ஆரஞ்சு + மஞ்சள் அலர்ட்: இன்று மாலை 24 மாவட்டங்களில் மழை இருக்கு! - வானிலை மையம்
Tamilnadu Weather Updates: தமிழ்நாட்டில் இன்று மாலைவரை 24 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இன்று மாலை 5.30 மணிவரை 24 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதில் சில மாவட்டங்களில் மஞ்சள் அலர்ட்டும், சில மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், மயிலாடுதுறை, ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட்டு விடுக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து, திருவண்ணாமலை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் காரைக்காலிலும் மாலை 5.30 மணிவரையில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) April 18, 2025
அடுத்த ஏழு தினங்களுக்கு வானிலை முன்னறிவிப்பு
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
இந்நிலையில் 18-04-2025 மற்றும் 19-04-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 20-04-2025 முதல் 24-04-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
தமிழகத்தில் 18-04-2025 முதல் 20-04-2025 வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2-3° செல்சியஸ் வரை உயரக்கூடும். இதையடுத்து 21-04-2025 மற்றும் 22-04-2025 வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை :
இன்று (18-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸ் ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (19-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸ் ஒட்டியும். குறைந்தபட்ச வெப்பநிலை 27-28" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
தமிழக கடலோர பகுதிகளில் 18-04-2025 முதல் 21-04-2025 வரை எச்சரிக்கை ஏதுமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
22-04-2025 நாளில் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.ஆகையால், மேற்குறிப்பிட்ட நாளில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

