உலமாக்கள் நல வாரியத்தில் திருமண, கல்வி நிதியுதவி மற்றும் ஓய்வூதியம்: ஆன்லைன் விண்ணப்ப முறை முழு விவரம்!
முஸ்லீம் மதப் பணியாளர்களுக்கான 8 முக்கிய சலுகைகளுக்கு இனி ஆன்லைனிலேயே விண்ணப்பித்து நிதியுதவி பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை: தமிழ்நாடு அரசால் சிறுபான்மையின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு முன்னோடித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் அதற்கான புதிய ஆன்லைன் விண்ணப்ப முறை குறித்து மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;
2009 முதல் தொடரும் மகத்தான நலத்திட்டங்கள்
தமிழகத்தில் உள்ள பள்ளிவாசல்கள், மதரஸாக்கள் மற்றும் தர்காக்களில் பணிபுரியும் பணியாளர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், ‘உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம்’ செயல்பட்டு வருகிறது. இவ்வாரியத்தின் கீழ் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் பல்வேறு நிதியுதவிகளும், நலத்திட்டங்களும் தொய்வின்றி வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது இந்த வாரியத்தின் மூலம் உறுப்பினர்களுக்கு பின்வரும் முக்கிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
விபத்து ஈட்டுறுதி திட்டம்: பணியின் போதோ அல்லது பொது இடங்களிலோ விபத்து ஏற்படும் பட்சத்தில், அதற்கான விபத்து ஈட்டுறுதி உதவித்தொகை.
இயற்கை மரண உதவித்தொகை: எதிர்பாராத விதமாக இயற்கை மரணமடையும் உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் நிதியுதவி.
ஈமச்சடங்கு செலவுத்தொகை: உறுப்பினர்களின் இறுதிச் சடங்குகளை கண்ணியமான முறையில் செய்வதற்கு வழங்கப்படும் உடனடி நிதியுதவி.
கல்வி உதவித்தொகை: உறுப்பினர்களின் பிள்ளைகளின் உயர் கல்வி மற்றும் பள்ளிப் படிப்பை ஊக்குவிக்கும் வகையிலான கல்வி உதவித்தொகை.
திருமண உதவித்தொகை: உறுப்பினர்கள் மற்றும் அவர்களது பிள்ளைகளின் திருமணச் செலவுகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி.
மகப்பேறு உதவித்தொகை: பெண் உறுப்பினர்கள் மற்றும் ஆண் உறுப்பினர்களின் மனைவிகளுக்கு மகப்பேறு கால பராமரிப்பு மற்றும் மருத்துவச் செலவிற்கான நிதியுதவி.
மூக்குக் கண்ணாடி செலவுத்தொகை: கண் குறைபாடு உள்ள உறுப்பினர்கள் மூக்குக் கண்ணாடி வாங்குவதற்கான செலவுத்தொகை ஈடு செய்தல்.
முதியோர் ஓய்வூதியம்: தகுதியான வயதை எட்டிய மூத்த உறுப்பினர்களுக்கு மாதாந்திர முதியோர் ஓய்வூதியத் திட்டம்.
உறுப்பினராக பதிவு செய்ய யாருக்கெல்லாம் தகுதி உண்டு?
இந்த நல வாரியத்தில் இணைந்து அரசின் சலுகைகளைப் பெற பின்வரும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்;
1.சமூகத் தகுதி: விண்ணப்பதாரர்கள் கட்டாயம் முஸ்லீம் மதத்தைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
2.வயது வரம்பு: விண்ணப்பிக்கும் நாளில் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 60 வயது நிறைவு பெறாதவராகவும் (18 முதல் 60 வயதிற்குள்) இருக்க வேண்டும்.
3.பணித் தகுதி: பள்ளிவாசல்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ் இமாம்கள், அரபி ஆசிரியர்கள் மற்றும் அரபி ஆசிரியைகள்.
மோதினார்கள், பிலால்கள் மற்றும் இதர பணியாளர்கள். தர்காக்கள், அடக்கஸ்தலங்கள், தைக்காக்கள் மற்றும் ஆஷூர்கானாக்கள் ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்கள்.
முஸ்லீம் அனாதை இல்லங்கள் (Orphanages) போன்ற நிறுவனங்களில் பணிபுரியும் முஜாவர் உள்ளிட்ட அனைத்துப் பணியாளர்களும் இவ்வாரியத்தில் உறுப்பினராகப் பதிவு செய்ய தகுதி உடையவர்கள் ஆவர்.
டிஜிட்டல் மயமாகும் வாரியம்: இனி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!
இதுவரை இந்த நலத்திட்ட உதவிகளைப் பெறவும், புதிய உறுப்பினர்களாகப் பதிவு செய்யவும் நேரடியாக அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதனால் ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்க்கவும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் தற்பொழுது வாரியத்தின் செயல்பாடுகள் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.
அதன்படி, உறுப்பினராகப் பதிவு செய்தல் மற்றும் நலத்திட்ட உதவிகள் பெறுதலை எளிதாக்கும் வகையில் புதிய பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. தகுதியுடைய நபர்கள் இனி வரும் காலங்களில் www.uwpb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் எளிய முறையில் ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது தங்களது பணிச்சான்றிதழ், அடையாள அட்டை, வயது சான்று மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் ஆகியவற்றைச் சரியாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட நிர்வாகத்தை அணுகலாம்
இந்தத் திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், மேலும் கூறுகையில், "முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த தகுதியுடைய அனைத்துப் பணியாளர்களும் இந்த ஆன்லைன் வசதியைப் பயன்படுத்தி, உடனடியாக நல வாரியத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் அரசின் திட்டங்கள் நேரடியாகப் பயனாளிகளுக்குச் சென்றடைவது உறுதி செய்யப்படும்.
இது குறித்து மேலும் ஏதேனும் சந்தேகங்கள் அல்லது கூடுதல் விவரங்கள் தேவைப்படின், பொதுமக்கள் மற்றும் பணியாளர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் ‘மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலகத்தை’ (DBCWO) நேரடியாகத் தொடர்பு கொண்டு பயனடையலாம்" எனத் தெரிவித்துள்ளார்.
எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்து உலமாக்களும், இதர பணியாளர்களும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி, அரசின் நலத்திட்டங்களை தங்குதடையின்றி பெற்று பயனடையுமாறுமாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்























