‛வானிலை மைய கருவிகள் மாற்றப்பட வேண்டும்: மீண்டும் நினைவூட்டுகிறேன்..’ -முதல்வர் ஸ்டாலின் பேட்டி!
‛‛10 ஆண்டுகளாக குட்டிச்சுவர் ஆக்கி வைத்திருக்கிறார்கள். அடுத்த மழை வருவதற்குள் அனைத்தையும் சரி செய்து விடுவோம்,’’ -முதல்வர்
சென்னையில் நேற்று திடீரென கொட்டித்தீர்த்த கனமழையால், மாநகர் முழுதும் முடங்கியது. தெருக்கள் பல மழை நீரில் மூழ்ந்தன. சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின.போக்குவரத்து ஸ்தம்பித்தது. மின் வினியோகம் பாதித்தது. இப்படி பல்வேறு சிரமங்களை பொதுமக்கள் சந்திக்க, முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியாகாததும் ஒரு காரணமாக கூறப்பட்டது. இந்நிலையில், நேற்று திருச்சியில் திமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், உடனே சென்னை திரும்பினார்.
சென்னை, பாரிமுனை அருகில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளநீரை மோட்டார் கொண்டு வெளியேற்றும் பணிகளை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் பார்வையிட்டார். pic.twitter.com/YA9A3lZaJ4
— CMOTamilNadu (@CMOTamilnadu) December 30, 2021
சென்னை திரும்பிய அவர், நள்ளிரவில் மழை பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். உடனடியாக மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கைகளை துரிதப்படுத்திய முதல்வர் ஸ்டாலின், இன்று காலை அப்பணிகளை ஆய்வு செய்ய புறப்பட்டார்.
கனமழையால் சென்னை மாநகரில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து, சென்னை ரிப்பன் மாளிகை, பெருநகர சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். pic.twitter.com/8aQmtjY2GE
— CMOTamilNadu (@CMOTamilnadu) December 30, 2021
அமைச்சர்கள் நேரு, சுப்பிரமணியன் மற்றும் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் உடன் சென்றனர். முன்னதாக கனமழை பாதிப்பு காரணமாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தின் கல்லூரிகள், அரசு அலுவலங்களுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிட்டார்.
கனமழை காரணமாக இன்று 31.12.2021 ஒரு நாள் மட்டும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அத்தியாவசிய சேவைகள் தவிர, அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் பள்ளிகள், கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் உத்தரவிட்டுள்ளார். pic.twitter.com/Yshi6qEZoA
— CMOTamilNadu (@CMOTamilnadu) December 31, 2021
சென்னை ஆழ்வார்பேட்டையில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பேசிய அவர், ‛பேய் மழை பெய்திருக்கிறது. திருச்சியில் இருந்ததும், நேரடியாக சென்று ஆலோசனை நடத்தினேன். நீரை வெளியேற்றும் பணிகள் இன்று முடிந்துவிடும். வானிலை அறிக்கை பெறுவதில் இயந்திரங்கள் மாற்ற வேண்டியது மத்திய அரசின் வேலை. மீண்டும் அதை நினைவூட்டுகிறேன். மீண்டும் தேங்கிய இடத்திலேயே மழை நீர் தேங்க காரணம், 10 ஆண்டுகளாக குட்டிச்சுவர் ஆக்கி வைத்திருக்கிறார்கள். அடுத்த மழை வருவதற்குள் அனைத்தையும் சரி செய்து விடுவோம்,’’ என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்