![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Annamalai: "கள்ளச்சாராயம் விற்பனைக்கு காரணம்.." அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை அடுக்கிய அண்ணாமலை..!
மரக்காணத்தில் கலப்பட சாராயம் குடித்து உயிரிழந்தது தொடர்பாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
![Annamalai: Tamil Nadu Alcohol Poisoning Death TN BJP Leader Annamalai Says Marur Raja close to DMK Minister Senji Masthan Responsible for Spurious Liquor Death Annamalai:](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/16/0080b83e67a22e2e98f3d18946bc1cd61684239628405333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விழுப்புரம் அருகேயுள்ள மரக்காணம் பகுதியில் கலப்பட சாராயம் அருந்தி 21 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மரூர் ராஜா என்பவருக்கு தொடர்பிருப்பதாவும், இவர் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானின் நெருங்கிய வட்டாரத்தில் ஒருவர் என்பதால், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளார்.
கலப்பட விஷ சாராயம் அருத்தி உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எக்கியார்குப்பம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெருக்கரணை கிராமம் மற்றும் பேரம்பாக்கம் கிராமங்களில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 -ஆக உயர்ந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பலர் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விவகாரம் சி.பி.சி.ஐ.டி. விராசணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு டி.ஜி.பி. விளக்கம்
மரக்காணத்தில் விற்பனை செய்யப்பட்டது, கள்ளச்சாராயம் அல்ல; தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனால் என்றும், அதை குடித்ததே உயிரிழப்பிற்கு காரணம் என்றும் தமிழக டி.ஜி.பி. விளக்கம் அளித்துள்ளார். சித்தாமூர் மற்றும் மரக்காணத்தில் விற்கப்பட்ட விஷச்சாராயம் ஓரிடத்தில் இருந்து கொண்டு வரப்பட்டது என்றும் டி.ஜி.பி. கூறியுள்ளார். மேலும் சாராயம் கிடைக்கவில்லை என்ற சூழ்நிலையில், தொழிற்சாலையிலிருந்து, விஷச்சாராயத்தை திருடி சிலர் விற்றுள்ளனர். அதனால் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. எந்தத் தொழிற்சாலையிலிருந்த மெத்தனால் என்ற விஷச்சாராயம் வந்தது?அதில் யாருக்கு தொடர்பு உள்ளது? என்று புலன் விசாரணை நடந்து வருகிறது என்றும் டி.ஜி.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலை கண்டனம்:
இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “ மரக்காணம் கலப்பட சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரத்திற்கு மரூர் ராஜா எனும் சாராய வியாபாரி காரணம் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. சாராய விற்பனை தொடர்பாக இவர் மீது 2018 ஆம் ஆண்டிலேயே வழக்கு உள்ளது. அதோடு மட்டுமல்லாமல், பல்வேறு குற்ற வழக்குகளும் இவர் மீது இருக்கின்றன. இவர் செஞ்சி மஸ்தானுக்கு மிகவும் நெருக்கமானவர்.
தொடர்ந்து பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டாலும், அமைச்சரின் செல்வாக்கை பெரிய அளவில் நடவடிக்கை இல்லாமல் தனது சாராய விற்பனையை தொடர்ந்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் காரில் சாராயம் கடத்திய வழக்கில் மரூர் ராஜா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனினும், சிறையிலிருந்தபடியே அவர் சாராய விற்பனையை தொடர்ந்துள்ளார். ” என குறிப்பிட்டுள்ள அண்ணாமலை, அரசின் மெத்தனத்தால் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு என்று தமிழ்நாடு அரசை சாடியுள்ளார்.
அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்:
" சமூக வலைத்தளங்களில் திமுகவை விமர்சித்தால் உடனே குண்டாஸ் நடவடிக்கை எடுக்கும் திமுக அரசு, பல்வேறு குற்ற வழக்குகள் இருந்தும், மரூர் ராஜா மேல் இதுவரை குண்டாஸ் நடவடிக்கை எடுக்காமல் இருக்க என்ன காரணம்? அமைச்சர் செஞ்சி மஸ்தானுடனான நெருக்கமா? ஒரு சாராய வியாபாரியை, அமைச்சர் செஞ்சி மஸ்தான் பாதுகாத்துக் கொண்டிருக்கிறாரா?
தமிழகம் முழுவதும் கள்ளச் சாராயம் ஆறாக ஓடிக் கொண்டிருப்பது, நேற்றைய தினம் அரசு மேற்கொண்ட சோதனைகளில் கைப்பற்றப்பட்ட சாராயத்தின் அளவிலும், 1558 சாராய வியாபாரிகள் கைது நடவடிக்கைகளிலும் வெளிப்படையாகியிருக்கிறது. இத்தனை நாட்களாக நடந்து வரும் கள்ளச் சாராய விற்பனை அனைத்தும், அரசுக்கும் காவல் துறைக்கும், தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. கள்ளச் சாராய விற்பனையைத் தடுத்து நிறுத்துவது, மதுவிலக்குத் துறையின் முக்கியப் பொறுப்பாகும். ஆனால், அந்தத் துறைக்குப் பொறுப்பான சாராய அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தெரியாமல் இத்தனை அதிகமான அளவில் கள்ளச் சாராய விற்பனை நடந்திருக்குமா என்பதும் கேள்விக் குறி.
கள்ளச் சாராய விற்பனை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய துறை அமைச்சர் திரு. செந்தில் பாலாஜி, போக்குவரத்துத் துறையில் லஞ்சம் வாங்கிய வழக்கில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இன்று காலை வருவதாக இருந்த நிலையில், நேற்று முழுவதும் சம்பவ இடத்துக்கே வரவில்லை. ஊழல் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் அவர் மேல் வழக்கு பதிவு செய்ய, தமிழக காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் இன்று ஆணையிட்டிருக்கிறது. செந்தில் பாலாஜி, அமைச்சர் பதவியில் தொடரும் தார்மீக உரிமையை இழந்து விட்டார்." என்று குறிப்பிட்டுள்ளார்.
”அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் இருவரும், கள்ளச் சாராய விற்பனை குறித்து அறிந்திருந்தும், குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நோக்கிலேயே செயல்பட்டு வந்திருக்கிறார்கள். அல்லது, தங்கள் அமைச்சர் பதவிக்கான பொறுப்புக்களிலிருந்து தவறியிருக்கிறார்கள். ஏற்கனவே, டாஸ்மாக் மூலம் தமிழக சகோதரிகளின் தாலியைப் பறிப்பது போதாதென்று, கள்ளச் சாராய விற்பனைக்கும் துணை செல்லும் இவர்கள் இருவரையும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று தமிழக பாஜக சார்பில் வலியுறுத்துகிறேன்.” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)