“மாட்டுக்கறி சாப்பிடலாம்; ஆனால் கோமியம்....” - காமகோடிக்கு ஆதரவாக களமிறங்கிய தமிழிசை
ஆராய்ச்சி பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. கோமியம் டாஸ்மாக்கை விட கெடுதல் இல்லை.

வேங்கைவயலில் குடிக்கின்ற தண்ணீரில் மலம் கலந்தால் அது உங்களுக்கு குற்றமில்லை. ஆனால் கோமியம் மருந்து என்று சொன்னால் அதை எதிர்க்கிறீர்கள் என தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சவுந்திரராஜன்,
“கோமியத்தை அமிர்த நீர் என்றே குறிப்பிடுகிறார்கள். ஆராய்ச்சி பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
அதனால்தான் அதை வீட்டின் முன்பு தெளிப்பார்கள். ஆயுர்வேதத்தில் மருந்தாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. தமிழ்நாட்டில் சங்க இலக்கியத்தில் சொல்லப்பட்டிருக்கு. மாட்டு சாணத்தில் கிருமி நாசினி இருக்கு என்றால் கோமியத்திலும் கிருமி நாசினி இருக்கு. ஒட்டுமொத்தமாக இதை புறந்தள்ள முடியாது. 80 வகையான நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தலாம் என்று ஆயுர்வேதத்தில் சொல்லப்பட்டிருக்கு. காமகோடி சொன்ன காய்ச்சல் அதில் ஒன்றாக இருந்திருக்கலாம்.
என் உணவு என் உரிமை என்று நீங்கள் சொல்கிறீர்கள். மாட்டுக்கறியை ஒரு அலுவலகத்தில் தூக்கி வீசுகிறீர்கள். இதில் அது மருந்து என சொல்லும்போது ஏன் மறுக்கிறீர்கள். இந்திய பண்பாட்டு முறைகள் என்று பாஜக எது சொன்னாலும் அதை ஒப்புக்கொள்ள மாட்டோம். படித்தவர். அவருக்கு என்ன உள்நோக்கம் இருக்க முடியும். பஞ்சகவ்யம் என்பது இன்று அமேசானிலேயே கிடைக்கிறது. இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று. கோமியம் டாஸ்மாக்கை விட கெடுதல் இல்லை” எனத் தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக மேடை ஒன்றில் பேசிய தமிழிசை “மாட்டுக்கறியை சாப்பிடுவீர்கள், ஆனால் கோமியத்தை மருந்தாக எடுத்துக்கொள்ளலாம் என்று சொன்னால் தமிழ்நாட்டில் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
வேங்கைவயலில் குடிக்கின்ற தண்ணீரில் மலம் கலந்தால் அது உங்களுக்கு குற்றமில்லை. ஆனால் கோமியம் மருந்து என்று சொன்னால் அதை எதிர்க்கிறீர்கள்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, கோமியம் குடித்ததால் தந்தைக்கு ஏற்பட்ட காய்ச்சல் குணமானது என்றும், கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது எனவும் காமகோடி பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து மீண்டும் கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது எனவும் அதற்கு ஆதாரம் இருக்கிறது எனவும் ஐஐடி காமகோடி கூறியிருந்தார்.
இதுகுறித்து பேசிய ஐஐடி இயக்குநர் காமகோடி “பண்டிகையின்போது நான் பஞ்சகவ்யம் உண்பது வழக்கம். பஞ்சகவ்யத்தில் மருத்துவ குணங்கள் உள்ளது என்பதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. மாட்டுச் சாணம், கோமியம், பால், தயிர், நெய் ஆகியவை கலந்ததே பஞ்சகவ்யம். கோமியம் தொடர்பாக சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும். கோமியத்தை குடித்தால் உடல்நல பாதிப்பு ஏற்படும் என வெளிவந்துள்ள ஆராய்ச்சி குறித்து நான் படிக்கவில்லை.
அமெரிக்காவில் வெளியான இதழ்களில் பஞ்சகவ்யத்தில் எதிர்ப்பு சக்தி உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.
இதனிடையே மாட்டுச் சாணம் மூலம் ஏராளமான பாதிப்புகள் வரும் என சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மருத்துவர் ரவீந்தர் கூறுகையில், “மாட்டுச் சாணம் சாப்பிடுவது அவர்களின் தனிப்பட்ட விருப்பம், மக்களிடம் அதை ஏன் சொல்ல வேண்டும்? கோமியத்தில் எந்தவிதமான மருத்துவ குணங்களும் இல்லை. ஆய்வுகள் மூலம் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. அறிவியல் உண்மைகளை மறைத்து தவறான தகவலை பரப்புகிறார்கள்” எனத் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

