Nithyananda: ’’எனக்கு END-ஏ கிடையாதுடா’’ நேரலையில் பேசப்போகும் நித்தியானந்தா! வெளியான அறிவிப்பு- எப்போது?
Nithyananda Death: நேரத்தை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்திய நேரப்படி ஏப்ரல் 3ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு நித்தியானந்தா நேரலையில் பேசுவார்- கைலாசா.

பிரபல ஆன்மிகவாதியான நித்தியானந்தா இறந்துவிட்டதாகத் தகவல் வெளியான நிலையில், நேரலையில் தோன்றிப் பேசுவார் என்று கைலாசா நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்து தர்மத்தைக் காக்க நித்தியானந்தா உயிர்த் தியாகம் செய்துவிட்டார் என்று அவரின் சகோதரி மகன் வீடியோவில் பேசியதாகத் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் இந்தத் தகவல்களை கைலாசா நிர்வாகம் மறுத்துள்ளது.
நேரலையில் நித்தியானந்தா
இதுகுறித்து நித்தியானந்தாவின் கைலாசா அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கம் வெளியிட்டுள்ள பதிவில், ’’நேரலையில் பகவான் நித்யானந்த பரமசிவம்!
பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள்மீது தொடுக்கப்பட்ட வதந்திகள் உலகம் முழுவதும் கேள்விகளையும், ஊகங்களையும், உண்மையை அறிய கூர்ந்த ஆர்வவத்தையும் எழுப்பி உள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 2-ஆம் தேதி 7PM ET அன்று, பகவான் நித்யானந்த பரமசிவம் நேரலையில் தோன்றுவார்.
நேரத்தை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்: ஏப்ரல் 2, 2025 | 7PM ET. இந்திய நேரப்படி ஏப்ரல் 3ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு நேரலையில் பேசுவார்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நித்தியானந்தாவைப் படுகொலை செய்ய 70 முறை முயற்சிக்கப்பட்டதாகவும் அவர் அதில் இருந்து தப்பிப் பிழைத்ததாகவும் கைலாசா தெரிவித்து இருந்தது.
மேலும் கைலாசா கூறும்போது, “ இந்து மதத்தின் போதகர் நித்தியானந்தா (SPH) உயிர்த் தியாகம் செய்துவிட்டார் என்று பல ஊடகங்கள் வேண்டுமென்றே கூறி வருகின்றன. அவர் ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும், உயிரோடும் மற்றும் சுறுசுறுப்பாகவும் இருக்கிறார் என்பதை கைலாசா அறிவிக்கிறது.
தெலுங்கு வருடப் பிறப்பன்று உரையாற்றிய நித்தியானந்தா?
மேலும் மார்ச் 30, 2025 அன்று, உகாதி கொண்டாட்டங்களை அங்கீகரித்து, அனைத்து பக்தர்கள், சீடர்கள் மற்றும் லட்சக்கணக்கான இந்து புலம்பெயர்ந்த மக்களை நித்தியானந்தா ஆசீர்வதித்தார்.
இந்த சூழலில், அவரை இழிவுபடுத்தவும் அவதூறு செய்யவும் பரப்பப்படும் அவதூறு பிரச்சாரத்தை கைலாசா சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறது. இந்த பொய்யான தகவலானது உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான இந்து பக்தர்களின் மத உணர்வுகளை காயப்படுத்தியுள்ளன’’ என்று கூறி இருந்தது.
உண்மையாகவே தோன்றிப் பேசுவாரா?
நித்தியானந்தா உயிருடன்தான் இருக்கிறார் என்று இன்று அதிகாலை கைலாசா நிர்வாகம் வெளியிட்ட வீடியோ, பழைய காணொலி என்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், புதிய லைவ் வீடியோவில் உண்மையாகவே அவர் தோன்றிப் பேசுவாரா அல்லது நித்தியானந்தாவின் பழைய காணொலி வெளியிடப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

