Nallakannu: நல்லகண்ணு: மகள் காது குத்து முதல் விருதுப் பணம் வரை; வியக்க வைக்கும் தியாகம்!
Nallakannu Unknown Fact: முதுபெரும் ஆளுமை நல்லகண்ணு: 101 வயதில் மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர், கறை படியாத கரத்துக்குச் சொந்தக்காரர். அவர் குறித்த சில அரிய தகவல்கள் இதோ!

தமிழ்நாட்டு அரசியலின் முதுபெரும் தலைவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு வயது மூப்பு காரணமாக இன்று (பிப்.25) சென்னையில் காலமானார். அவருக்கு வயது 101.
நூற்றாண்டுகள் கடந்த அரசியல் தலைவர் நல்லகண்ணு குறித்து இன்றைய தலைமுறையினர் அதிகம் அறிந்திராத தகவல்கள் பல இருக்கின்றன. அவற்றை இங்கே அறிந்துகொள்ளலாம்.
ஒரே கொடி, ஒரே கட்சி என்ற கொள்கையுடன் கடைசி வரை வாழ்ந்தவர். பெரும்பாலான கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களைப் போலவே, தனக்காகவும் குடும்பத்துக்காகவும் புத்தகங்களைத் தவிர எதையும் பெரிதாய் சேர்த்து வைக்காத தலைவர் நல்லகண்ணு.
ஒருமுறை தனது மகளின் காது குத்து விழாவுக்கு எதுவும் வாங்காமல் போய் நின்றார் நல்லகண்ணு. தோடு வேண்டும் என்று கேட்டபிறகு நண்பர்கள் சிலரின் உதவியோடு, கவரிங் கம்மலை வாங்கிக் கொடுத்தார். எல்லோரும் அதிர்ச்சியோடு பார்த்தபோது, ’’இதையே குத்துங்கள், போதும்’’ என்று அநாயசமாகச் சொல்லிச் சென்றவர் நல்லகண்ணு.
மாமனார் கொலையை அரசியலாக மாற்றாதவர்
1990களின் பிற்பகுதியில் தென் மாவட்டங்களில் கொலையும் அதைத் தொடர்ந்து கலவரங்களும் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருந்தன. முக்குலத்தோர் பிரிவுக்கும் தலித் பிரிவுக்கும் பகை ஓங்கி இருந்த காலம் அது. அப்போது ஒரு வன்முறையில் நல்லகண்ணுவின் மாமனாரும் சாதி ஒழிப்புப் போராளியுமான அன்னச்சாமி கொடூரமாகக் கொல்லப்பட்டார்.
நல்லகண்ணு நினைத்திருந்தால், போராட்டம் வெடித்திருக்கும். அடுத்தடுத்த சம்பவங்கள் நடந்திருக்கும். ஆனால் காவல்துறையிடம் உள்ளூர்க் காரர்கள் இந்த சம்பவத்தை செய்திருக்கவே மாட்டார்கள் என்று திடமாய்க் கூறினார். மாமனார் இறப்புக்கு அரசு இழப்பீடாகக் கொடுத்த தொகையை, வன்முறையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளின் கல்வித் தொகைக்கு அளித்தவர் நல்லகண்ணு.
தனக்காக வந்த தொகையை பிறருக்கு மட்டுமே அளித்தவர்
தன்னுடைய 80ஆம் பிறந்த நாளுக்காக கம்யூனிஸ்ட் கட்சி ரூ. 1 கோடி நிதி வசூலித்துக் கொடுத்த நிலையில், அதைக் கட்சிக்கே மீண்டும் திருப்பித் தந்தவர் நல்லகண்ணு.

விருது பரிசுத் தொகையையும் பிறருக்கே அளித்துவிடுவது நல்லக்கண்ணுவின் வழக்கம். ஒருமுறை தமிழக அரசு அம்பேத்கர் விருது வழங்கி, ஒரு லட்சம் ரூபாய் பரிசாக வழங்கியது. அதில் 50 ஆயிரத்தைக் கட்சிக்கும் மீதியை விவசாயத் தொழிலாளர் சங்கத்துக்கும் கொடுத்துவிட்டார் நல்லகண்ணு.
அதேபோல திமுக ஆட்சிக் காலத்தில் 2022ஆம் ஆண்டில் நல்லகண்ணுவுக்கு தகைசால் தமிழர் விருது அளிக்கப்பட்டது. அப்போது ரூ. 10 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. சான்றிதழை மட்டும் வைத்துக்கொண்டவர், பரிசுத் தொகையான ரூ.10 லட்சத்துடன், தனது சொந்த நிதி ரூ.5,000 சேர்த்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நல்லகண்ணு வழங்கியது பேசுபொருள் ஆனது.
























