கிறிஸ்துமஸ், புத்தாண்டு பயணிகளுக்கு பேரதிர்ச்சி! சென்னை விமான நிலையத்தில் டிக்கெட் தட்டுப்பாடு, கட்டண உயர்வு!
"சென்னை விமான நிலையத்தில் கிறிஸ்மஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு, சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள், போதிய விமானங்கள் இல்லாமல் அவதி அடைந்துள்ளனர்"

தூத்துக்குடி, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய நேரடி விமானங்கள் அனைத்திலும், டிக்கெட்கள் இல்லாததால், பெங்களூர் அல்லது திருவனந்தபுரம் வழியாக சுற்றிக்கொண்டு போக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், கூடுதல் விமான டிக்கெட்டுகள், அதிகமான பயண நேரங்கள் ஏற்பட்டு பயணிகள் பாதிப்படைந்துள்ளனர். மதுரை, திருச்சி, தூத்துக்குடி, சேலம், கோவை ஆகிய இடங்களுக்கு சென்னையில் இருந்து, இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கைகளை அதிகரிக்க, பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கிறிஸ்மஸ் புத்தாண்டு கொண்டாட்டங்கள்
கிறிஸ்மஸ் புத்தாண்டு கொண்டாட்டங்கள் பள்ளி கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறைகள் காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் ஏராளமானவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து குறிப்பாக, தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் கூட்டம் அதிக அளவில் உள்ளது.
இதனால் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் விமானங்களில், இன்றும் நாளையும் அனைத்து டிக்கெட்களும் காலியாகி விட்டன. இதனால் சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்ல வேண்டிய தென் மாவட்ட மக்கள், சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் விமானங்களில் பயணிப்பதால், திருவனந்தபுரம் செல்லும் விமானங்களிலும் அனைத்து டிக்கெட்களும் காலியாகி விட்டன.
விமானங்களில் கூடுதல் கட்டணம்
இதனால் சென்னையில் இருந்து தூத்துக்குடி மற்றும் திருவனந்தபுரத்திற்கு நேரடி விமானங்கள் இல்லாமல், இணைப்பு விமானங்களில் சென்னையில் இருந்து பெங்களூர் சென்று, பெங்களூரில் இருந்து திருவனந்தபுரம், தூத்துக்குடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கூடுதல் கட்டணங்கள் செலுத்தி டிக்கெட் பெறுவதோடு, பயண நேரமும், கூடுதலாகி பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
அதேபோல் சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, சேலம் ஆகிய இடங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்களிலும் அனைத்து டிக்கெட்களும் காலியாகிவிட்டதால், பயணிகள் சென்னையில் இருந்து, பெங்களூர் வழியாக, மதுரை, திருச்சி, சேலம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் பயணிகள் கூடுதல் கட்டணம், அதிக பயண நேரத்தால் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.
எவ்வளவு கட்டணம் உயர்வு:
சென்னை - தூத்துக்குடி வழக்கமான கட்டணம்,ரூ.4,100. பெங்களூர் வழியாக சுற்றி போவதால், ரூ.13,400.
சென்னை - திருவனந்தபுரம் வழக்கமான கட்டணம், ரூ.5,173. பெங்களூர் வழியாக சுற்றி போவதால், ரூ.17,331.
சென்னை - மதுரை வழக்கமான கட்டணம் ரூ. 4,248. பெங்களூர் வழியாக சுற்றி செல்வதால்,ரூ.13,160.
சென்னை - திருச்சி வழக்கமான கட்டணம் ரூ. 4,121. பெங்களூர் வழியாக சுற்றி செல்வதால், ரூ.13,842.
சென்னை - சேலம் வழக்கமான கட்டணம் ரூ. 3,093. பெங்களூர் வழியாக சுற்றி சென்றால் ரூ. 8,688.
சென்னை - கோவை வழக்கமான கட்டணம் ரூ.4,147. இன்று, நாளை, கூடுதல் கட்டணம் ரூ. 8,448.
தமிழ்நாட்டிற்குள் பயணம் செய்வதற்கு போதிய நேரடி விமானங்கள் இல்லாத காரணத்தால், பயணிகள் அண்டை மாநிலங்களான திருவனந்தபுரம் பெங்களூர் வழியாக பயணம் செய்ய வேண்டியது இருப்பதால், கூடுதல் டிக்கெட் கட்டணங்கள் செலுத்துவதோடு, பயண நேரமும் பல மணி நேரம் அதிகமாகி, பயணிகள் அவதி அடைந்து கொண்டு இருக்கின்றனர். எனவே விமான நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்குள் பயணிகள் பயணிப்பதற்கு தேவையான அளவு கூடுதல் விமானங்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் கூறுகின்றனர்.





















