Anbumani vs Ramadoss : அப்செட்டில் மருத்துவர் ராமதாஸ் ; புறக்கணித்த முக்கிய நிர்வாகிகள்... !
மருத்துவர் ராமதாஸ், மாவட்டச் செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், அதனை முக்கிய பொறுப்பாளர்கள் புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விழுப்புரம்: தைலாபுரத்தில் மருத்துவர் ராமதாஸ், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகவும் அதனை முக்கிய பொறுப்பாளர்கள் புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
யார் தலைவர்?
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் கடந்த வியாழக்கிழமை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் அறிக்கை ஒன்றை வாசித்தார்.
அதில்., 1980-ல் வன்னியர் சங்கம் தொடங்கிய காலத்தில் மருத்துவப் பணியாற்றிக் கொண்டே அரசுப் பேருந்துகளில் நின்று கொண்டே சென்று கிராமங்களில் சமூகப் பணியாற்றினேன். அதன் மூலம் மக்களை வென்றுள்ளேன். சிறு மேஜை மீது, மாட்டு வண்டி மீது நின்று பேசிவிட்டு, அடுத்த கிராமத்திற்கு மிதி வண்டியில் சென்று அக்கிராம மக்களிடம் பேசுவேன். 1987-ல் சாலை மறியல் போராட்டம் நடத்தி 21 பேரை இழந்தேன். 1989-ல் பாமகவை தொடங்கினேன். 95 ஆயிரம் கிராமங்களுக்குச் சென்று மக்களை சந்தித்தேன். பின்னர் மிக பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு பெற்றேன். கட்சியின் மூலம் மத்திய அமைச்சர் முதல் உள்ளாட்சி பிரதிநிதிவரை பெற்றோம். இவைகள் எல்லாம் என் சாதனைகளாகும்.
பாளையங்கோட்டை மத்திய சிறை தவிர மற்ற மத்திய சிறைகளில் உரிமைகளுக்கான போராட்டத்துக்காக அடைக்கப்பட்டேன். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு பாமகவினரின் வேண்டுதலால் உயிர்பெற்றேன். 2026ம் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டி பாமக நிறுவரான நானே தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டு, அன்புமணி செயல் தலைவராக நியமிக்கிறேன். கெளரவத் தலைவராக ஜி கே மணி உள்ளிட்ட பொறுப்பாளர்கள் செயல்படுவார்கள் என்று அந்த அறிக்கையை வாசித்தார். மே 11-ம் மாமல்லபுரம் மாநாடு வெற்றிகரமாக செயல்பட அனைவரும் உழைப்போம் என ராமதாஸ் கூறினார்.
இந்த நிலையில் கடந்த மூன்று தினங்களாக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மருத்துவர் ராமதாசை சமாதான பேச்சுவார்த்தை நடத்து முயற்சி செய்தனர் ஆனால் மருத்துவர் ராமதாஸ் தலைவர் பதவி குறித்து யாரும் என்னிடம் பேச வேண்டாம் எனவும் வழக்கம் போல் வந்து பார்ப்பவர்கள் போல் வரலாம் என தெரிவித்துள்ளார்,
இந்த நிலையில் நேற்றைய தினம் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இரவு ஒரு அறிக்கையை வெளியிட்டார்.,
அந்த அறிக்கையில், ஊமை சனங்களுக்கு சமூகநீதியும், அரசியல் அதிகாரமும் பெற்றுத் தர வேண்டும் என்பதற்காகவே 1989&ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் நாள் சென்னை சீரணி அரங்கில் நமது இனக்காவலர் மருத்துவர் அய்யா அவர்களால் பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டது. அப்போது பாட்டாளி மக்கள் கட்சியால் உருவாக்கப்பட்ட கொள்கை விதிகளின் படி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரை கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் தான் தேர்வு செய்ய முடியும். அதனடிப்படையில் 2022 ஆம் ஆண்டு மே மாதம் 28 தேதி சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் சமூகநீதிக் காவலர் மருத்துவர் அய்யா அவர்களின் வாழ்த்துகளுடனும் உங்களின் ஆதரவுடனும் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான். அதை இந்திய தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கிறது.
கட்சியின் தலைவராக நான் முறைப்படி பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கும் நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக நான் தொடர்ந்து செயல்படுவேன்.எந்த நோக்கத்திற்காக கட்சியின் தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேனோ, எந்த நோக்கத்திற்காக மருத்துவர் அய்யா அவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியை தொடங்கினாரோ, அந்த நோக்கத்தை நோக்கி உங்களின் ஆதரவுடன் இன்னும் தீவிரமாக பயணிக்க நான் உறுதி பூண்டிருக்கிறேன் என தெரிவித்திருந்தார்.
முக்கிய நிர்வாகிகள் புறக்கணிப்பு
இந்நிலையில் இன்று மருத்துவர ராமதாஸ் என்று முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாவட்ட செயலாளர்கள் முக்கிய நிர்வாகிகள் என பலர் புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது இதனால் மருத்துவர் ராமதாஸ் அதிருப்தியில் உள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

