்ச்சனை | ரூ. 5,000 | ரூ.30,000 | ரூ.72,000 | ரூ.4,32,000 |
| 3 | அருள்மிகு மூலவர் அபிஷேகம் | ரூ.1,500 | ரூ.10,000 (இரண்டு நபர்கள் அபிஷேக தரிசனம் சேர்த்து) | - | - |
| 4 | ஒன்பது காலபூஜை | ரூ.1,500 | ரூ.6,500 | ரூ.20,000 | ரூ.90,000 |
| 5 | சந்தனக்காப்பு (லேபனம்) (அனுமதிக் கட்டணம் | ரூ.100 மற்றும் 1.5 கிலோ சந்தனக் | ரூ.1,000 மற்றும் 1.5 கிலோ சந்தனக் | - | - |
| 6 | அபிஷேக தரிசனக் கட்டணம் | ரூ.500 (சாதாரண நாட்கள்) | ரூ.2,500 | - | - |
ஏதேனும் ஆட்சேபனை இந்த கட்டண உயர்வு விகிதத்தில் இருந்தால் வரும் ஜூலை 7ம் தேதிக்குள் பக்தர்கள் மற்றும் பொது மக்கள் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















