“அன்புமணி இராமதாஸ்தான் எங்கள் எதிர்காலம்” - பதவியை ராஜினாமா செய்தார்.. கடைசியில் ட்விஸ்ட் அடித்த முகுந்தன்
பாமக இளைஞர் அணி பதவியை முகுந்தன் ராஜினாமா செய்தார்.

விழுப்புரம்: பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் பதவியில் இருந்து முகுந்தன் பரசுராமன் ராஜினாமா செய்வதாக அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
பதவியை ராஜினாமா செய்த முகுந்தன்
விழுப்புரத்தில் கடந்த ஆண்டு இறுதியில் பாமக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸும் தலைவர் அன்புமணியும் கலந்து கொண்டு பேசினர். அப்போது ராமதாஸ் பாமக இளைஞரணித் தலைவர் முகுந்தனுக்கு பொறுப்பு வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் முகுந்தனுக்கு பொறுப்பு வழங்க கூடாது என அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். கட்சியில் சேர்ந்த 4 மாதங்களில் எப்படி பொறுப்பு வழங்க முடியும். கட்சியில் வந்து 4 மாதம் ஆனவருக்கு என்ன அனுபவம் இருக்கும் என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்து பேசிய ராமதாஸ், ”பாமகவை உருவாக்கியது நான் தான் இதனை. நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். அதுதான் நடக்கணும். ஏற்கவில்லை என்றால் விருப்பம் இல்லாதவர்கள் விலகி கொள்ளுங்கள்” என ராமதாஸ் கோபமாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அன்புமணி, பனையூரில் எனக்கு ஒரு அலுவலகம் இருக்கிறது. என்னை சந்திக்க நினைத்தால் அங்கு வந்து பார்க்கலாம் என தெரிவித்தார்.
மேடையிலேயே தந்தை மகன் கருத்து வேறுபாடு வெளிப்பட்டது பாமக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அன்புமணி ராமதாஸ் இடையே குழப்பத்துக்கு காரணமான முகுந்தன் ராமதாஸின் பேரன் ஆவார். பாமக நிறுவனர் ராமதாஸின் மூத்த மகள் காந்திமதியின் மகன் தான் ப.முகுந்தன். சகோதரி மகன் முகுந்தனுக்கு இளைஞரணி தலைவர் பதவியை கொடுத்ததால்தான் இந்த பிரச்சினை வெடித்துள்ளது. முன்னதாக ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன் பாமக இளைஞரணி தலைவராக இருந்தார். பின்னர் அன்புமணியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவர் அந்த பதவியில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அப்பதவிக்கு ஆள் நியமிக்கப்படாமல் சும்மாகவே இருந்தது. அதற்கு முன்னதாக அன்புமணிதான் இளைஞரணித் தலைவராக பதவி வகித்து வந்தார். அவர் தலைவரானதும்தான் அந்த பதவி ஜி.கே. மணியின் மகனுக்கு சென்றது. அவரும் ராஜினாமா செய்தார் . பின்னர் பொதுக்குழுவில் முகுந்தனுக்கு பதவி வழங்கி ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது முகுந்தன் தனது இளைஞர் அணி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
அவர் வெளியிட்டுள்ள ராஜினாமா கடிதத்தில் .,
பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணியான பாட்டாளி இளைஞர் சங்கத்தின் தலைவராக கடந்த 28.12.2024 ஆம் நாளில் நான் நியமிக்கப்பட்டேன். சொந்த காரணங்களுக்காக அந்தப் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன். மருத்துவர் அய்யா அவர்கள்தான் என்றென்றும் எனது குலதெய்வம், மருத்துவர் அன்புமணி இராமதாஸ்தான் எங்கள் எதிர்காலம் என்ற உணர்வுடன் தொடர்ந்து கட்சிப் பணியாற்றுவேன் என்று உறுதியளிக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.





















