மக்களைத் தேடி மருத்துவம் முதல் இதயம் காப்போம் வரை.. இந்தியாவுக்கே முன்மாதிரியாக திகழும் தமிழ்நாடு
தன்னம்பிக்கை எத்தகைய பலம் வாய்ந்தது என்பதற்கு இலக்கணமாக மயிரிழையில் உயிர்தப்பி இனி முன்பு போல இயங்கவியலாது என்ற நிலையிலிருந்து மனவுறுதி, விடாமுயற்சி மற்றும் தொடர் பயிற்சி காரணமாக மாரத்தான் ஓட்டத்தில் உலக சாதனைகள் புரிந்திருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

'பாதம் பாதுகாப்போம் திட்டம்', 'இதயம் காப்போம் திட்டம்', 'இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் - 48' போன்ற பிற பல்வேறு திட்டங்கள் மூலம் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா- கலிபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற மனநல சர்வதேச மாநாட்டில் 'நாள்தோறும் மேற்கொள்ளப்படும் நடைபயிற்சியால், உடல் மற்றும் மனநலத்தில் ஏற்படும் தாக்கம்' குறித்த தலைப்பில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உரையாற்றினார்.
மனம் திறந்து பேசிய அமைச்சர் மா.சு
அப்போது பேசிய அவர், "கடந்க 2004-ஆம் ஆண்டு நிகழ்வுற்ற ஒரு மிகப்பெரிய சாலை விபத்தில் கால்மூட்டு நான்கு ஐந்து துண்டுகளாக உடைந்து, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சையென மூன்று மாதங்களாக படுத்த படுக்கையாக இருக்க வேண்டிய ஒரு எதிர்பாராத சூழ்நிலை எனக்கு நேரிட்டது.
நிலைகுலைந்த அத்தகைய ஓர் சூழலில் இனிமேல் தொடர்ந்து தரையில் உட்காரவோ, நடக்கவோ அல்லது ஓடவோ கூடாது என்ற மருத்துவர்களின் அறிவுரை ஒரு பேரிடியாக வந்தாலும் தன்னம்பிக்கையை கைவிடாது ஆறு மாதங்கள் கழிந்த பின்னர் படிப்படியாக யோகா பயிற்சி, மெதுவாக நடத்தல், சிறிய தூரங்கள் ஓடுதல் என முயற்சிக்கத் தொடங்கி ஓட்டப்பயிற்சி அளவிற்கு உயர்ந்து மாரத்தான் பந்தயத்தில் பங்கேற்கும் அளவிற்கு வளர்ச்சி கண்டேன்.
இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக திகழும் தமிழ்நாடு:
இதைத் தொடர்ந்து, அடுத்த ஐந்து ஆண்டுகளில் 100 மாரத்தான் பந்தயங்களில் பங்கேற்று உலக சாதனையாளர்கள் பட்டியலில் இடம் பெற்றதோடு விடாமுயற்சி மற்றும் சளைக்காத மனவுறுதியுடன் இதுவரை 160 மாரத்தான் போட்டிகளில் பங்கேற்றுள்ளேன்" என்றார்.
தமிழ்நாடு அரசின் மக்களைத் தேடி மருத்துவ திட்டம் குறித்து பேசிய அவர், "தொற்றா நோய்களை கட்டுப்படுத்துவதில் எவ்வாறு தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக இந்திய அளவில் திகழ்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 05.08.2021-ல் தொடங்கப்பட்ட 'மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்', ஐக்கிய நாடுகள் அமைப்பின் 2004-ஆம் ஆண்டிற்கான United Nation Interagency Task Force Award பெற்றுள்ளதையும், 'பாதம் பாதுகாப்போம் திட்டம்', 'இதயம் காப்போம் திட்டம்', 'இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும்-48' போன்ற பிற பல்வேறு திட்டங்கள் மூலம் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.
தன்னம்பிக்கை எத்தகைய பலம் வாய்ந்தது என்பதற்கு இலக்கணமாக மயிரிழையில் உயிர்தப்பி இனி முன்பு போல இயங்கவியலாது என்ற நிலையிலிருந்து மனவுறுதி, விடாமுயற்சி மற்றும் தொடர் பயிற்சி காரணமாக மாரத்தான் ஓட்டத்தில் உலக சாதனைகள் புரிந்து இன்று சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் குறிப்பாக இளைய சமுதாயத்தினருக்கும். வருங்காலத் தலைமுறையினருக்கும் தினசரி நடைபயிற்சி மற்றும் ஓட்டப்பயிற்சி மூலம் உடல் மற்றும் மனநலம் காக்கப்படுவதை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நல்வாய்ப்பாக இப்பயணம் அமைந்துள்ளது" என்றார்.





















