சட்டமன்றத் தேர்தல் விடுமுறை 2026: உங்கள் நிறுவனம் விடுமுறை அளிக்கவில்லையா? இங்கே புகார் செய்யுங்கள்!
தேர்தல் நாள் அன்று தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிப்பது கட்டாயம் என்பதால் விதிகளை மீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை: தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் நாளை ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அன்று அனைத்துத் தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்றும், விதிகளை மீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தொழிலாளர் நலத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய நடவடிக்கை
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை இலக்காகக் கொண்டு அரசு பல்வேறு விழிப்புணர்வு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னை தொழிலாளர் ஆணையரின் ஆணைப்படியும், திருச்சிராப்பள்ளி கூடுதல் தொழிலாளர் ஆணையர் மற்றும் இணை ஆணையர் ஆகியோரின் அறிவுறுத்தலின்படியும், தேர்தல் நாளான 23.04.2026 (வியாழக்கிழமை) அன்று அனைத்துத் தொழிலாளர்களுக்கும் விடுமுறை அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருவாரூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஏ. வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
"மயிலாடுதுறை மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து வணிக நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (IT Companies), உணவகங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் பணிபுரியும் தொழிலாளர்களுக்குத் தேர்தல் நாளன்று விடுமுறை அளிக்கப்பட வேண்டும்."
யார் யாருக்கு விடுமுறை பொருந்தும்?
இந்த விடுமுறை உத்தரவானது நிரந்தரப் பணியாளர்களுக்கு மட்டுமின்றி, கீழ்க்கண்ட அனைத்துத் தரப்பு தொழிலாளர்களுக்கும் பொருந்தும்:
* தினக்கூலி தொழிலாளர்கள்
* ஒப்பந்த தொழிலாளர்கள்
* தற்காலிகப் பணியாளர்கள்
தொழிலாளர்கள் எவ்விதத் தடையுமின்றி தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றும் பொருட்டு, இந்த விடுமுறை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறையாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
சட்ட நடவடிக்கை எச்சரிக்கை
தேர்தல் நாளன்று விடுமுறை அளிக்காத அல்லது விடுமுறை அளித்துவிட்டு சம்பளம் பிடித்தம் செய்யும் நிறுவனங்கள் மீது 1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 135பி-இன் கீழ் குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சட்ட விதிகளின்படி, தகுதியுள்ள வாக்காளராக இருக்கும் பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்க மறுப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.
இதைக் கண்காணிக்கும் பொருட்டு மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பிரத்யேகக் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் தேர்தல் நாளன்று தீவிரக் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டப் புகார் எண்கள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நிறுவனங்கள் இந்த உத்தரவை மீறினால், பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் அல்லது பொதுமக்கள் கீழ்க்கண்ட எண்களைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்:
மாவட்டக் கட்டுப்பாட்டு அறை: தொலைபேசி எண்: 04366-251121
மின்னஞ்சல்: aclssmly@gmail.com
(தொழிலாளர் உதவி ஆணையர் - சமூக பாதுகாப்புத் திட்டம்)
அதிகாரிகளின் தொடர்பு விவரங்கள்:
* தொழிலாளர் உதவி ஆணையர் (மயிலாடுதுறை) ஏ. வெங்கடேசன் - 9941121001
* தொழிலாளர் உதவி ஆய்வாளர் (மயிலாடுதுறை வட்டம்) கா. ஹேமா - 9626392971
* தொழிலாளர் உதவி ஆய்வாளர் (குத்தாலம் வட்டம்) ம. கார்த்திகேயன் - 9489257573
* தொழிலாளர் உதவி ஆய்வாளர் (சீர்காழி வட்டம்) இளஞ்செழியன் - 7904380453
* தொழிலாளர் துணை ஆய்வாளர் (தரங்கம்பாடி வட்டம்) தே. சம்பத் - 9994932042
ஜனநாயகக் கடமைக்கு ஒத்துழைப்பு
தனியார் நிறுவனங்கள் தங்கள் லாபத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல், நாட்டின் ஜனநாயகத் திருவிழாவான தேர்தலில் அனைத்துத் தொழிலாளர்களும் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
வேலை நிமித்தமாக வேறு ஊர்களில் தங்கியிருக்கும் தொழிலாளர்களும் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்க ஏதுவாக, நிறுவனங்கள் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் எவ்வித பாரபட்சமுமின்றி சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தொழிலாளர் உதவி ஆணையர் எச்சரித்துள்ளார்.
இந்த அறிவிப்பு மயிலாடுதுறை மாவட்டத் தொழிலாளர்கள் மற்றும் வணிக நிறுவன உரிமையாளர்கள் மத்தியில் பெரும் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.
Before You Go
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
ட்ரெண்டிங் செய்திகள்























