ரேஷன் கடைக்குள் ஹாயாக அமர்ந்திருந்த பூனை.. ஷாக்கான அமைச்சர்.. ஊழியர்களுக்கு வார்னிங்!
அமைச்சர் வெங்கட ரமணன் நியாய விலைக் கடைகள் தொடங்கி பல்வேறு இடங்களிலும் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள கடையில் ஆய்வு செய்தார்.

சென்னை தண்டையார் பேட்டையில் செயல்படும் நியாய விலைக் கடையில் அமைச்சர் ஆய்வு செய்தபோது உள்ளே பூனை ஒன்று இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கடை ஊழியர்களுக்கு அமைச்சர் வெங்கட ரமணன் எச்சரிக்கை விடுத்தார்.
தமிழ்நாட்டில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர்கள் தமிழ்நாடு முழுவதும் தங்களது துறைகளில் நடைபெறும் முறைகேடு,புகார்களை தடுக்கும்பொருட்டு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக உடனடி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அமைச்சர்களின் இந்த ஆய்வுகள் பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
அந்த வகையில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கட ரமணன் நியாய விலைக் கடைகள் தொடங்கி பல்வேறு இடங்களிலும் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள நியாய விலைக் கடைகளில் அமைச்சர்கள் வெங்கட ரமணன் மற்றும் நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் ஆகியோர் திடீரென ஆய்வு செய்தனர். அப்போது ரேஷன் கடையின் உள்ளே அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்ட இடத்தின் மேலே பூனை ஒன்று ஒய்யாரமாக அமர்ந்து கொண்டிருந்தது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க
— Venkataramanan M.Com, MBA, M.L., (@AdvocateVenkatP) May 30, 2026
சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இருப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
பொதுமக்களுக்கு உணவுப்… pic.twitter.com/sPGlryOCMY
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அமைச்சர் வெங்கட ரமணன், ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். மேலும் கடையின் உள்ளே எலிப்பொறி இருப்பதைக் கண்டு அதைப் பற்றி கேட்டார். இப்படி பூனை, எலி எல்லாம் இருந்தால் மக்களுக்கு எப்படி தரமான பொருட்களை நாம் வழங்க முடியும்? என கேள்வி மேல் கேள்வியெழுப்பினார். இந்த ரேஷன் கடையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இன்னும் ஒரு வாரத்தில் வருவேன். பொதுமக்களுக்கு சுகாதாரமாக உணவுபொருட்களை சரியான எடையுடன் வழங்க வேண்டும் என அவர் உத்தரவிட்டார்.
தொடர்ந்துச் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வெங்கட ரமணன், “தண்டையார்பேட்டை பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் இருந்து வந்த புகார்கள் அடிப்படையில் ஆய்வு நடைபெற்றது. கடைகளில் சுகாதாரம் பேணினால் மட்டும் தான் பொருட்கள் தரமானதாக இருக்கும். அதுதொடர்பாக அறிவுறுத்தியுள்ளோம். குடோன்கள், கடைகளின் வெளிப்பகுதியில் சுகாதாரத்தை பேண நகராட்சி துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளோம். ரேஷன் கடைகளில் டீ தூள், உப்பு என மக்கள் கேட்கும் பொருட்களை மட்டும் தான் கொடுக்க வேண்டும், அதுவும் வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
Before You Go
Caste Certificate Issue : அதிகாரிகள் அலட்சியம். ஊசலாடும் ராணுவ பணி கனவு? குடுகுடுப்பைகாரர் மகன் வேதனை!
ட்ரெண்டிங் செய்திகள்






















