Population census : புதுச்சேரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்று முதல் துவக்கம் - கேட்கப்படும் 33 கேள்விகள்..!
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், 2027-ம் ஆண்டுக்கான இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதற்கட்டவீடு பட்டியலிடுதல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு பணிகள் இன்று 1-ம் தேதி முதல் துவங்குகின்றன.

புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், 2027-ம் ஆண்டுக்கான இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதற்கட்டவீடு பட்டியலிடுதல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு பணிகள் இன்று 1-ம் தேதி முதல் துவங்குகின்றன. இம்மாதம் 30-ம் தேதி வரை நடைபெறும்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், வரவிருக்கும் 2027-ம் ஆண்டுக்கான இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதற்கட்டப் பணிகளான ‘வீடு பட்டியலிடுதல்’ மற்றும் ‘வீட்டுவசதி கணக்கெடுப்பு’ இன்று (ஜூன் 1) முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகின்றன. இக்கணக்கெடுப்புப் பணிகள் இந்த மாதம் 30-ம் தேதி (ஜூன் 30) வரை நடைபெறும் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
தேசியப் பணியின் முக்கியத்துவம்:
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் விவரித்ததாவது:
"1948-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டத்தின் கீழ் இந்தத் தேசியப் பணி நடத்தப்படுகிறது. நாட்டின் வருங்காலத் திட்டமிடல், தொகுதி மறுவரையறை மற்றும் அரசின் பொதுக்கொள்கைகளைத் திறம்பட செயல்படுத்துவதற்கு இக்கணக்கெடுப்பு மிக அவசியமான ஒன்றாகும்."
புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனாம் ஆகிய யூனியன் பிரதேசத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இக்கணக்கெடுப்பு நேரடி முறையில் நடத்தப்படும். இதற்காக நியமிக்கப்பட்டுள்ள கணக்கெடுப்பு அதிகாரிகள், ஜூன் 1 முதல் ஜூன் 30 வரை அனைத்து வீடுகளுக்கும் நேரில் வந்து தகவல்களைச் சேகரிப்பார்கள்.
கேட்கப்படும் 33 கேள்விகள்:
வீடு பட்டியலிடும் இந்த முதற்கட்டக் கணக்கெடுப்பில், வீட்டின் வசதிகள் மற்றும் நிலைகள் குறித்து பொதுமக்கள் தரப்பில் இருந்து விவரங்களைப் பெற 33 கேள்விகளைக் கேட்க அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் பட்டியல் பின்வருமாறு:
- கட்டட எண் (நகராட்சி / உள்ளூர் அமைப்பு எண்)
- கணக்கெடுப்பு வீட்டு எண்
- வீட்டின் தரைப்பகுதியின் முக்கியப்பொருள்
- வீட்டின் சுவரின் முக்கியப்பொருள்
- வீட்டின் மேற்கூரையின் முக்கியப்பொருள்
- வீடு பயன்படுத்தப்படும் விதம்
- வீட்டின் நிலை
- குடும்பம்
- குடும்பத்தில் வசிக்கும் மொத்த நபர்களின் எண்ணிக்கை
- குடும்பத்தலைவரின் பெயர்
- குடும்பத்தலைவரின் பாலினம்
- குடும்பத்தலைவர் பட்டியலினத்தவர் (SC) / பழங்குடியினர் (ST) விவரம்
- வீட்டின் உரிமை நிலை (சொந்த வீடா / வாடகை வீடா)
- குடும்பத்தின் வசம் உள்ள வாழும் அறைகளின் எண்ணிக்கை
- குடும்பத்தில் வசிக்கும் திருமணமான தம்பதிகளின் எண்ணிக்கை
- குடிநீரின் முக்கிய ஆதாரம்
- குடிநீர் ஆதாரம் கிடைக்கும் வசதி (வீட்டிற்குள்ளா / வெளியிலா)
- மின்விளக்கு வசதிக்கான முக்கிய ஆதாரம்
- கழிப்பறை வசதி
- கழிப்பறை வகை
- கழிவுநீர் வெளியேறும் வழி
- குளியல் வசதி உள்ளதா
- சமையலறை மற்றும் சமையல் எரிவாயு (எல்.பி.ஜி., / பி.என்.ஜி) வசதி
- சமையலுக்குப் பயன்படுத்தப்படும் முக்கிய எரிபொருள்
- வானொலி / டிரான்சிஸ்டர் வசதி
- தொலைக்காட்சி (டிவி) வசதி
- இணைய (இன்டர்நெட்) வசதி
- லேப்டாப் / கணினி வசதி
- தொலைபேசி / மொபைல்போன் / ஸ்மார்ட்போன் வசதி
- சைக்கிள் / ஸ்கூட்டர் / மோட்டார் சைக்கிள் வசதி
- கார் / ஜீப் / வேன் வசதி
- குடும்பத்தில் உட்கொள்ளப்படும் முக்கிய தானியம்
- மொபைல் எண் (தொடர்புகளுக்கு மட்டும்)
பெயர்களைக் கூற கட்டாயமில்லை – ரகசியம் காக்கப்படும்:
சட்டப்படி, கேட்கப்படும் கேள்விகளுக்குத் தங்களுக்குத் தெரிந்த வரை உண்மையான பதில்களை அளிக்க ஒவ்வொரு குடிமகனும் கடமைப்பட்டவர்கள் ஆவர். எனினும், குடும்பத்தில் உள்ள பெண் உறுப்பினரின் பெயரையோ அல்லது கணவர் மற்றும் வழக்கத்தின்படி பொதுவெளியில் குறிப்பிட தடைசெய்யப்பட்ட நபர்களின் பெயரையோ கூற எவரும் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள்.
கணக்கெடுப்புத் துறையால் சேகரிக்கப்படும் தனிநபர் தகவல்கள் அனைத்தும் சட்டப்பிரிவு 15-ன் கீழ் முற்றிலும் ரகசியமாகப் பாதுகாக்கப்படும். இந்த விவரங்கள் எந்தவொரு சிவில் அல்லது குற்றவியல் நடவடிக்கைகளிலும் ஆதாரமாகப் பயன்படுத்தப்படாது என்பதால் பொதுமக்கள் அச்சமின்றி விவரங்களை வழங்கலாம்.
ஒத்துழைக்காதவர்களுக்கு அபராதம்:
கணக்கெடுப்பு நோக்கங்களுக்காக அதிகாரிகள் வீடுகளின் வளாகத்திற்குள் வருவதையும், வீடுகளில் கணக்கெடுப்பு எண்கள் அல்லது குறியீடுகளை இடுவதையும் பொதுமக்கள் அனுமதிக்க வேண்டும். இந்த எண்களைச் சேதப்படுத்தாமல் பராமரிப்பது அவசியமாகும்.
விதிமுறைகளின்படி, இக்கணக்கெடுப்பிற்கு ஒத்துழைக்க மறுத்தாலோ அல்லது வேண்டுமென்றே தவறான தகவல்களை அளித்தாலோ சட்ட விதிகளின்படி 1000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்பட்டு, இத்தேசியப் பணியின் துல்லியத்தன்மையை உறுதி செய்ய முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என மாவட்ட கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்





















