Nallakannu: ஆயுதம் ஏந்தி.. போராட்டங்களால் நிறைந்த நல்லகண்ணு வாழ்க்கை; மீசையே வைக்காத காரணம் தெரியுமா?
Nallakannu Death: நூற்றாண்டுகள் கடந்த அரசியல் தலைவர் நல்லகண்ணு குறித்து இன்றைய தலைமுறையினர் அதிகம் அறிந்திராத தகவல்கள் பல இருக்கின்றன. அவற்றை இங்கே அறிந்துகொள்ளலாம்.

போராளி நல்லகண்ணு வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் இன்று சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் காலமானார்.
இந்திய சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் போராட்டங்கள் தொடங்கின. அடுத்தடுத்து தீண்டாமைக்கு எதிரான போராட்டம், விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராட்டம், மணல் அள்ளுவதற்கு எதிரான போராட்டம் என பற்பல போராட்டங்களில் முழு மூச்சாக இறங்கியவர் நல்லகண்ணு.
அண்மைக் காலங்களில் கனிம வளக் கொள்ளைக்கு எதிராக தனது இறுதிக் காலம் வரை போராடினார். நீதிமன்றத்துக்கே நேரில் சென்று உணர்வுபூர்வமாக வாதாடி, மணல் அள்ளத் தடை பெற்றுக் கொடுத்தவர் நல்லகண்ணு.

மீசையே வைக்காத காரணம்
நல்லகண்ணுவை நினைத்துப் பார்த்தாலே அவரின் க்ளீன் ஷேவ் கன்னங்களும் மழிக்கப்பட்ட மீசையும்தான் நினைவுக்கு வரும். தனது இளமைக் காலத்தில் பெரிய மீசைக்குச் சொந்தக்காரர் நல்லகண்ணு.
1940களின் கடைசிப் பகுதி அது. விவசாயிகளுக்கு ஆதரவாக, உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்று அரசை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை நடத்தினர். அப்போது அரசு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியது. கட்சியையே முடக்கப் பார்த்தது.
கொடுமைப் படுத்திய காவல்துறை
தலைமறைவாக இருந்த நல்லகண்ணு காவல்துறையிடம் மாட்டிக் கொண்டார். பிற தோழர்கள் இருக்கும் இடத்தைக் கூறுமாறு காவல் துறையினர் வலியுறுத்தினர்.
சொல்ல மறுத்த நல்லகண்ணு மீசையைச் சுருட்டு மூலம் சுட்டுப் பொசுக்கியும் பிடுங்கியும் வன்முறையில் ஈடுபட்டனர். சக தோழர்களைக் காட்டிக் கொடுக்குமாறு கட்டாயப்படுத்தினர். இதனால் மனம் கசந்த நல்லகண்ணு, அன்றில் இருந்து மீசை வைப்பதையே நிறுத்திவிட்டார்.
























